Thursday, 19 May 2016

வெற்றிகளும் வழிமுறைகளும்

   வெற்றிகளை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு,  அவற்றை அடைவதற்குரிய வழிமுறைகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் செயல்படுவதை அறிவுடையவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

நடந்து முடிந்த தேர்தலில் வேட்பாளர் பலரும் வழிமுறைகளைப் பற்றி யோசிக்காமல் எப்படியேனும் வெற்றியடைந்தால் சரி என்று செயல்பட்டிருப்பதை கட்சிக்காரர்கள் வேண்டுமானால் மறுக்கலாம்; நடுநிலையாளர்கள் எவரும் மறுக்கமாட்டார்கள்.

குறுக்கு வழிகளில் பெற்ற வெற்றிகளை நினைத்து எப்படி மகிழ முடியும்? படிப்பறிவில்லாத, படிப்பறிவிருந்தும் விழிப்புணர்வில்லாத  மக்களை ஏமாற்றி வெற்றியடைந்தவர்களின் நெஞ்சம் அவர்களைச் சுடாதா?

ஐந்நூறு ஆயிரத்துக்குச் சோரம் போகிறவர்கள் தமிழர்கள் என்னும் அவப்பெயர் வந்து விட்டதே. இலவசங்களை விரும்பும் இளித்தவாயர்கள் தமிழர்கள் என்னும் கூடுதல் அவப்பெயரும் வந்துவிட்டதே.

மனிதருக்கு மனிதர் பணிவு காட்டுவதில் தவறில்லை. ஆனால் முதுகெலும்பில்லாத புழுக்களைப் போன்று கூனிக்குறுகி, வளைந்து நெளிந்து பணிவைக் காட்டுவதில் தமிழர்க்கு நிகர் தமிழர்தாம் என்னும் களங்கமும் வந்து சேர்ந்து விட்டதே.

யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாதே; அதில் உள்ள உண்மைத் தன்மையை உணர்க என உரைத்த வள்ளுவரின் குறளைக் காற்றில் பறக்கவிட்டு, பரப்புரையையும் பசப்புரையையும் நம்பி ஏமாந்த  ஏமாளித் தமிழர், கம்பத்தில் பறக்க வேண்டிய கட்சிக் கொடிகளைக் கழுத்தில் சுற்றித்திரிந்த கோமாளித் தமிழர் என்றெல்லாம் கேரளா, ஒடிசா, மேற்குவங்க மக்கள் பேசுகிறார்களே!


ஐயகோ! அவமானம்! அவமானம்!

Sunday, 15 May 2016

தேர்தல் மரம்

    கட்செவி அஞ்சலில் கண்டதும் வரும். சில செய்திகள் நம் கருத்தைக் கவர்ந்து சிந்தனையைத் தூண்டும். அந்த வகையில் அண்மையில் வந்த இந்தச் செய்தி என்னை நிமிர்ந்து உட்காரச் செய்தது.

    “தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலை நினைவு கூரும் வகையில் ஒரு மரக்கன்று நடுவோம். ஐந்து ஆண்டுகள் கழித்து நட்ட மரம் அதிக பலன்கொடுத்ததா அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அதிக பலன் கொடுத்தாரா என்று பார்ப்போம்.”

     நல்ல விஷயமாயிற்றே என்று நண்பர்களோடு பகிர்ந்துகொண்டேன். எத்தனைப் பேர் அதைக் கவனித்தார்களோ? எத்தனைப் பேர் செடி நடுவார்களோ? நான் நட்டேன் ஒரு சரக்கொன்றை மரக்கன்றை.
tree seedling planted on the Eve of General election 2016

      எங்கள் தெருவில் இல்லத்திற்கு முன்னால் தெருவோரத்தில் ஆழ குழி தோண்டி சரக்கொன்றைச் செடியை நட்டேன். அது வளர்ந்து பூக்கத் தொடங்கிவிட்டால் கொள்ளை அழகாக இருக்கும். சரம் சரமாகத் தொங்கும் பொன்னிறப் பூக்கள் அனைவரையும் சுண்டியிழுக்கும்.

      அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நட்ட செடியையும், தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினரையும் கண்காணிக்க வேண்டும். செடியின் பெயர், தாவரவியல் பெயர், நட்ட தேதி போன்றவற்றையும், சட்டமன்ற உறுப்பினரின் பெயர், முகவரி, அலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, தேர்தலின்போது அவர் அளித்த வாக்குறுதிகள் ஆகியவற்றையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

      நட்ட செடி கிளை பரப்பி நிழல்தரும்போது நீரூற்றி எருவிட்டுப் பாராட்டுவோம். அவ்வாறே சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கு ஏதேனும் நன்மை செய்தால் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுவோம்.

      ஐந்தாண்டு முடிவில் நட்ட மரம் தந்த  பயனையும், உறுப்பினர் தந்த பயனையும் ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

      ஒவ்வோர் ஆண்டு நிறைவிலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, சட்டமன்ற உறுப்பினரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்க வேண்டும்.

1.       வேட்பு மனு தாக்கல் செய்யும்போது உங்கள் சொத்து எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு உள்ளது?

2.       உங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி நிதி எவ்வளவு? செலவின விவரம் தருக.

3.       சட்டமன்றம் எத்தனை நாள்கள் நடந்தன? நீங்கள் எத்தனை நாள் அவையில் இருந்தீர்கள்? சட்டமன்றத்தில் என்னென்ன கேள்வி கேட்டீர்கள்?

4.       தேர்தலின்போது தொகுதிக்குச் செய்வதாக அளித்த வாக்குறுதிகளில் எவ்வெவற்றை நிறைவேற்றினீர்கள்?

பார்க்கப் பார்க்கதான் மரம் வளர்ந்து பயன்தரும். மரம் மட்டுமல்ல; நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும்.

     நான் களத்தில் இறங்கிவிட்டேன். நீங்கள்?????????????



      

Tuesday, 10 May 2016

நூற்றாண்டு விழாக் காணும் வேளாளர் விடுதி

   பணி நிறைவுக்குப்பின் எங்காவது ஊர்ப்பயணம் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு ஏற்றார்போல் கோபியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது.