Monday 21 March 2022

கூடு திரும்பிய குருவிகள்

    ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் காலடி வைக்கப் போகிறோம் என்னும் குறுகுறுப்பு உணர்வுடன் கனடா நாட்டின் மான்ட்ரியல் விமான நிலையத்தில் நானும் என் துணைவியாரும் தோகா செல்லும் விமானத்துக்காகக் காத்துக் கிடந்தோம்.

Friday 11 March 2022

புத்தகத் தயாரிப்பில் புதுமை

    அண்மைக் காலத்தில் புத்தகச் சந்தையில் குழந்தைகளுக்கான அழகிய நூல்கள் அணிவகுத்து வருகின்றன. பொதுவாக வழவழப்பான தாள்களில் வண்ணப் படங்கள் அச்சடிக்கப்பெற்ற புத்தகங்களைப் பார்த்திருக்கிறோம். அளவில் பெரியதாய் நீள் சதுர வடிவில் இருக்கும். எளிதில் கிழியாத தாள்கள், கெட்டி அட்டையிலான கட்டமைப்பு ஆகியவற்றுடன் இருக்கும் என்பதையும் அறிவோம்.

Wednesday 9 March 2022

என்று ஓயுமோ இந்தப் பனி மழை

      கனடா நாட்டில் மழைக்காலம் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகி விட்டன. இங்கே மழைக்காலம் என்றால் மழை பெய்யாது; மாறாகப் பனிதான் பெய்யும். பனியே நம்மூர் மழைபோல் பெய்வதால் மழைக்காலம் என அழைக்கிறார்கள் போலும்!

Thursday 3 March 2022

காட்டில் நடந்த திருமணம்

 

உலகக் கானுயிர் நாள்(மார்ச் 3)

 சிறப்புக் கவிதை

 

காட்டில் நடந்த திருமணம்



 

காட்டில் நடந்த திருமணம்

   கண்ணில் இன்னும் நிற்குதே

ஏட்டில் எழுதிப் பார்க்கிறேன்

   எழுத எழுத நீளுதே!

 

காட்டு யானைக் கூட்டத்தில்

   காதல் கொண்ட இரண்டுக்குக்

காட்டு ராசா தலைமையில்

   கலக்க லான திருமணம்!

 

பத்து நூறு மின்மினிப்

   பூச்சி தந்த ஒளியிலே

புத்தம் புதிய ஆடையில்

   பூனை ஒன்று பாடிட

 

பாட்டைக் கேட்டு மயில்களும்

   பைய வந்தே ஆடின!

நாட்டம் கொண்ட நரிசில

   நட்டு வாங்கம் செய்தன!

 

கெட்டி மேளம் கொட்டிட

   கிட்ட வந்த மான்களும்

ஒட்டித் தாளம் போடவே

   ஓடி வந்த முயல்களும்

 

இரட்டை நாத சுரங்களை

   இரண்டு புலிகள் ஊதிட

அரட்டை அடித்துக் குரங்குகள்

   அட்ட காசம் செய்தன!

 

ஓநாய் எல்லாம் வந்தன

   ஒன்று சேர்ந்து கொண்டன

கானாப் பாட்டுப் பாடியே

   கால்கள் வலிக்க ஆடின!

 

தாலிக் கட்டி முடிந்ததும்

   தடபுட லான பந்தியில்

வேலி தாண்டி மந்திகள்

   விரைந்து சென்று குந்தின!

 

மெல்ல வந்த கரடிகள்

   மேவும் வாழை இலைகளில்

நல்ல நல்ல உணவினை

   நகைத்த வாறு படைத்தன!

 

முப்ப தானை வரிசையாய்

   மூங்கில் செடிகள் நட்டன!

இப்ப டித்தான் திருமணம்

   இனிதே நடந்து முடிந்தது!

 

    -கவிஞர் இனியன், கரூர்

     துச்சில்: கனடா