Tuesday 28 May 2019

கருத்தைக் கவர்ந்த கருவூர் கலை விழா


  “கருவூர் கலை விழா நடக்கிறது. மாநில அளவில் ஓவியப் போட்டி நடத்துகிறோம். பரிசளித்துப் பாராட்டிப் பேச வேண்டும். வர இயலுமா?” என்று எனக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் தொலைப்பேசி மூலம் கேட்டார். நையாண்டி நறுக்காண்டி என்று அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டு குறித்த நாளில் குறித்த நேரத்தில் சென்றேன். சாக்குப் போக்குச் சொல்லி வாய்ப்பை மறுத்திருந்தால் ஒரு சிறப்பு மிக்க ஓவியத்தைக் காணும் வாய்ப்பு கிட்டாமல் போயிருக்கும் என இப்போது உணர்ந்தேன்.

    விழா சற்றுத் தாமதமாகத் தொடங்கியது. இடைப்பட்ட நேரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த போட்டியாளர்களின் ஓவியங்களையும், ஓவிய ஆசிரியர்கள் வரைந்த ஓவியங்களையும் பார்த்தேன். எல்லாம் அருமையாக இருந்தன. ஓர் ஓவியம் மட்டும் என்னைச் சுண்டி இழுத்தது. கண்கொட்டாமல் கால் மணி நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
  
என்ன அருமையான படைப்பு! ஓர் ஏழைப்பெண்  விறகு அடுப்பில் சமைக்கும் காட்சி அது. அவள் வறுமையில் வாடுகிறாள் என்பதை அவளுடைய கவலை தோய்ந்த முகம் காட்டுகிறது. எப்போது சோறு கிடைக்குமோ என்ற ஏக்கத்தில் அவளுடைய பெண் குழந்தை அவளை ஒட்டிக்கொண்டு நிற்கிறது. அதுவும் ஓர் இடுப்புத்துணி இல்லாமல் நிற்கிறது! இந்த ஓவியம் சொல்லும் செய்திதான் என்ன? நாடு சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பசியோடு படுக்கச்செல்லும் ஏழைக்குடும்பங்கள் கோடிக்கணக்கில் உள்ளனவே! ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு குறியீட்டு ஓவியமாகவே அதைப் பார்த்தேன். முதல் பரிசுக்கு உரிய ஓவியம் அதுதான் என்று என் இதயம் சொன்னது.

   விழா தொடங்கியது. எண்பது அகவையைத் தாண்டிய குறளகன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். ஒரு கருத்தரங்க உரைபோல் அவ்வளவு சிறப்பாக இருந்தது. பின்னர் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வில் வாழ்த்திப் பரிசளிக்கும்போது அவர்தம்  படிப்பு, வரைந்த ஓவியம் குறித்துக்  கேட்டேன். ரூபாய் ஐந்தாயிரம், கேடயம் என முதற்பரிசு பெற்ற பெண்ணிடம் பேசினேன். மேலே நான் குறிப்பிட்ட ஓவியத்தை வரைந்தவர் அவர் என அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். 

First Prize: S.Devika         Photo courtesy: P.Chezhian
ச.தேவிகா என்று பெயர். இரு குழந்தைகளைப் பெற்ற இளம் தாய். சென்னையில் அரசு நுண்கலைக் கல்லூரியில் படிக்கிறார். என் பாராட்டுரையில் மற்ற ஓவியர்களைப் பாராட்டிப்பேசி, இவரது ஓவியம் குறித்து விரிவாகப் பேசி, வருங்காலத்தில் நாடறியும் ஓவியராக விளங்குவார் என வாழ்த்தி என் உரைக்குத் திரையிட்டேன்.
    
M.S.Devasahayam
இந்த விழாவை இத்தனைச் சிறப்பாக நடத்தியவர்கள் கலைச்செம்மல் எம்.எஸ்.தேவசகாயம் நினைவு மையத்தினர். மறைந்த தேவசகாயம் அவர்கள் கரூர் நகராட்சிப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இராஜா ரவிவர்மா அவர்களுக்கு இணையாக வரைவதில் வல்லமை பெற்றவர். பணி நிறைவுக்குப் பின்னும் பலநூறு மாணவர்க்கு ஓவியம் வரைவதில் பயிற்சி அளித்தவர்.

    கரூரில் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றும் ஓவிய ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து தம் சொந்தப் பொருள்செலவில் ஆண்டுதோறும் தொய்வில்லாமல் இவ்விழாவை இனிதே நடத்துகிறார்கள்.

  நசிந்துவரும் ஓவியக்கலைக்கு அரசு உருப்படியாக எதையும் செய்யாத நிலையில் இவர்கள் செய்யும் பணிகள் மகத்தானவை என்பதில் மாற்றுக்கருத்து அறவே இல்லை.

8 comments:

  1. அருமையான ஓவியம் ஐயா. நிஜமாகவே அப்பெண் எதிர்காலத்தில் மிகச் சிறந்த ஓவியராக வருவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ச. தேவிகா அவர்களுக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்! திருமணம், இரு குழந்தைகள் என்று ஆனபிறகும் கூடக் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பயிற்சி பெறுகிறார் என்பது எத்தனை சிறப்பான விஷயம்.

    ஓவியத்திற்கான உங்கள் கருத்தும் மிக மிகச் சரியே.

    தங்கள் பகிர்விற்கும் மிக்க நன்றி.

    கீதா

    ReplyDelete
  2. ஓவியம் அருமை... தங்களின் விளக்கமும் தேர்வும் சிறப்பு...

    ReplyDelete
  3. Very beautiful picture!! Kudos to the amazing painter

    ReplyDelete
  4. நசிந்து வரும் ஓவியக் கலையினைக் காக்க மேற்கொண்டுவரும் முயற்சி போற்றுதலுக்கு உரியது
    ஓவியம் அருமை
    ஓவியருக்கு வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  5. ஓவியம் ஏழ்மையை அப்படியே பிரதிபலிக்கிறது, ஓவியர்க்கு வாழ்த்துக்கள், தங்களின் தேர்வும், விளக்கமும் அற்புதம் ஐயா, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தாங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மைதான் நண்பரே. 2 நாட்கள் மிகச் சிறப்பாக நடை பெற்ற அந்த கரூர் கலை விழாவில் கடலூர் மாவட்டத்தின் சார்பாக பங்கேற்ற ஓவிய ஆசிரியர் நான்.மிகச் சிறப்பான ஓவியங்கள்... தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஓவியர்களையும் , ஓவிய ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து
    ஓவியக்கலைஞர்களை சிறப்பிக்கவும் , ஓவியக்கலையினை மேலும் வளர்த்தெடுக்கவும் பெருமுயற்சிகள் எடுத்து நடத்தப்பட்ட அந்தக் கலை விழாவிற்குக் காரணகர்த்தா மறைந்த ஓவியர் M.S தேவசகாயம் ஐயா அவர்களின் மகன் திரு.ரவிக்குமார் அவர்களை வாழ்த்துகிறேன். இம்முயற்சி வருடந்தோறும் நடைபெற வேண்டும் என்பது எனது ஆவல்.

    ReplyDelete
  7. https://m.facebook.com/story.php?story_fbid=1830775937022283&id=100002696824415

    ReplyDelete
  8. I felt very happy in joining this function.I was very much delighted to meet my friends, it was a great opportunity to view many and various paintings from which i got plenty of ideas.This was great chance for my daughter to participate in the competition and win thethird prize. It is a privilege to my family too.The most happiest moment was meeting Mr.Pugazhenti , the eminent artist and taking a photo with him. I thank everyone for arranging this wonderful function program.

    ReplyDelete