Wednesday 6 June 2018

பூட்டுப் போடலாம் பூம்புகார் நகருக்கு


   காவிரி புகும் பட்டினம் என்னும் காரணப்பெயர் பின்னாளில் காவிரிப்பூம்பட்டினம் ஆனது. காலப்போக்கில் அது மருவி பூம்புகார் ஆனது. பண்டையத் தமிழ்நாட்டின் பழைய துறைமுக நகரங்களில் மிகவும் பழமையானது பூம்புகார்.

     நம்மூர் வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் இரண்டாயிரம் ஆண்டுக்கால பழமையுடையது எனச்சொல்ல, வெளிநாட்டுக் கடல் தொல்லியல் ஆய்வாளர்கள் 9500 ஆண்டுக்கால வரலாறு இதற்கு உண்டு என்பதை ஆய்ந்தறிந்து அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறார்கள். ஆனால் நாம் அதன் அருமை பெருமை தெரியாமல் முழுத் தேங்காயைப் பெற்ற மூட நாய்களாய்த்  திரிகிறோம்.

     ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் ஆட்சியில் இருந்த அரசு எடுத்த முன்முயற்சியால் பூம்புகாரின் வரலாறு வெளி உலகுக்குத் தெரியும் வகையில் முப்பத்து மூன்று ஏக்கர் பரப்பில் சிலப்பதிகாரத் தரவுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

   
  சிலம்பு வரிகளுக்குச் சிற்பக்காட்சிகள் கொண்ட சிலப்பதிகாரக் கலைக்கூடம், பாவை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், சிலம்பு வடிவில் சிங்காரக் கூடங்கள், சங்கு, சிப்பி வடிவில் அமைந்த விருந்தினர் இல்லங்கள், கொற்றம் எனும் விழாமேடை, பல்மரக்கா, கண்ணகி, மாதவி, இளங்கோவடிகள், கரிகால் சோழன் ஆகியோருக்கு அழகுச் சிலைகள், செயற்கை நீரூற்றுகள், தோரண வாயில்கள், வசதியான கழிவறைகள்  என்பன அவை.

    அவையெல்லாம் காண்போரைக் கவரும் வகையில் நிறைவடைந்து 1975ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. ஒப்பந்ததாரர்கள் ஒழுங்காகச் செய்தார்கள் என்பதற்குச் சான்று, 26.12.2004 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலைக்கு அவை தாக்குப்பிடித்து நின்றன என்பதுதான்.

      ஐயகோ! இன்று இவை எல்லாம் தம் பொலிவிழந்து, வலுவிழந்து, வடிவிழந்து, வண்ணமிழந்து சிதைந்து, சீர்கெட்டுக் கிடக்கின்றன. கண்ணகியும், மாதவியும் பிளாஸ்டிக் குப்பைகள் சூழ, புழுதி படிந்த கோலத்தில், இப்படி நான் அழுது புலம்பும்படியாய் நிற்கின்றார்கள். பாவை மன்றம் பாழடைந்து பார்ப்போரிடத்தில் அச்சமூட்டுகிறது. இலஞ்சி மன்றமும் அப்படியே. பகல் நேரத்தில் கூட அங்கே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்குச் சற்றும் பாதுகாப்பில்லாத இடங்களாக உள்ளன.
சமூக விரோதிகளின் பாசறையாய்......


பூம்புகார்க் கடற்கரை

இலஞ்சி மண்டபத்தின் இழிநிலை

இதுவே இப்படி!

நெஞ்சு பொறுக்குதிலை.......


இருட்டறையில் உள்ளதடா கலைக்கூடம்

மாசுகளின் மத்தியில் மாதவி


   
பெயர்ப்பலகை அருமை!
குப்பையோடு குப்பையாய் குலமகள் கண்ணகி
ஒரு தொல்லியல் அருங்காட்சியகம் பெயரளவில் செயல்படுகிறது. அரிதான வியக்கத்தக்கக் காட்சிப்பொருள்கள் அதிகம் இல்லை. மேலும் குறிப்புகளைக் கையால் எழுதி வைத்திருக்கிறார்கள். தொல்லியல் துறைக்கு ஒரு கணினி வாங்கக் கூட காசில்லையோ?

  ஒன்றுக்கும் உதவாத சுற்றுலா அலுவலகம் ஒப்புக்குச் செயல்படுகிறது. “பூம்புகாரில் புத்த விஹார் எங்குள்ளது?” என்று கேட்டேன். அங்கிருந்த ஊழியர் பேந்த பேந்த விழித்தார்! “பூம்புகார் பற்றிய கையேடு கிடைக்குமா?” என்றேன். இல்லை என்று தலையாட்டினார்.

          சிலப்பதிகாரக்கூடம் போதிய வெளிச்சமில்லாமல் பார்க்க சகிக்கவில்லை. நுழைவுக் கட்டணத்தை வக்கணையாக வாங்கிக்கொள்கிறார்கள். ஆண்டிற்கு ஐம்பது இலட்சம் வசூல் ஆகிறதாம். ஆனால் அதன் பராமரிப்புக்காகப் பத்து இலட்சம் கூட செலவிடப்படுவதில்லை. குப்பை மலையெனக் குவிந்து குடக்கிறது. எப்போதாவது பூம்புகார்க் கல்லூரி மாணவ மாணவியர் வந்து கொஞ்சம் தூய்மைப் பணி செய்துவிட்டுப் போவார்களாம்.

    ஸ்வச் பாரத் திட்டமெல்லம் இங்கு இல்லை.  கழிப்பறை வசதிகள் ஏராளம். ஆம் திறந்த வெளியில்! வெட்கம்! வெட்கம்!

       நேற்றுதான்- அதுவும் உலகச் சுற்றுச் சூழல் தினத்தில் நான் பூம்புகாருக்குச் சென்றேன்.  இந்த நாளை ஒட்டியாவது அரசு முன்வந்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றியிருக்கலாம்.

      இப்படி ஓர் ஆட்சியினர் உருவாக்கியதை மற்றொரு ஆட்சியினர் கண்டுகொள்ளாமல் விட்டு, தானே அழியவிடும் போக்கு தமிழ்நாட்டில் மட்டும் காணப்படும் தனி நிகழ்வாகும்.      துறைசார்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இதற்குத் துணை போகிறார்களே என்பதுதான் வேதனையிலும் வேதனை. அவர்கள் எடுத்துரைக்க வேண்டாமா? இடித்துரைக்க வேண்டாமா?

      ஆக, நான் இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இனி வருங்காலத்தில் சுற்றுலாப் பயணியர் எவரும் பூம்புகார் நகருக்குள் புகார்.

7 comments:

  1. அன்றைய அரசு பார்த்ததுப் பார்த்துக் கட்டமைத்த பூம்புகார் அருங்காட்சியகத்தின்
    இன்றைய நிலை பற்றியது இந்தப் பதிவு. இக்குறைபாடு அரசின் காதுகளுக்கு எட்டுமா? இன்றைய அரசின் தொல்லியல் துறையை கவனிக்கும் அமைச்சர் மாணபுமிகு மாஃபா பாண்டியராசன் குறைகளைச் செவிமடுக்கும் தன்மை வாயந்தவர் என்று கேள்விப்பட்டேன். அவர் பார்வைக்கு பூம்புகார் அருங்காட்சியகம் பற்றிய இந்தப் பதிவை ஒரு மனுவாக அனுப்பினால் பலனளிக்கும் என்று நினைக்கிறேன். தங்கள் கருத்து என்ன?

    ReplyDelete
  2. Poompuhar which I visited with my friends was totally different from today's.The beauty is missing. We poor Indians could live on nostalgia alone. Long live Indian politics and beaurocracy !

    ReplyDelete
  3. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
    நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்...

    ReplyDelete
  4. தமிழகத்தின் மிக முக்கியமான பௌத்தச் சான்றாக விளங்குகின்ற, ஆயிரமாண்டு கால புத்த விகாரையின் எச்சங்கள் தம் தடமின்றி சிறிது சிறிதாக அழிவதை ஆய்வின் முதல் களப்பணி சென்ற 1993 முதல் கடந்த 25 ஆண்டுகளாகப் பார்த்து வேதனை அடைந்து வருகிறேன் ஐயா.

    ReplyDelete
  5. வேதனைதான் ஐயா. குப்பைகளாகக் கிடக்கிறதே. முக்கியமான வரலாற்றுச் சிறப்பு கொண்ட இடம் அல்லவா. உங்களுக்கு கனடா நினைவுக்கு வந்தாதா ஐயா?

    துளசிதரன், கீதா

    ReplyDelete