Wednesday 25 May 2016

புதுமைப் பெண் கிரண் பேடி

     ஐ.பி.எஸ் என்று சொல்லப்படும் இந்திய காவல் பணி என்பது ஆண்களுக்கே உரியது என்ற போக்கை மாற்றிக் காட்டிய முதல் பெண்மணி கிரண் பேடி ஆவார். இந்தப் பெண் என்ன செய்யப் போகிறாள்  எனப் பலரும் தம் புருவங்களை உயர்த்தியபோது, மூக்கின்மேல் விரல் வைக்கும்படியாய் வீரதீர செயல்களைச் செய்தார் பேடி.

    தில்லி திகார் சிறை என்பது சிறைத் துறை அதிகாரிகளுக்கு திகில் தரும் சிறையாகவே   இருந்தது. அங்கு உயர் அதிகாரியாக பொறுப்பேற்ற கிரண் பேடி அதிரடி மாற்றங்களைப் புகுத்தி, ஆறே மாதங்களில் திகார் சிறையைச் சீரமைத்ததால், ஓர் ஐந்தாம் வகுப்புக் குழந்தைக்குக்கூட அவர் பெயர் அறிமுகம் ஆகிவிட்டது. விடுதலையான சிறைவாசியர் எல்லாம் மனம்திருந்தி சீர்மிகு வாழ்வை மேற்கொள்ள பல திட்டங்களை அறிமுகப்படுத்தி அவர்களுடைய நன்றிக்கு உரியவரானார்.

      பிறரைச் சார்ந்து நிற்காமல் தன் காலில் நிற்க வேண்டும் என்னும் கோட்பாட்டை  இளமையிலேயே கடைப்பிடிக்கத் தொடங்கினார். சிக்கல்களைச் சந்தித்தபோது அதன் பின்விளைவுகளுக்குத் தானே பொறுப்பேற்றார். வெற்றி என்றால் தான் காரணம் என்றும், தோல்வி என்றால் தன் கீழ் பணியாற்றுவோர் காரணம் என்றும் கூறும் அதிகாரத் தோரணை அவரிடம் எள்ளளவும் இருந்ததில்லை.

       ஒரு கரும யோகியைப் போல ஏற்றுக் கொண்டப் பணியைச் செவ்வனே செய்தாரே தவிர, பதவி வெறி கொண்டவராய் ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. அதனால்தான் ஒரு கட்டத்தில் தான் வகித்த உயர் பதவியைத் துச்சமென தூக்கி எறிந்துவிட்டுப் பொது வாழ்வுக்கு வந்தார்.

       நாட்டுப்பற்றும் சமூக சிந்தனையும் உடையவர் கிரண் பேடி. நம் நாட்டில் பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது படித்தவர்களுக்கே கூட தெரிவதில்லை. வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது எப்படிப் பழக வேண்டும் எப்படிப் பேச  வேண்டும் என்பதுகூட தெரியவில்லை. உலகம் முழுவதும் படிக்கவும் பணியாற்றவும் செல்லும் நமது நாட்டு இளைஞர்கள் இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டால்தான் நம் நாட்டின் மதிப்பு உயரும் எனக் கருதிய கிரண் பேடி ஓர் ஆங்கில  நூலை எழுதி வெளியிட்டார். வெளியான சில மாதங்களில் பல்லாயிரக் கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்னும் பொருள்பட BROOM AND GROOM என்ற ஆங்கிலத் தொடரை நூலின் தலைப்பாக வைத்தார். என்னே அவரது நுண்மாண் நுழை புலன்! பத்து நூல்களை வாங்கினேன்; அவ்வப்போது திருமணப் பரிசாக அளித்தேன்; ஒரு நூல் இன்றும் என் இல்ல நூலகத்தின் இணையற்ற நூல்களுள் ஒன்றாய்த் திகழ்கிறது.  இந் நூலை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட அனுமதி கேட்டு அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    இப்போது அவர்  புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.      நியமனம் பற்றிய செய்தி வெளிவந்ததும் நிருபர்கள் அவரைச் சந்தித்தனர். “உங்களுடைய பங்களிப்பு அங்கு எவ்வாறு இருக்கும்?” என்று ஒருவர் கேட்டார்.  “ஒரு குக்கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர், நெரிசல் மிகுந்த நாற்சந்தியில் கால்கடுக்க நின்று தன் பணியைச் செய்யும் போலீஸ்காரர் ஆகியோரைச் சந்தித்து அன்புடன் அளவளாவி, அவர்கள் சமுதாயத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணரச் செய்வேன்.” என்று விடையளித்தார். புதுச்சேரி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    அறுபத்து ஏழு வயதாகும் இவர் 1972-ஆம் ஆண்டு இந்திய காவல் பணித் தொகுதியில் சேர்ந்தவர். கைசுத்தம் மிகுந்த துணிச்சல் மிகுந்த அதிகாரி என்னும் புகழுக்கு உரியவர். எப்பொழுதும் இல்லாத அளவில் இப்போது கையூட்டுக் கலாச்சாரம் பரவலாகக் காணப்படும் புதுவைக்கு இவருடைய சேவை தேவை என ஓர் ஆங்கில நாளேடு எழுதியுள்ளது.

      புதுதில்லியில் பணியாற்றியபோது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நிறுத்தப்பட்டவை அமைச்சர்களின் கார்கள் என அறிந்தும் இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் போடச்செய்தவர். இதன் காரணமாக அவருக்கு கிரேன் பேடி(Crane Bedi) என்னும் பட்டப்பெயரும் ஏற்பட்டது!

      விருதுகளையும் பதவிகளையும் இவர் ஒருபோதும் தேடிப்போனதில்லை. ஆனால் அவை இவரைத் தேடிவந்து அணி சேர்க்கின்றன. அவர் பெற்ற விருதுகளில் ராமன் மக்ஸஸாய் விருது, ஐக்கிய நாடுகள் சபை விருது ஆகியன குறிப்பிடத் தகுந்தவையாகும்.

      அணுகுவதற்கு எளியவரான அந்த ஆளுநரை நம் மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் அழைத்து வந்து, பட்டமளிப்பு விழா உரையினை நிகழ்த்தச் செய்து, தமிழக இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் ஒரு புதிய எழுச்சியைத் தரலாம்.



4 comments:

  1. புதுச்சேரி செழிக்கட்டும் ஐயா

    ReplyDelete
  2. Very Bold lady .A woman of Principles. Thank u for writing about Broom and Groom book. I want to read it

    ReplyDelete
  3. நேர்மைக்கு என்றும் மரியாதையுண்டு.

    நீதிபதி ஓ.புகழேந்தி

    ReplyDelete
  4. நேர்மைக்கு என்றும் மரியாதையுண்டு.

    நீதிபதி ஓ.புகழேந்தி

    ReplyDelete