Tuesday 20 June 2017

பார்த்து வியந்த பாராளுமன்றம்


இது நாங்கள் பார்த்து வியந்த மூன்றாவது நாட்டின் பாராளுமன்றம். முதலில் பார்த்தது நமது புதுதில்லியில் உள்ள பாராளுமன்றம். இரண்டாண்டுகளுக்குமுன் வாஷிங்டனில் பார்த்தது அமெரிக்க நாட்டின்பாராளுமன்றம்.  


  வேறு முக்கிய பணியிருந்ததால் முகப்பில் எங்களை இறக்கி விட்டுவிட்டு காரில் சிட்டாகப் பறந்தாள் மகள் புவனா.   என்னுடன் முகநூலில் அறிமுகமாயிருந்த நண்பர் நேரில் அறிமுகமாகி எங்களை அன்புடன் வரவேற்று பார்லிமெண்ட் ஹில் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழம்பெரும் கட்டடத்தைச் சுற்றிக் காண்பித்தார். அவர் பெயர் திரு.சி.முருகானந்தம். பொறியாளர். சொந்த ஊர் மதுரைப் பக்கம். பல நாடுகளில் பணியாற்றி இருபது நாடுகளைச் சுற்றிவந்து  நிறைவாக கனடா நாட்டின் குடிமகனாக இங்கே சொந்த வளமனையில் மனைவி, மகன், பீம் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வசிக்கிறார். இவரும் என் மகள் புவனாவும் ஒருசாலை மாணாக்கர்கள்; மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வெவ்வேறு காலக்கட்டத்தில் படித்தவர்கள்!

    அவர், சென்னையிலிருந்து வந்திருந்த அவருடைய நண்பர் கருணாநிதி மற்றும் அவர் துணைவியார்,.  நாங்கள் இருவர் ஆக ஐவரும் கடுமையான பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பிறகு கேத்தரின் என்னும் இளம்பெண்ணின் வழிகாட்டலில் பாராளுமன்றக் கட்டடத்தினுள் நுழைந்தோம். ஒரு சிறு வெண்கல மணி விட்டு விட்டு ஒலிப்பது போல் அழகான ஆங்கிலத்தில் அவள் விளக்கிச் சொன்னது அருமையாக இருந்தது. அவள் பேசியது கால் படி என்றால் அவள் முகம் காட்டிய உற்சாகம் முக்கால் படியாக இருந்தது. அவள் படிப்படியாக வரலாற்றை விளக்கிச் சொன்னது காதில் ஒரு படி தேனாய்ப் பாய்ந்தது.

   



இப் பெருங்கட்டடம் விக்டோரியா மகாராணியாரின் ஆணைப்படி கி.பி.1860 இல் தொடங்கி 1876 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாம். 1916 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் சேதமடைந்த இக் கட்டடத்தைப் போர்க்கால அடிப்படையில் அதன் பாதிப்பின் சுவடு தெரியாமல் சீரமைத்து முடித்தார்களாம். அதைத் தொடர்ந்து கட்டடத்தின் மீது ஓர் உயர்ந்த கோபுரத்தை நிறுவி அதற்கு அமைதிக் கோபுரம் எனப் பெயரிட்டார்கள். ஒன்பது தளங்களைக் கொண்ட இம் மாபெரும் கட்டடத்தில் மின்தூக்கி வசதி உள்ளது.

    பாராளுமன்றக் கூட்டம் நடைபெறும் அரங்கு தனியழகுடன் விளங்குகிறது. ஆட்சி மன்ற அரங்கும் சிறப்பான வடிவமைப்புடன் திகழ்கிறது. எங்கு பார்த்தாலும் அழகிய சுதைச் சிற்பங்கள்; மர வேலைப்பாடுகள். இவை எல்லாவற்றையும் தூக்கி விழுங்கும் வகையில் பாராளுமன்ற நூலகம் அமைந்துள்ளது. 600000 நூல்களைத் தங்க நிறத்தில் ஒளிரும் மரப்பேழைகளில் அடுக்கி வைத்துள்ள காட்சியை வார்த்தைகளில் வடிக்கமுடியாது. நூலகத்தின் மையப்பகுதியில் வெண்பளிங்கில் ஆன விக்டோரியா மகாராணியாரின் சிலை ஒன்று  காண்போரைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவார்ந்த விவாதங்களை முன்வைத்துப்  பேசுவதற்கான காரணம் என்னவென்று இப்போது புரிகிறது.




   அந்தந்தக் காலக்கட்டத்தில் பணியாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதம அமைச்சர்கள், ஆளுநர்கள் ஆகியோரின் படங்களை அழகுற அமைத்து அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும் எழுதி வைத்திருப்பது இவர்களிடத்தில் முறையாக ஆவணப்படுத்தும் பண்பாடு உள்ளது என்பதைக் காட்டுகிறது.

     
அடுத்து, மின்தூக்கி மூலமாக அமைதிக் கோபுரத்தின் உச்சியை அடைந்தோம். அங்கிருந்து ஒரு பறவை மேலிருந்து கீழே பார்ப்பது போல ஒட்டாவா நகரத்தைப் பார்த்து வியந்தோம். கரை புரண்டு ஓடும் ஒட்டாவா ஆறு, அதன் குறுக்காக அமைந்த அழகிய பாலங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், அமெரிக்கத் தூதரகம் என அனைத்தையும் காணமுடிந்தது.


அங்கிருந்து இறங்கி வரும்போது அக் கட்டடத்தின் ஒரு பகுதியாக இருந்த போர்வீரர் நினைவகத்திற்குச் சென்றோம். அங்கே மகா யுத்தங்கள் பற்றிய விவரக் குறிப்புகளைக் கொண்ட பொன்னேடுகள் சுவர்களை அலங்கரிக்கின்றன. நாட்டுக்காக போரில் உயிர்நீத்த வீரர்களின் பெயர்கள் அடங்கிய பெரிய புத்தகங்களைக் காட்சிக்கு வைத்துள்ளார்கள்.”இதோ இவ் வீரன் சக வீரர்களுடன் நெடுந்துயில் கொள்கிறான்” என்ற வாசகத்தைப் படித்தபோது என் தலைமீதிருந்த தொப்பியை எடுத்து கையில் வைத்தபடி தலைவணங்கி அஞ்சலி செலுத்தினேன். அப்போது நம் நாட்டுக்காக உயிர்நீத்த கட்டபொம்மனும், வாஞ்சிநாதனும், பகத்சிங்கும் என் நினைவில் தோன்றி மறைந்தனர்.

   
நிறைவாக, முகப்பில் அமைந்துள்ள ஓர் அணையா தீபத்தைப் பார்த்தோம். அது அணையா தீபம் மட்டுமன்று; அதிசய தீபமும் கூட. தண்ணீர் ஓர் ஊற்றிலிருந்து பெருக்கெடுக்கிறது. அதே ஊற்றிலிருந்து தீயும் எழும்பி கொழுந்து விட்டு எரிகிறது. நீரும் நெருப்பும் தோழமையுடன் விளையாடுவதைக் கண்டு வியந்தோம்.

     கண்டறியாதன கண்டேன் என்னும் திருநாவுக்கரசர் தேவார வரியினை என் வாய் முணுமுணுக்க அந்த இடத்தை விட்டு அகல மனமில்லாமல் அகன்றோம்.

கனடா நாட்டின் ஒட்டாவா நகரிலிருந்து

முனைவர் .கோவிந்தராஜூ

10 comments:

  1. ஒவ்வொரு நிலையிலும் எங்களை உங்களுடன் வாழ வாய்ப்புகள் கிடைத்தது

    ReplyDelete
  2. In every stage you take us to Canada to be with you.Thanks for your continued highlights.My computer do not co-operate to write in perfect Tamil.Sorry for the same

    ReplyDelete
  3. அற்புதக் காட்சிகளை தங்களால் நாங்களும் கண்டோம்
    வியந்தோம் ஐயா
    நன்றி

    ReplyDelete
  4. கிடைத்தற்கரிய வாய்ப்பினைத் தந்தீர்கள். நன்றி. நீரும் நெருப்பும் ஒரே இடத்தில் ஆச்சயர்யம்தான்.

    ReplyDelete
  5. ஒரு முழுமையான பயணத்தை உங்களுடன் தொடர்கிறோம்...,

    ReplyDelete
  6. ஒரு முழுமையான பயணத்தை உங்களுடன் தொடர்கிறோம்...,

    ReplyDelete
  7. ஒட்டாவாவிலும் கட்டபொம்மனையும் வாஞ்சிநாதனையும் எண்ணிப்பார்த்த தங்களது தேசப்பற்றுக்கு ஒரு சலாம்.
    அறிவார்ந்த விவாதம் செய்யும் கனடா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறிப்பிட்டு நம் மக்கள் பிரதிநிதிகளுக்கு மறைமுகமாக குட்டு வைத்ததற்கு மீண்டும் ஒரு சலாம்.

    ReplyDelete
  8. ஐயா, என்னைப் போன்ற இளைஞர்கள் இது போன்ற பல இடங்களுக்குச் சென்று சாதனை புரிய உங்கள் பதிவு மாபெரும் உற்சாகத்தையும், வலிமையையும் தருகிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  9. பாராளுமன்றம் என்றாலே பிரமிப்பை ஏற்படுத்தும். அதிலும் கனடா போன்ற மேலைநாடுகளில் மிகுந்த கலைநயத்தை உருவாக்குவார்கள். நூல்களை நேசிப்பர், வரலாற்றைப் பதிவு செய்வர். காலங்கள் கடந்தாலும் காட்சிப்படுத்துவதால் மீண்டும் நினைவுகளை ஏற்படுத்துவர். அருமையான பதிவு.
    முனைவர்.ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்

    ReplyDelete
  10. தங்களின் பயண கட்கடுரைகள் எங்களுக்கு எல்லையில்லா ஆர்வத்தை ஏற்படுத்துகிறது ஐயா.

    ReplyDelete