Monday 8 February 2016

அயலகத் தமிழரின் அன்புக் கொடை

   அறிவும் ஆற்றலும் மிகுந்த புகழ் நிறை மருத்துவர் டாக்டர் சங்கரபாண்டியன் அவர்கள். சிறுநீரகம் சார்ந்த மருத்துவத் துறையில்(Nephrology) கரை கண்டவர்.

     அமெரிக்காவில்  Tarrant Nephrology Associates என்னும் நிறுவனத்தை உருவாக்கி அதன் முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுகின்றார். பதினேழு டயாலிசஸ் மையங்கள், இருபதுக்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவர்கள், நூற்றுக்கணக்கில் ஊழியர்கள் என ஆலமரம்போல் பல்கிப் பெருகி அமெரிக்கர்களே வியக்கும் வண்ணம் வளர்ந்து நிற்கும் நிறுவனம் அது.

    அமெரிக்காவின் செல்வந்தர்களுக்கு இணையாக வளம்பெற்று வாழ்வதோடு, முயற்சியால் ஈட்டிய பெரும்பொருளின் ஒரு பகுதியை நல்ல பணிகளுக்கு நயந்தளிக்கும் நன்கொடையாளராகவும் திகழ்கிறார்.

      
   
அவர்தம் துணைவியார் டாக்டர் பங்கஜம் அவர்கள் புகழ் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர், கரும வீரர் காமராசரின் சிறைத்தோழர் வாடிப்பட்டி பழனிச்சாமி ரெட்டியார் அவர்களின் மூத்த மகள் ஆவார்.

     1970 இல் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றார். உடனே திருமணம். அடுத்த ஆண்டே அமெரிக்காவில் வேலை கிடைக்க, குடும்பத்தோடு வந்தவர், இப்போது என் பெரிய மகள் அருணா படிக்கும் ஆர்லிங்டன் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றியவர்.  அமெரிக்கக் குடியுரிமைப் பெற்று, இங்கேயே வாழ்வாங்கு வாழ்கிறார்.

    சுற்றத்தினரைப் பேணிப் பாதுகாத்தலே ஒருவர் செல்வம் சேர்த்ததன் பயன் என்பார் திருவள்ளூவர். 35 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் குடியேறி, முன் ஏர் போல பீடுநடை போட, பின் ஏர் போல உறவும் நட்பும் தொடர்ந்துவர, அணுகியோர்க்கு வழிகாட்டியாகவும் வளம் காட்டியாகவும் விளங்குகின்றனர் இந்த இமயம் தொட்ட இணையர்.

   
   
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வளாகத்தில் ஏழை எளிய மாணவ மாணவியர் படிக்க வசதியாக ஓர் உண்டு உறைவிடப் பள்ளி சிறப்பாகச் செயல்படுகிறது. அங்கே குழந்தைகள் தங்கிப் படிப்பதற்காக டாக்டர் பங்கஜம் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பல வருடங்களுக்கு முன்னால் ஒரு விடுதியைக் கட்டித் தந்தனர். தியாகி என்.வி.பழனிசாமி விடுதி எனப் பெயரிட்டார்கள்.

படங்களை இணைப்பில் காண்க:
https://photos.google.com/share/AF1QipN0FISVixslDC6fSlWUzkblQXU_2xsWdYtI5jgWdCg5zN0Ruk_hvZPw0gos6WpXoQ?key=bjkxWm1yVldNc3ppZHJlQWswZkQ3TmpwdVRrdnN3


   
    இப்போது குழந்தைகளின் எண்ணிக்கை பெருகியதால் வளர்ந்த ஆண் குழந்தைகள்  தங்குவதற்கு வசதியாக ஏற்கனவே இருந்த தரைத் தளத்தின் மீது முதல்தளம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா 29.1.16 அன்று சிறப்பாக நடைபெற்றது. முதல் தளம் கட்டுவதற்கான முழுச் செலவையும் டாக்டர் சங்கரபாண்டியனும் டாக்டர் பங்கஜம் அவர்களும் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள்.
   
    வேர்கள் அன்னிய மண்ணில் என்றாலும் கிளைகளை தாய்த் திருநாட்டின் மீது பரப்பி நடு ஊரில் இல்லை இல்லை நடு உலகில் பழுத்த மரமாக நிற்கும் இவர்கள் மற்ற அயலகத் தமிழர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்கள்.

   .....அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல்

என்னும் பாரதியாரின் கருத்துக்கு ஏற்ப இலட்சக் கணக்கில் கொடை நல்கிய இலட்சிய இணையரை வாழ்த்துவோம்; வணங்குவோம்.



4 comments:

  1. இணைப்பிற்கு செல்கிறேன் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    வணங்குவோம்

    ReplyDelete
  3. அறம் செய்ய விரும்பு என்ற வாக்கிற்கு இணங்க பொருள் ஈட்டுவது வெளிநாடு என்றாலும் உணர்வுகள் தமிழ்நாட்டு மக்களிடம் உள்ளது. டாக்டர் சங்கரபாண்டியன் அவர்களைப் பற்றி தங்களது அன்புள்ள அமெரிக்கா நூலில் படித்துள்ளேன், இருப்பினும் மீண்டும் அவர்களது சேவை மனப்பான்மையை அறிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள். அவர்களது தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அறம் செய்ய விரும்பு என்ற வாக்கிற்கு இணங்க பொருள் ஈட்டுவது வெளிநாடு என்றாலும் உணர்வுகள் தமிழ்நாட்டு மக்களிடம் உள்ளது. டாக்டர் சங்கரபாண்டியன் அவர்களைப் பற்றி தங்களது அன்புள்ள அமெரிக்கா நூலில் படித்துள்ளேன், இருப்பினும் மீண்டும் அவர்களது சேவை மனப்பான்மையை அறிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள். அவர்களது தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete