Saturday 1 September 2018

வம்பில் மாட்டிக்கொள்ளும் வைரமுத்து

   ஊடகக் குதிரைமேல் ஒய்யாரமாக சவாரி செய்யும் வைரமுத்து மீண்டும் ஒரு வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார். சென்றவாரம் கால்டுவெல் என்னும் மேலைநாட்டுத் தமிழறிஞரைப் பற்றி திருநெல்வேலியில் பேசியிருக்கிறார். அது இந்து தமிழ் நாளிதழில் 26.8.18 அன்று வெளிவந்துள்ளது.

    வழக்கம்போல் மோனை நயத்திற்காக செயற்கையான சொற்கலவைகளுடன் வாக்கியங்களை வடிவமைத்துள்ளார். அது அவரது பாணி. அதை விட்டு விடுவோம்.

    கால்டுவெல் அவர்களின் தமிழ்ப்பணிகளைப் பட்டியலிட்ட வைரமுத்துவைப் பாராட்டலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக அவரை இந்திரன் சந்திரன் என்று புனைந்திருப்பது செயற்கையின் உச்சக் கட்டமாகும். நம் தமிழ் மண்ணில் தோன்றிய தமிழறிஞர்களைக் குறைத்து மதிப்பிடுவதுபோல் அமைந்துள்ளது. கால்டுவெல் அவர்கள்தான் தமிழை, தமிழின் பெருமையை மீட்டெடுத்தார் என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தைத் தம் எழுத்து வன்மையால் நிறுவியுள்ளார் வைரமுத்து.
Robert Caldwell

    அசப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரைபோல் தோன்றினாலும் அது ஆய்வுக் கட்டுரைக்கு உரிய மரபு நெறியில் அமையவில்லை. தரவுகளை விடுபடாமல் காலவரிசையில் தருதல் வேண்டும். யார் இவற்றை எல்லாம் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று போகிற போக்கில் பொய்யுரைகளைப் புகுத்தியுள்ளார்.   “கட்டுரைக்கும் பொய் அழகோ?” என்னும் தலைப்பில் ஆய்வறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் வைரமுத்து கட்டுரைக்கு ஓர் எதிர்வினைக் கட்டுரை எழுதியுள்ளார். இதுவும் தமிழ் இந்து நாளிதழில் வெளியாகி உள்ளது.

    தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பெ.மணியரசன் அவரகள் முகநூலில் ஓர் மறுப்புக் கட்டுரையை எழுதி வைரமுத்துவை ஒறுக்கிறார். புலவர் இராமமூர்த்தி அவர்கள் “வரலாற்றில் புரட்டு செய்யும் வைரமுத்து ஓர் ஆய்வாளர் வேடம் போடுவது இப்போது புரிகிறதா?” என்று குறிப்பிடுகின்றார். அமெரிக்கா நாட்டில்  ஹூஸ்டனில் வசிக்கும் தமிழ்ப்பேரறிஞரும் நாசா விஞ்ஞானியுமான  நா. கணேசன் அவர்களும் வைரமுத்துவின் கருத்தை வழிமொழிய சான்றுடன் மறுக்கின்றார்.

   இப்படியாக அறிஞர் பெருமக்கள் சிலர் வைரமுத்துவின் கட்டுரையை உரசிப்பார்த்து அது வைரமன்று உப்புக்கல்தான் என்று உறுதியாய்ச் சொன்னாலும், வைரமுத்துவுக்கு என ஒரு கூட்டம் இருக்குமே,  அது வைரம் என்றும் முத்து என்றும் பாராட்டி மகிழ்வதை அக் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களால் அறிய முடிகிறது.

      பிறமொழி கலவாமல் தமிழ் இயங்க முடியும் என்று  கால்டுவெல் சொன்னதாகக்(?) குறிப்பிட்டு மகிழும் வைரமுத்து பிறமொழி கலவாமல் இக்கட்டுரையை ஏன் எழுதவில்லை? இவர் கையாளும் புத்திரன், பெளத்திரன் என்னும் சொற்கள் தமிழ்ச் சொற்களா?

   இப்படி அவ்வப்போது வைரமுத்து அவர்கள் ஒன்று கிடக்க ஒன்று சொல்வதால் ஒரு நன்மையும் உண்டு. அன்று ஆண்டாள் பற்றி எழுதியபோது அதுவரை ஆண்டாளின் எழுத்துகளைப் படிக்காதவர்கள் படிக்கத் தொடங்கினார்கள். அதற்கு முன் பாரதியார் பற்றிய கட்டுரையில் பாரதியார் கஞ்சா பயன்படுத்துவார் என்று எழுதியதால் எல்லோரும் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை வரி எண்ணிப் படித்தார்கள். இப்போது பலரும் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலைத் தேடிப்பிடித்துப் படிக்கத் தொடங்கிவிட்டார்கள்.


    எனவே, வைரமுத்து அவர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதுவாராக.

8 comments:

  1. இவர்கள் இவ்வாறெல்லாம் எழுதுவதால், என்னதான் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயற்கையாகவே வந்துவிடுகிறது போலுள்ளது. தங்களின் வித்தியாசமான சிந்தனையை ரசித்தேன்.

    ReplyDelete
  2. Decorated Lies , thy name is Vairamuthu !He lives in Utopia ! Don't disturb . Let him live alone there.How can we call a man who hurts sentiments of others deliberately? Pl.rename him.
    .

    ReplyDelete
  3. தங்களது கோரிக்கையிலும் நன்மை உண்டு என்றே தோன்றுகிறது ஐயா.

    ReplyDelete
  4. அனைத்திலும் ஒரு நல்லது உண்டோ...?

    ReplyDelete
  5. அன்று ஆண்டாள் பற்றி எழுதியபோது அதுவரை ஆண்டாளின் எழுத்துகளைப் படிக்காதவர்கள் படிக்கத் தொடங்கினார்கள். அதற்கு முன் பாரதியார் பற்றிய கட்டுரையில் பாரதியார் கஞ்சா பயன்படுத்துவார் என்று எழுதியதால் எல்லோரும் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை வரி எண்ணிப் படித்தார்கள். இப்போது பலரும் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலைத் தேடிப்பிடித்துப் படிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

    இதற்காகவாவது வைரமுத்துவைப் பாராட்டுவோம்

    ReplyDelete
  6. ஏதாவது ஒன்றைக் கொளுத்திப் போட்டால் மக்கள் அவல் போல் மெல்லுவார்கள் என்று நினைத்திருக்கலாம். விளம்பர யுக்திபோல ஒரு அணுகுமுறையை இவர் கடைபிடிப்பதாகத் தெரிகிறது.

    ReplyDelete
  7. தமிழாற்றுப்படை கால்டுவெல்லுக்கு
    செய்த துரோகம்…
    கவிஞர் வைரமுத்து உரையில்..
    கால்டுவெல் தன் இன ஆராய்ச்சியில் ஆதித்தமிழனாக
    கொண்டாடிய தமிழனை நீங்கள்
    வேட்டிக்கட்டிய விலங்குகளாகத் திரிந்த மக்கள் “
    என்று சொன்ன போது
    தாமிரபரணி மீண்டும் தலைகுனிந்தது.
    தமிழ்ச் சாதீ கால்டுவெல்லுக்கு இழைத்த துரோகம்
    தொடர்கிறது.
    கால்டுவெல் ஊர் திருத்தியும், சீர் திருத்தியும், பேர் திருத்தியும்
    ஆற்றிய பெருந்தொண்டுகளை மறைத்துவிட்டது மறதியின் புழுதி!”
    என்று கால்டுவெல் விழாவில் எங்கள் நெல்லை மண்ணில்
    பேசினீர்களே..
    இது... மறதியின் புழுதி அல்ல…
    கால்டுவெல்லின் ஆய்வும் கருத்தும் அரசியல் தளத்தில்
    பேசு பொருளாகி அவரவர் சுயலாபங்களுக்கு
    ஏற்ற வகையில் வெட்டியும் ஒட்டியும் கையாளப்பட்டது
    என்பது தான் உண்மை.
    கால்டுவெல்,
    எங்களை மன்னித்துவிடுங்கள்...
    காந்திக்கு துப்பாக்கி குண்டுகளைப்
    பரிசாகக் கொடுத்த
    மதவாதிகளை விடக் கொடியவர்கள் நாங்கள்.
    இன்றுவரை எல்லா மேடைகளிலும்
    உங்கள் பக்கங்களை
    வாசிக்கமாலேயே உரக்கப் பேசுவதற்காக
    எங்களை மன்னித்த மாமனிதரே..
    எங்கள் சாதித்தமிழன்
    அறிந்தே செய்த இந்த தவறுகளுக்காகவும் சேர்த்தே
    அவர்களை மன்னித்தருளும்.
    ஆமென்.
    (விலங்குகளாகத் திரிந்தவர்கள் என்று சொல்வதற்கும்
    சமூகம் விலங்கினும் கீழாக நடத்திய மனிதர்கள் என்று சொல்வதற்குமான அர்த்த வேறுபாடுகள் அறியாதவரா
    கவிஞர் வைரமுத்து.. ? !!) என் முகனூல் பதிவிலிருந்து ..

    ReplyDelete
  8. எது நடந்தாலும் நன்றாகவே நடக்கும், நன்மைக்கே என்ற கீதையின் மொழியாக எடுத்துக் கொள்ளலாமோ. எப்படியோ பலரும் அறியாதவற்றை இப்படியேனும் அறிய வைக்க உதவுகிறாரே என்றும் எடுத்துக் கொள்ளலாம்...

    ReplyDelete