Wednesday 17 February 2016

இதுவும் பாலியல் வன்முறைதான்

      வகுப்பிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் உடற்பயிற்சி வகுப்புக்குச் சென்றதும்,  மாதத்தில் ஒருமுறை இரண்டு ஆசிரியர்களை அனுப்பி புத்தகப் பைகளைச் சோதனை இடச்செய்வது வழக்கம்.

     தடை செய்யப்பட்ட பொருள்கள் கொண்டுவரப் படுகிறதா என அறிந்துகொள்ளவே இப்படிப்பட்ட சோதனைகள் நடக்கும். பேனாக்கத்தி,  பிளேடு, ஊசி, படிக்கக் கூடாத புத்தகங்கள், செல்போன், பான்பராக், பணம், நடிகர் நடிகையர் படங்கள் என தடை செய்யப்பட்ட பொருள்களின் பட்டியல் நீளும். சில சமயம் மேனிலை வகுப்பு மாணவர்கள் செல்போன் கொண்டுவந்து சிக்குவார்கள்; ஐந்நூறு ஆயிரம் என தண்டக் கட்டணம் செலுத்துவார்கள்.

    இதுவரை இல்லாத வழக்கமாக அன்று முதலாம் இரண்டாம் வகுப்புக் குழந்தைகளின் பைகளை சோதனையிடச் சொன்னேன். காக்கா கடி கடித்த கொய்யா காய், பாப்கார்ண், சாக்கலேட் ஆகியவை சிலரது பைகளில் இருந்தன. “ சார், இங்கே பாருங்கள், பணம்!” என்று கூறியபடியே இரண்டாம் வகுப்புப் பெண் குழந்தையின் பையில் இருந்த ஒரு புத்தகத்தின் நடுவிலிருந்து ஒரு புது நூறு ரூபாய் நோட்டை எடுத்தார் ஆசிரியர்.

   மறு நாள் வகுப்பு ஆசிரியையிடம் அது குறித்துப் பேசினேன். அடிக்கடி அவள் பணம் கொண்டு வருவதாகக் கூறினார். :என் கவனத்திற்கு ஏன் கொண்டுவரவில்லை?” என அவரைச் சற்றே கடிந்து கொண்டேன். அடுத்த நாள் அச் சிறுமியின் அப்பாவை வரச்சொல்லி விசாரித்தேன்.

     அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். கரூருக்கு வந்து கொசுவலை தயாரிப்பகத்தில் வேலை பார்க்கிறார். அவர் மனைவியும் அங்கேதான் வேலை செய்கிறார். பள்ளி விட்டதும் மாலையில் வீடு திரும்பும் அக் குழந்தை பக்கத்து வீட்டுக்குச் சென்று பெரிய டி.வி யில் படம் பார்ப்பதுண்டாம். அவ்வீட்டில் உள்ளோர் இவருக்கு மிகவும் தெரிந்தவர்களாம். நட்பு கருதி பிஸ்கட் வாங்கித் தின்ன அவ்வப்போது பணம் கொடுப்பார்களாம். அவ்வளவுதான் வேறொன்றுமில்லை என்று கூறிச் சென்றுவிட்டார்.

    உளவியலாளர் என்ற முறையில் அவர் சொன்னதில் எங்கோ இடிக்கிறதே என எண்ணிப் பார்த்தேன். அந்தக் குழந்தையை அழைத்து பேச வேண்டிய விதத்தில் பேசிப்பார்த்தேன். அவள் சொன்ன தகவலைக் கேட்டு நானும் வகுப்பாசிரியையும் அதிர்ச்சியில் உறைந்து போனோம். மறுநாள் அச்சிறுமியின் பெற்றோரை வரச் சொல்லி உரிய ஆலோசனைகள வழங்கினேன்.

    பக்கத்து வீட்டுக்கு டி.வி பார்க்கச்  செல்லும் அச் சிறுமியை அவ்வீட்டில் வசிக்கும் ஒரு இளைஞன் தனியே அழைத்து ஒரு முத்தம் கொடுப்பானாம்; உடனே ஐம்பதோ நூறோ பணமும் கொடுப்பானாம்.

    :அவன் எங்கே முத்தம் கொடுப்பான்?: என்று கேட்டேன். அந்த அண்ணன் என் :வாயில்தான் முத்தம் தரும்” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னாள்! என்ன கொடுமையடா என்று வருந்தினேன். குட் டச் பேட் டச் எவை என சொல்லிக் கொடுத்திருந்தோம். ஆயினும் ஒரு பயனும் இல்லை. அவன் கொடுக்கும் பணத்தில் தின்பண்டங்கள் வாங்கித் தின்பதோடு சக தோழியர்களுக்கும் கொடுப்பதாகக் கூறினாள்.

     ஒன்றும் அறியாத குழந்தையிடம் நடத்தப்பெற்ற அத்தகைய அத்து மீறல் அநியாயமானது; அருவருக்கத் தக்கது. நண்பனுக்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகம். பணத்திமிரின் இன்னொரு பரிமாணம். பிழைக்க வந்த குடும்பத்துக்குச் செய்யும் பெரும் கேடு.

  இங்கே ஒரு உளவியல் கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

   பெற்றோர் தம் குழந்தையிடத்தில் நேரம் ஒதுக்கிப் போதிய அன்பு காட்டாத போது பிறர் காட்டும் அன்பை எதிர்பார்க்கும்; ஏற்றுக் கொள்ளும். அந்த அன்பின் மறு பக்கத்தில் அசிங்கம் மறைந்திருப்பது அக் குழந்தைக்குத் தெரியாது. எனவே பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

     

4 comments:

  1. Very informative. An eye opener to parents.

    ReplyDelete
  2. I Appreciate the practice you adopt in your school.I dont know schools adopt yours.
    I wish you should share this with your HM /Principal friends who can adopt the system in their school (you follow in your school. Tu r really great)

    Best Teacher true to the word.

    ReplyDelete
  3. You have saved that child's future. Thank you!!

    ReplyDelete
  4. நல்ல பதிவாகப் பார்க்கிறேன். இன்றைய உலகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அறியாக் குழந்தையைக் கூட விட்டு வைக்காத உலகமாக இருக்கிறது. ஆண் குழந்தையை அடக்கி வளர்க்க வேண்டும். பெண் குழந்தைகளைப் பொத்தி வளர்க்க் வேண்டும் என பெரியோர்கள் தெரிவித்த கருத்தை அனைவ்ரும் பின்பற்ற வேண்டும்.

    ReplyDelete