Wednesday 15 March 2017

வேட்டையாடும் வெறி நாய்கள்

     இப்படியும் நடக்குமா? நம்பத்தான் முடியவில்லை. ஆங்கில நாளிதழில் விலாவாரியாக எழுதியுள்ளார்களே. ஐந்து வெறி நாய்கள் சேர்ந்துகொண்டு அட்டூழியம் செய்திருக்கின்றன. அதுவும் நம் நாட்டின் தலைநகர் புதுதில்லியில்.

    அந்த நாய்களில் ஒரு வெறிநாய் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும் பொறியியல் பட்டதாரியாம். மற்றதெல்லாம் நாசமாய்ப்போன நாதாரிகளாம். ஊரை மேயும் ஊதாரிகளாம். எப்படி ஒன்று சேர்ந்தனவோ தெரியவில்லை.

    ஊருக்கு ஒதுக்குப் புறமாக குடிசைப் பகுதியில் வாழ்ந்து வந்த இருபத்து ஆறு வயதுப் பெண்ணை  ஏதோ  பார்ட்டி அதுஇது எனச் சொல்லி ஒரு நாய் தன் பைக்கில் அழைத்து வந்து பலமாடிக் குடியிருப்பு ஒன்றில் விட, சற்று நேரத்தில் எல்லா வெறி நாய்களும் சொல்லி வைத்தால்போல் அங்கே வர அந்தப் பெண்ணுடைய கதை கந்தல் ஆகிவிட்டதாம். “நான் இரண்டு குழந்தைகளின் தாய், தயவு செய்து விட்டு விடுங்கள்” என அவள் கெஞ்சி அழுதது அந்த வெறி நாய்களின் செவிகளில் விழவில்லை. என்னைக் கேட்டால் அவர்களுடைய பிறப்புறுப்புகளை அடியோடு அறுத்துக் காக்கைகளுக்குப் போடவேண்டும் என்பேன்.

      போலீஸ் விசாரணையில், “எனக்கு பைக்கில் அழைத்துச் சென்ற நாயை மூன்று மாதங்களாகத் தெரியும். நாணயமாகத்தான் அது பழகியது” என்றாளாம் அந்தப் பெண்.

    இந்தச் செய்தியை மனத்தில் போட்டுப் பிசைந்து கொண்டிருந்த சமயத்தில் நீதி வெண்பா என்னும் நூல் என் கண்ணில் பட்டது. அந் நூலை எழுதிய அந்தப் பெயர் தெரியாத  புலவர் எழுதியிருந்த ஒரு வெண்பா மேற்காண் நிகழ்வுடன் தொடர்புடையதாக இருந்ததைப் பார்த்தேன்.

    கொம்புளதற்கு ஐந்து குதிரைக்குப் பத்து முழம்
    வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே- வம்புசெறி
    தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
    நீங்குவதே நல்ல நெறி


      “கொம்புகளையுடைய மாடு, எருமை முதலியவற்றிடமிருந்து ஐந்து முழ தூரம் தள்ளி நிற்பது பாதுகாப்பானது ஆகும். குதிரை சில சமயம் கடிக்க ஓடிவரும். எனவே அதனிடமிருந்து பத்துமுழ தூரமாவது தள்ளி நிற்க வேண்டும். யானைக்கு எந்த நேரத்தில் மதம் பிடிக்கும் எனச் சொல்ல முடியாது. எனவே அதனிடமிருந்து ஆயிரம் முழம் தள்ளி நிற்க வேண்டும். இவை எல்லாவற்றையுமிட மோசமானவர்கள் பிறருக்குத் தீங்கிழைக்கும் கயவர்கள். இவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டுமானால் அவர்களின் கண்ணில் படாத தூரத்தில் சென்றுவிடுவதுதான் சிறந்த வழியாகும்” என்பது இப்பாடலின் பொருளாகும்.

     இவன் படித்தவனாகத் தெரிகிறான் என்றெல்லாம் பெண்கள் யாரையும் எளிதில் நம்பக்கூடாது. உறவுமுறை இல்லாத ஒருவனோடு தனியாக அந்தப்பெண் பைக்கில் சென்றதை அறிவுடைய செயல் என நான் ஏற்கமாட்டேன்.

    அன்றைக்கு நிர்பயா என்ற மருத்துவ மாணவி இதே புதுதில்லியில்  நடுநிசியில் மகளிர் எவரும் இல்லாத  பேருந்தில் ஏற, பேருந்தில் பயணித்த சில வெறிநாய்கள் அவளது கற்பைச் சூறையாடிக் கொலை செய்தது நாட்டின் பேரவமானமாக நிலைத்து நிற்கிறது.

      Invited troubles  என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல் அவர்களே வரவழைத்துக் கொண்ட சோகங்களாகும்.

      கயவர்களை இனம்காணும் திறனைப் பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையாமையாகும். அவர்களோடு பழகுவதால் பழிவருமே என நாணி ஒதுங்க வேண்டும்; ஒதுக்க வேண்டும்.

       ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்தில் பாரதியார், ‘ நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்” என பாடித் தொலைத்ததைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அச்சமாவது நாணமாவது எனப் பெண்கள் திரிந்தால் பால் திரிந்து வீணாவது போல அவர்தம் வாழ்வும் சிதைந்தொழியும்.

    அதே பாரதியார் பழையதும் நல்லனவுமான மரபுகளிலிருந்து பெண்கள் மாறக்கூடாது மீறக்கூடாது என்னும் பொருளில்,

     “திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
      செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்”

என்று பாடியிருப்பதைப் பெண்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

       பாலியல் சார்ந்த தொல்லைகள் வராமலிருக்க வேண்டுமானால் ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக்  கொள்ளவும், தன் சொற்களைக் காத்துக் கொள்ளவும் வேண்டும். இதை நான் கூறவில்லை; வள்ளுவர் கூறுகிறார்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

12 comments:

  1. நீங்கள் சொல்லும் தண்டனை போல் பல தண்டனைகள் கட்டாயப்பட வேண்டும்... அப்போது தான் ஓரளவு சமூகம் திருந்த வழி பிறக்கும்...

    ReplyDelete
  2. காமப் பசிக்கு பெண்கள் பலியாகும் போதெல்லாம் பெண்களையே குறைச் சொல்வது எப்படி நியாயம் ஆகும்.

    ReplyDelete
  3. பாலியல் கல்வியை முதலில் ஆண்களுக்கு சொல்லித்தர வேண்டும்

    ReplyDelete
  4. எதிர் பாலியல் இனத்தோடு தூரம் தள்ளி இருப்பது இருபாலருக்கும் நல்லது

    ReplyDelete
  5. கொம்புளதற்கு ஐந்து குதிரைக்குப் பத்து முழம்
    வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே- வம்புசெறி
    தீங்கினரை கண்ணில் தெரியாத தூரத்து (மரண தண்டனை)
    நீக்குவதே நல்ல நெறி

    ReplyDelete
  6. கோபத்தின் கொந்தளிப்பு உங்கள் எழுத்துக்கள். எத்தனைத்தான் நீங்கள் எழுதினாலும் இந்த வெறிநாய்களுக்கு ஏறாது.
    சரியான குற்றத்திற்குச் சரியான தண்டனை தேவை என்பதை சமுதாயம் உணரவேண்டும். அது நடக்குமா? நாம் இப்படித்தான் பேசுவோம். ஆனால் குற்றவாளிக்கு இளகி, பாதித்தவர்களின் நிலைமையை மறந்து, சாதகம்புரியவே பின்னர் பேசுவோம். நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  7. கோபத்தின் கொந்தளிப்பு உங்கள் எழுத்துக்கள். எத்தனைத்தான் நீங்கள் எழுதினாலும் இந்த வெறிநாய்களுக்கு ஏறாது.
    சரியான குற்றத்திற்குச் சரியான தண்டனை தேவை என்பதை சமுதாயம் உணரவேண்டும். அது நடக்குமா? நாம் இப்படித்தான் பேசுவோம். ஆனால் குற்றவாளிக்கு இளகி, பாதித்தவர்களின் நிலைமையை மறந்து, சாதகம்புரியவே பின்னர் பேசுவோம். நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  8. நீதிவெண்பா பாடலில் வருகிற மாடு,எருமை, யானை முதலியவை எல்லாம் மனித உருவில் வருகிறதே..அய்யா.. பத்தாடி தூரம் நகன்றாலும் தப்பிக்க முடியவில்லையே அய்யா....

    ReplyDelete
  9. ஐயா, பெண்களை மதித்து தெய்வமாக வழிபட்ட பாரத மண்ணில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை நமது கலாச்சார சீரழிவையே காட்டுகிறது. பெண்களை தாயாகவும்,சகோதரியாகவும், மகளாகவும் பார்க்கு எண்ணம் பலரிடமிருந்து பறந்தோடிப்போனது. இன்று இருக்கும் திரைப்படங்களும் மற்றும் தொலைக்காட்சித்தொடர்கள் ஒருபெண்னை எப்படி வல்லுறவுக்கு ஆட்படுத்துவது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. இது தீவினை நோயை மனதில் ஏற்படுத்துகிறது.இன்றைய சமுதாயத்தில் காதல் மற்றும் திருமணம் என்பது உடலுறவின் சடங்காகவே சித்தரிக்கப்படுகிறது. இதனால்தான் இன்றைய இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் தவறான வழியில் போய் தங்களை அழித்துக்கொள்கிறார்கள். மேலும் ஒரு வெட்கக்கேடான செய்தி என்னவென்றால் ஒரு பாலியல் மருத்துவர் அரைகுறை ஆடையில் பெண்களை அமரவைத்து வாசகர்கள் உடலுறவின் நேரம் திருப்த்தி பற்றி ஆலோசனை வழங்குகின்றனர். அவர்கள் வருமானத்திற்காக பல தவறான செய்திகள் மூலம் குடும்பச் சிதைவை ஏற்படுத்துகிறார்கள். உடலுறவு என்பது இனவிருத்தி என்பது மறைந்து அது வேறேதோ பேரிண்பம் எனும் வகையில் மிகைப்படுத்தப்பட்டு விளம்பரம் செய்யப்படுகிறது. இல்லம் என்பது உள்ளத்தோடு இருப்பது என்பது போய் உடல் சார்ந்தது என்ற மாயையை உருவாக்கியுள்ளது நவீன மருத்துவம். எனவே இது போன்ற நிலைகள் மாறவேண்டும் என்றால் அது பெற்றோர் வளர்ப்பிலும் ஆசிரியரின் துணையில் மட்டுமே நடக்கும். வேட்டை நாய்கள் காவல் நாய்களாக மாற்றப்படவேண்டும். அதற்கு சட்டங்களும் சற்று கடுமையானதாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. ஊருக்கு ஒதுக்குப் புறமாக குடிசைப் பகுதியில் வாழ்ந்து வந்த இருபத்து ஆறு வயதுப் பெண்ணை ஏதோ பார்ட்டி அதுஇது எனச் சொல்லி ஒரு நாய் தன் பைக்கில் அழைத்து வந்து பலமாடிக் குடியிருப்பு ஒன்றில் விட, சற்று நேரத்தில் எல்லா வெறி நாய்களும் சொல்லி வைத்தால்போல் அங்கே வர அந்தப் பெண்ணுடைய கதை கந்தல் ஆகிவிட்டதாம். “நான் இரண்டு குழந்தைகளின் தாய், தயவு செய்து விட்டு விடுங்கள்” என அவள் கெஞ்சி அழுதது அந்த வெறி நாய்களின் செவிகளில் விழவில்லை. தற்போது சமுகம் பணம் என்ற அடிடையில் உள்ளது அதனால் சமுகம் சீர்குலைந்துள்ளது...
    தவறு செய்தவனை தண்டணை அனுபவிக்கவேண்டும்...
    ஆண்களோ பெண்களோ அளவுக்கு அதிகமான பாசம் வைக்கின்ற பெயரில் தவறு செய்கின்றன...
    மாற்றம் தான் தனி மனிதனை உருவாக்கும்...
    உண்மை உழைப்பு உயர்வு..

    ReplyDelete
  12. பிறன் மனை நோக்கா

    ReplyDelete