Friday 30 July 2021

மனம் விரும்பும் மால்குடி கார்டன்ஸ்

    நீண்ட இடைவெளிக்குப்பின் நேற்று மாலை ஒரு புகழ்பெற்ற உணவகத்திற்குச் சென்றோம், அமெரிக்காவில் பெருந்தொற்றுத் தாக்கம் குறைந்துள்ள போதிலும் உணவகங்களில் வாடிக்கையாளர் வருகை வழக்கத்திற்கு மாறாகக் குறைந்தே காணப்படுகிறது.

Saturday 17 July 2021

யானையை விழுங்கிய மலைப்பாம்பு

    இன்று(ஜூலை 16) காலையில் எழுந்ததும் பாம்பு முகத்தில் விழித்தேன். புலனத்தில் அன்றாடம் ஆங்கிலத்தில் பதிவிடும் என் நண்பர் வலைப்பூவர் என்.வி.சுப்பராமன் அவர்கள் இன்று உலகப் பாம்புகள் தினம் எனக் குறிப்பிட்டு பல அரிய தகவல்களைத் தந்திருந்தார். தொடர்ந்து பாம்பு குறித்த சிந்தனையாகவே இருந்தேன்.

Tuesday 6 July 2021

யாதும் ஊரே யாவரும் கேளிர்

 

அமெரிக்க சுதந்திர தினத்தை அருமையாய்க் கொண்டாடினார்கள் நம் தமிழர்கள்.

   டெக்ஸாஸ் மாநிலத்தில் லிட்டில் எல்ம் நகரின் அழகிய லூவிஸ்வில் ஏரி. அந்த ஏரிக்கரையில் மரங்கள் சூழ்ந்த  வீடுகளின் அணி வரிசை. அவற்றில் இரு வீடுகளுக்கு மட்டும் வாசகர்களை அழைத்துச் செல்கிறேன்.

Saturday 3 July 2021

ஐயா எனக்கோர் ஐயம்

 

ஐயா, வணக்கம். எனக்கோர் ஐயம்

   உங்கள் மாணவன் மரு.பூர்ண சந்திரகுமார்.

   எனக்கு வந்த வாட்ஸ்அப் பதிவு ஒன்றில் "கிராமத்தில் விவசாயம் செய்ய நிறைய புதுப்புது கருவிகள் வந்துவிட்டன!. ஆள் தேவையில்லை. கிராமத்தில் இருக்கும் படித்த  இளைஞர்களே, கிராமத்தை விட்டு வெளியேறி நகரம் நோக்கிச் செல்லுங்கள். அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். படிப்பிற்கேற்ற வேலை தேடிக்கொள்ளுங்கள். நிறைய சம்பாதியுங்கள். மகிழ்ச்சியாய் வாழுங்கள்!" என்று கூறப்பட்டிருந்தது.

"உழந்தும் உழவே தலை", "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்", "உழுவார் உலகிற்கே அச்சாணி" என்கிறது வள்ளுவம். "இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது" என்றார் காந்தி. மனிதனின் அடிப்படை தேவைகளில் முதன்மையானது உணவு!.(ஓகிகள் விதிவிலக்கு). –என்றெல்லாம் நான் நீள நினைத்தபோது சில ஐயங்கள் ஏற்பட்டன என்ற முன்னுரையோடு தொடங்கிச் சில கேள்விகளைக் கேட்டார்.

 தொடர்வது அவரது கேள்விகளும் எனது விடைகளும்.   

மேற்கூறிய வாட்ஸ்அப் கூற்று விவசாயத்தை நலிவுபடுத்துவது போல் ஆகாதா?

  “நிச்சயமாக நலிவை ஏற்படுத்தும். போகிற போக்கில் எதையாவது புலனத்தில் தூவிவிட்டுப் போவது இன்று பலரது வாடிக்கை அல்லது வேடிக்கை. என்னிடம் வினாவைக் கேட்குமுன் நீயே விடையும் சொல்லிவிட்டாய். உலகத் தேரின் அச்சாணியாய் விளங்கும் உழவன் கை மடங்கினால் அதன் விளைவு ஆயிரம் கொரோனாவுக்குச் சமமாக இருக்கும்.”

 “படித்த இளைஞர்கள் எல்லாம் நகரப் பணி மட்டுமே குறிக்கோள் என்றால் விவசாயம் என்னாவது?

    “விவசாயம் பாழாகும். இன்றைக்குப் பட்டம் பெற்ற இளைஞர் பலர் நகருக்குச் சென்று நாயைப் பராமரிக்கும் வேலையைக்கூட நன்றாகச் செய்வார்கள். ஆனால் அப்பாவுடன் சென்று அரை நேரம் வயலில் ஏர் உழுவதை இழிவாய் நினைப்பார்கள். எனக்குத் தெரிந்த பல விவசாயக் குடும்பத்து இளைஞர்கள் இப்படி நகரை நோக்கி நகர்ந்த காரணத்தால் அவர்களுடைய விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாகி, எல்லைக்கல் முளைத்து எங்கும் காணப்படுகின்றன! அல்லது கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கின்றன. எப்போது நம் நாட்டு இளைஞர்கள் மேனாட்டுப் பண்பாட்டை ஏற்றார்களோ அப்போதே எளிமையாய்  விவசாயம் செய்யும் பெற்றோரிடமிருந்து விலகிப் போய்விட்டார்கள் என்று பொருள். பிறகு ஒரு கட்டத்தில் உணர்கிறார்கள், கண்கெட்டபின் சூரிய வணக்கம் செய்ய முயன்றவன் கதையாக.”

விவசாயம் மெல்ல மெல்ல தன் சிறப்பை இழந்து வருகிறதா?

“அப்படிச் சொல்ல இயலாது. நான் மேலே சொன்ன இளைஞர் கூட்டம் ஒருபக்கம் இருந்தாலும் படித்த இளைஞர் பலரும் அரசு வேலையைக்கூட உதறித்தள்ளிவிட்டு விவசாயத்திற்குத் திரும்பி வந்து தலை நிமிர்ந்து நடக்கிறார்கள்.”

  “மக்கள் தொகை பெருகுவதற்கு ஏற்ப, விவசாய நிலங்கள் குறைய, குறைய அல்லது விவசாயம் செய்ய ஆள் இன்மையால் மனிதன் பசியை வெல்லும் ஓக வாழ்விற்கு இயற்கையால் தள்ளப்படுகிறானா?

   “அப்படி நான் எண்ணவில்லை. விவசாயம் நலிந்தால் மனிதன் பட்டினி கிடந்து சாவான். பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். அவற்றுள் நீ குறிப்பிடும் ஓக வாழ்வும் அடங்கும். பசியை வெல்லும் ஓக வாழ்வு என்பது ஓர் உயர்ந்த தவநிலை. விவசாயம் நலிவதால் அது மனிதருக்கு வாய்க்காது.  

“மண்ணோடு மனிதனுக்கு உள்ள உறவு கருவியால் வருமா? கருவிகள் கொண்டு செய்யப்படும் விவசாயத்தால் பூரண ஆரோக்கிய வாழ்வு கிட்டுமா?

   “நீ குறிப்பிடும் கருவி டிராக்டர் போன்ற இயந்திரங்களைக் குறிக்கும் என நினைக்கிறேன். எந்தத் துறையிலும் நூறு விழுக்காடு இயந்திர மயமாவது நல்லது அன்று. ஒன்றைத் தெரிந்துகொள். இயந்திரங்கள் மனிதனை முழுச்சோம்பேறியாக்கி வருகின்றன. வருங்காலத்தில் இயந்திரத்தின் உதவி இல்லாமல் வீட்டிற்குள்ளேயும் நடக்கமாட்டான்.  இன்னும் பத்தாண்டுகளில் மனிதனை இயந்திரங்கள் அடிமைப் படுத்தி ஆட்டிப்படைக்கப் போகின்றன. அடிமையான மனிதன் அவற்றின் பேச்சைக் கேட்காதபோது இயந்திரங்கள் இரண்டு அடி கொடுக்கும் காலம் வரும்! இவனுக்கு அழிவு இவன் கண்டுபிடித்த கருவிகளால் மட்டுமே.

    அடுத்து நீ குறிப்பிடும் பூரண ஆரோக்கிய வாழ்வை இயந்திரங்கள் ஒருபோதும் தர இயலாது. பூரண ஆரோக்கிய வாழ்வுக்கு அன்புதான் அடிப்படை. அதை அன்பு நிறைந்த மனிதர்களால் மட்டுமே தரமுடியும். இன்று பார்க்கிறோமே, அன்புநிறை ஆசிரியர்களின் முகம் காணாமல், அவர்களுடைய இனிய சொல்லைக் கேட்காமல் இணையவழியில் கற்கும் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமையை.

  சரி. உன் கேள்விக்கு வருகிறேன். வேளாண் துறையில் இயந்திரம் என்பது உணவில் ஊறுகாயைப் போல அளவாய் இருத்தல் வேண்டும். மீண்டும் கலப்பைகள் வேண்டும். கலப்பையால்  உழுவதற்கு மாடுகள் வேண்டும். மாடுகளின் கழிவுகள் பயிருக்கு எருவாக வேண்டும். அதனால் யாவர்க்கும் நஞ்சில்லா உணவு கிடைக்க வேண்டும்.

  உடலுழைப்பும் பெருமையுடையது என உணர்த்தும் வகையில் ஏர் உழுவோர்க்கும் நாற்று நடுவோர்க்கும் அரசு சீருடை நல்க வேண்டும். உரிய ஊதியம் வழங்கிட ஆணை பிறப்பிக்க  வேண்டும். அவர்கள் அறுபது வயதை எட்டும்போது அரசு ஓய்வூதியம் வழங்க.வேண்டும்.

    இவை நடைமுறைக்கு வந்தால் நகரத்தில் பிறந்து வளரும் இளைஞர்கள் கூட கிராமத்திற்குச் சென்று இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் 10% பரப்பில் குளம் அமைத்து, 30% பரப்பில் அடர்வனம் அமைத்து, எஞ்சியுள்ள 60% பரப்பில் இயற்கை விவசாயம் செய்து, பல்லுயிர் ஓம்பி, தம்இல் இருந்து தமது பாத்துண்டு, அறவழியில் ஆனந்தமாய் வாழ்வார்கள்.”

 நீ கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியில் எனது வகுப்பறையில் மாணவனாய் இருந்தபோதும் நிறைய கேள்விகள் கேட்டாய். இப்போது நீ புகழ்மிக்க அரசு சித்த மருத்துவர் என்ற போதிலும், அதே தேடலுடன் கேள்விகள் கேட்டாய். நான் சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு வாய்ப்பளித்தாய்.

நன்றி. வாழ்க நலமுடன்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.