Friday 15 April 2016

அடுத்தப் பிறவியிலும்.......

   என்னுடைய பணிக்காலத்தில் எத்தனையோ சோதனைகளைச் செய்து பார்த்துள்ளேன். விழாக்களைக் கூட ஆண்டுதோறும் வெவ்வேறு விதமாக நடத்துவேன். ஒரு மாணவன் ஓடிவந்து ஒரு மாற்றத்தைப் புகுத்த விரும்பினால் கூட ஏற்றுக் கொள்வேன்.
மாற்றி யோசித்து வித்தியாசமாகச் செய்வதற்கு ஒரு தனித்திறன் வேண்டும். ஒரே மாதிரியாகச் செய்வது எளிது. ஆனால் நாளடைவில் புதியன காணும் சிந்தனைத்திறன் மழுங்கிவிடும். செய்வதையே செய்வதற்கு நாம் என்ன  செக்கு மாடுகளா?
   கல்வியாண்டின் இடையிலே சுற்றுலா செல்வது வழக்கம். இதை மாற்றி பொதுத்தேர்வு முடிந்து சுற்றுலாவை அமைத்தால் என்ன என்று எண்ணி கடந்த சில ஆண்டுகளில் நடைமுறைப் படுத்தினேன். இரவு பகலாக கண்விழித்துப் படித்துத் தேர்வெழுதி சோர்ந்த மனநிலையில் உள்ள மாணவர்களுக்கு இத்தகைய post exam tours கூடுதலாகப் புத்துணர்ச்சி அளித்ததை அறிந்தேன்.
    
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதி முடித்துச் சற்றே பெருமூச்சுவிட்ட  முப்பத்து நான்கு மாணவ மாணவியரோடு, ஏழு ஆசிரிய ஆசிரியைகள், இரண்டு ஆயாக்கள், நான், என் மனைவி என ஒரு பெருங்குழுவாக ஒரு சொகுசுப் பேருந்தில் கரூரிலிருந்து இரவு பத்து மணிக்குப் புறப்பட்டோம். இரவு பன்னிரண்டு முப்பதுவரை குழந்தைகளின் ஆட்டம் பாட்டம் தொடர்ந்தது.
     இரவு மூன்று மணியளவில் நேந்திரங்காய் சிப்சுக்குப் புகழ் பெற்ற  வடக்கஞ்சேரி என்னும் ஊரில் வண்டி நின்றது. அங்கே இருந்தது ஒரு பாடாவரி கழிவறை; அதில் ஒன்றுக்குப் போகவே ஐந்து ரூபாய்! “என்ன சரியாக வெளிச்சம் கூட இல்லையே” என்று என்  மனைவி கேட்க, “உங்கள் ஊரில் இந்த வெளிச்சம் கூட இருக்காது” என்று கூறி உண்மையைப் போட்டு உடைத்தானாம் அந்தக் கழிவறை ஆள்.
     அதிகாலை ஐந்தரை மணிக்குக் கொச்சியில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் முன் பேருந்து நின்றது. எங்களுக்காக அறைகள் முன்பதிவு செய்யப் பட்டிருந்தன. இரண்டு மணி நேரம் உறங்கி எழுந்து குளித்து முடித்துத் தயாரானதும் சுவையான காலை  உணவு (தோசை, புட்டு முதலியன) அறைக்கே வந்தது. உண்டு மகிழ்ந்தோம்.
  
முதலில் ஒரு சிவன் கோவிலுக்குச் சென்றோம். மூலவரை என் மனக்கண்ணால் தரிசித்தேன். என் மனைவி மட்டும் நேரில் தரிசித்தாள். கேரளக் கோவில்களில் ஆண்கள் சட்டை, பனியனைக்  கழற்றிவிட்டுதான் உள்ளே செல்ல முடியும். தமிழ் நாட்டில் இந்த நடைமுறை சிதம்பரம் நடராசர் கோவிலில் இன்றும் உள்ளது.
    அடுத்து, அரபிக் கடல் உப்பங்கழி படகுத் துறையை நோக்கிச் சென்றோம். பேருந்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நீண்ட தூரம் நடந்து படகுத் துறையை அடைந்தோம். முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நடப்பது சிரமந்தான். அங்கு பேட்டரி கார் வசதி எதுவும் இல்லை.
    நூறு பேர் பயணிக்கக் கூடிய அழகிய அன்னம் வடிவில் அமைந்த இரண்டடுக்குப் படகு அது. அதன் நடுவில் ஒலி பெருக்கி வசதியுடன் கூடிய ஒரு சிறிய அரங்கம். சுற்றுலா அமைப்பாளர் எங்கள் குழுவுக்காக மட்டும் அப் படகைப் பிடித்திருந்தார்.
   
on top of the boat
சற்று நேரம் ஆர்வ மிகுதியால் மேல் தளத்தில் அமர்ந்த மாணவர்கள் வெய்யிலின் தாக்கத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் கீழ்த்தளத்திற்கு வந்து அமர்ந்தனர். படகு சீரான வேகத்தில் சென்றது.
   
மலையாளத்து நண்பர் ஒருவர் மைக்கை எடுத்து, தமிழ்த் திரையிசைப் பாடல்களை அருமையாகப் பாடினார்; ஆடினார். மாணவ மாணவியரை ஆட வரும்படி ஆர்வமூட்டினார். முதலில் ஆசிரியர்கள் முன்வந்து ஆட, ஒன்றிரண்டு மாணவர்களும் முன்வந்தனர். பிறகு எல்லோரையும் ஆட வைத்துவிட்டார்.
   
dancing while boating
கணக்குப் பாடத்தில் ஸ்டெப் போடத் தெரியாத ஒரு மாணவி திரைப்பாடலுக்கு ஏற்ற ஸ்டெப் போட்டு பலத்த கைத்தட்டலைப் பெற்றாள். தன்னிடம் அப்படி ஒரு திறமை இருப்பதை அவளே அப்போதுதான் உணர்ந்தாள்! கடைசியில் மாணவியரின் விருப்பத்தைத் தட்டமுடியாமல் நானும் என் மனைவியும் ஆட வேண்டியதாயிற்று. சில குறும்புக்கார மாணவர்கள் அதை வீடியோ எடுத்து வாட்ஸப்பில் போட்டுவிட்டனர்.
  
world's biggest cooking vessel
யூ டவுன் படகுத் துறையில் படகு நின்றது. அனைவரும் இறங்கி இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து யூதர்களின் பழங்கால ஆலயத்தைப் பார்த்தோம். ஒரு கடையில் ஒரு பெரிய  இருபது அடி விட்டமுள்ள உருளி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. உலகின் மிகப்பெரிய சமையல் பாத்திரம் அது என கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ளதாம்! பிறகு கேரள மன்னர்கள் தொடர்பான அருங்காட்சியகம், கேரள காவல் துறை தொடர்பான அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பார்த்தோம்.
  மீண்டும் படகு சவாரி தொடர்ந்தது. ஆடல், பாடல், இசை நாற்காலி, பலகுரல் என அரங்கம் களைகட்டியது. திடீரென என ஒரு போலீஸ் ரோந்து படகு படு வேகத்தில் வந்து எங்கள் படகை உரசிக் கொண்டு நின்றது; எங்கள் படகும் உடனே நின்றது. அந்த போலீசார் எங்கள் படகு ஆவணங்கள், நாங்கள் யார் எவர் என்பதையெல்லாம் சோதனை செய்தனர்.  எல்லாம் சரியாக இருந்ததால் வந்த சுவடு தெரியாமல் விரைந்தனர். அடுத்தப் பத்து நிமிடங்களில் புறப்பட்ட இடத்திற்குப் படகு வந்து சேர்ந்தது.படகுப் பயணத்தில் நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை.
    
ஒரு புகழ் வாய்ந்த கிருத்துவ தேவாலயத்தில் மதிய உணவுக்கு எற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரும்பியவர்கள் மீன் வறுவலையும் சுவைத்து மகிழ்ந்தனர். நானும் என் மனைவியும் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை; சிறப்பாகத் தருவிக்கப் பட்டிருந்த கேரளப் புட்டை உண்டு மகிழ்ந்தோம். அத் தேவாலயத்தின் உள்ளும் புறமும் அவ்வளவு தூய்மையாக இருந்தது. தேவாலயத்தின் முன்பகுதியில் நிறைய தென்னை சீமாறுகள் வைக்கப்பட்டிருந்தன. மாணவியர் சிலர் அவற்றை எடுத்துப் பெருக்கிக் கொண்டிருந்தனர். வேண்டியது நிறைவேற இப்படிச் செய்வது அங்கு மரபாம். இதை அறிந்த என் மனைவியும் சீமாற்றை எடுத்துப் பெருக்கினாள்.
    
Cherai beach
பின்னர் எல்லோரும் கடைத்தெருக்களில் சுற்றிவிட்டு கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கிக்கொண்டு திரும்பினர். மாலை மயங்கும் வேளையில் செராய் கடற்கரையை
 அடைந்தோம். கடல் நீர் கால்களை வருட மாணவர்கள் குதியாட்டம் போட்டனர். மாணவியர் மகிழ்ச்சியில் போட்ட கூச்சல் ஊரைக்  கூட்டியது. இதுதான் பேரலை என்றேன். பேருக்கு அலை என்றனர் மாணவியர். அவர்களுடைய விமர்சனத்தைப் பொறுக்காமல் உண்மையில் ஒரு பெரிய அலை வந்தது. அலை நீர் வடிந்ததும் பார்த்தால் பல பேருடைய செருப்புகளைக் காணவில்லை! அடுத்து வரும் அலை செருப்புகளைக் கொண்டுவந்து போடும் என எதிர்பார்த்தனர். பிறகென்ன புது செருப்புகளை வாங்கினார்கள்.
     அந்தப் பகுதியில் ஒரு கழிவறை கூட கண்ணில் படவில்லை. உணவு விடுதியில் கேட்டால் ஒரு ஆளுக்கு இருபது ரூபாய் என்றனர். அவசரம் வேறு வழியில்லாமல் கொடுத்துத் தொலைத்தனர். நம் நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இதில்தான் பெருத்த வேறுபாடு உள்ளது. சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் எப்பக்கம் திரும்பினாலும் தூய்மையான விசாலமான கழிப்பறைகள் அங்கு இருக்கும். கட்டணம் ஏதும் இருக்காது. God’s own country  என்று தம்பட்டம் அடிக்கிறார்கள். அங்கேதான் சுற்றுலாத் தலங்கள் மகா கேவலமாக உள்ளன. இது குறித்து கேரள முதல்வர் உம்மன் சண்டிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
    
Lulu mall
சுற்றுலாவின் நிறைவாக லூலூ மால் என்னும் பேரங்காடியைப் பார்த்தோம். மாணவ மாணவியர் முதல் முறையாக எஸ்கலேட்டர்களில் ஏறி இறங்கினர். ஒரு மாணவி பயத்தால் ஏறாமல் நின்றாள். அங்கிருந்த பெண் ஊழியர் வலுக்கட்டாயமாக ஏற்றி அனுப்பினார். பிறகு அம்மாணவி தொடர்ந்து ஏறி இறங்கினாள். எஸ்கலேட்டர் குறித்த பயத்தை உடனே போக்கியது நல்லது. ஒதுங்கி இருந்தால் வாழ்நாள் முழுவதும் அப் பயம் இருக்கும்.
   இரவு உணவு முடிந்ததும் கரூரை நோக்கிப் பயணம் தொடர்ந்தது. அந்தப் பேருந்தில் மைக் வசதி இருந்தது. சுற்றுலா பற்றிய தம் கருத்துகளைக் கூறுமாறு பணித்தேன். முதலில் சிலர் பேசத்  தயங்கினாலும் பிறகு அனைவரும் பேசி அசத்தினார்கள். இந்த feedback session நான் ஏற்பாடு செய்யும் சுற்றுலாக்களில் மிக முக்கியமானது.
    எப்போது தூங்கினோம் என்று தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்தால் காலை மணி 6.45. பள்ளி வளாகத்தில் பேருந்து மெல்ல வந்து நின்றது. சுற்றுலா அமைப்பாளரையும் ஓட்டுநர்களையும் கைகுலுக்கிப் பாராட்டினேன். சுற்றுலா ஏற்பாட்டில் உறுதுணையாய் இருந்த சுய முன்னேற்ற மேம்பாட்டுப் பயிற்சியாளர் நண்பர் முரளி அவர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி பாராட்டினேன்.
   நாற்பது  ஆண்டுகால ஆசிரியப் பயணத்தில் இச் சுற்றுலா பாதுகாப்பாகவும் முத்தாய்ப்பாகவும் முழுமையாகவும் அமைந்து மன நிறைவைத் தந்தது.
   இது போன்றதொரு சுற்றுலாவிற்கு இனி வாய்ப்பே இல்லை. காரணம் இம்மாத இறுதியில் பணி நிறைவு பெறுகிறேன்.
   அடுத்தப் பிறவி என இருந்தால் ஆசிரியராக அதுவும் தமிழ் ஆசிரியராகப் பிறக்க விரும்புகிறேன். அப்போதும் எனது சுற்றுலாப் பயணம்  தொடரும். வலைப் பூவில் பதிவும் தொடரும்.


12 comments:

  1. முழு ஆண்டு விடுமுறையில் சுற்றுலா
    புதுமைதான் ஐயா
    ஆசிரியர் என்றும் ஆசிரியர்தான்

    ReplyDelete
    Replies
    1. பதிவேற்றம் செய்த அடுத்த நிமிடம் உங்கள் பின்னூட்டம் வந்து விடுகிறது.
      நன்றி நண்பரே.

      Delete
  2. தேர்வுகள், பாடம் படிக்கவேண்டும், வருகைப்பதிவு முழுமையாக இருக்கவேண்டும் என்ற எவ்வித கவலையுமின்றி மன நிறைவாக இதுபோன்ற பயணம் அமையும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. I have visited Kochi more than 5 times. But when I gone through this article I am much impressed and have got an enthusiasm to visit it again. The Itinerary has been elaborated in such a wonderful manner. It is only possible by Dr.AG alone. It is really a gift of God. Dear Sir you may retire from your service. But you have no retirement till your last breathe. Keep on writing to educate, entertain, enlighten the young minds. Your birth has a reason. Feel Proud to join with you. Thanks a lot.

    ReplyDelete
  4. Well arranged. Some teachers are very strict. Inian our Sambanthi understands the youngsters and move with them like a friend and also a teacher.
    The purpose of a tour is to relax.,enjoy and gain knowledge about the area etc .I congrats Inian who always find time to arrange such programs effectively. He does not forget to take his wife also in the tour.
    Well done.
    R.Saravana perumal
    Sambanthi

    ReplyDelete
  5. Superb Anna. My humble suggestion to you is to have a family-friends circle meet for creating a platform in which we all (particularly you) can contribute something in education in coming years.

    ReplyDelete