Saturday 11 December 2021

பாரதியார் பிறந்தநாள் சிறப்புக் கவிதை

     வேடிக்கை மனிதரைப் போல்

           (அகவல் பா) 

தேடிச் சென்று, “தேன்தமிழ் பாரதி,

வேடிக்கை மனிதர் யார்யார்?”  என்றேன்.

விவரம் அறிய விருப்பொடு நின்றேன்

அவரே அதனை அழகாய்ச் சொன்னார்:

 

தினமும் தேடித் தின்பதை எண்ணி

மனத்தில் எண்ணி மகிழும் மக்கள்;

சிறப்பிலாக் கதைகள் சிற்சில பேசிப்

பிறப்பின் பயனைப் பேசா மாந்தர்;

தானும் கெட்டு வனமும் அழித்த

கானுறை குரங்கின் கதையைப் போல   

மனமிக வருந்தி மற்றவர் வாட

தினமொரு திட்டம் தீட்டும் மாந்தர்;       

திருந்தா திருந்து தின்றதைத் தின்று

பொருந்தா வாழ்வைப் போக்கில் வாழ்ந்து

வயதும் ஆகி வண்ணமும் குறைந்து

துயரப் பட்டுத் துன்பம் பெருகி

எமனுக் கொருநாள் இரையாய் மாறி          

அமரர் ஆகும் அறிவிலா மாக்கள்;

கொத்தித் திரியும் கோழியை ஒருநாள்

கத்தியைக் கொண்டு கழுத்தை யறுப்போர்;

அண்டிப் பிழைக்கும் ஆட்டையும் கூட  

ண்டியாய் ஆக்கி ஊன்வளர்ப் போர்கள்;

பாதியில் நச்சுப் பாம்பென நுழைந்த       

சாதியின் பெருமை சாற்றும் மனிதர்;

சாமப் போதிலும் திரியும் பேய்போல்

காம நுகர்வில் கருத்துடை யோர்கள்;        

நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும்

கொஞ்சமும் இல்லா கோதுடை மாந்தர்;  

கெஞ்சிக் கேட்டும் கிடைக்கா திருப்பின்

வஞ்சனை சொல்லும் வாய்ச்சொல் வீரர்;

தப்பும் தவறும் தம்நாவி லேற             

செப்பித் திரியும் செருக்குடை மாந்தர்; 

மேவிய தீங்கு மேலும் நடக்க              

ஆவி பெரிதென அடங்கிக் கிடப்போர்;

சொந்தச் சோதரர் துயருறக் கண்டும்

சிந்தை யிரங்காச் சிறுமதி யாளர்;                   

சிப்பாய் கண்டால் சிறுநீர் கழித்துத்

துப்பாக்கி பார்த்தால் தொடைமிக நடுங்கி    

கப்சிப் என்று கைவாய் மூட

எப்போதும் குனியும் எழுத்தறி வில்லார்;

கயவர் வழியில் கண்ணிலாக் குழந்தை    

வியப்பொடு சென்று விழுவதைப் போல

பொய்யை நம்பிப் பொறியில் சிக்கும்       

மெய்யறி வில்லா மக்கள் கூட்டம்;

விரியும் பட்டியல் விரிக்கின்என்றார்

விழிநீர் பெருக விடைபெற் றேனே.  

        

-கவிஞர் இனியன், கரூர்

துச்சில்: கனடா.

 

 

 

Thursday 9 December 2021

இருந்தாலும் இறந்தவர்களே

    வள்ளுவர் பலருடைய வாழ்வியல் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கிறார். அவர்களில் சிலரை வாழ்வோர் பட்டியலிலிருந்து நீக்கிச் செத்தவர் பட்டியலில் சேர்க்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் பலவாகும்.

Monday 6 December 2021

எல்லாம் பனி மயம்

     கனடா நாட்டில் இது மழைக்காலம். ஆனால் மழையை விட பனிதான் அதிகமாய்ப் பொழிகிறது. பனிப் பொழிவைக் காண கண் கோடி வேண்டும். அப்படி ஓர் அழகு. தேவர்கள் வானிலிருந்து மலர்கள் தூவ அது பூமாரியாய்ப் பொழிந்தது என்று புராணக் கதைகளில் படித்திருக்கிறோம். பனி மழையை நேரில் பார்த்தவர்தாம் அப்படி எழுதியிருக்க முடியும்! குண்டு மல்லிப் பூக்கள் வானிலிருந்து பரவலாக விழுந்து கொண்டே இருப்பதாய் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் இங்கே பெய்யும் பனிமழை.