Monday 4 February 2019

திருடாதே பாப்பா திருடாதே


  சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு மாலை நேரத்தில் ஓய்வாக நடந்து சென்றபோது ஒரு பேரங்காடி கண்ணில் பட்டது. ,மோர் ஸ்டோர் நமது ஸ்டோர், என எழுதப்பட்ட ஒரு பதாகை தொங்கியது.

  உள்ளே நுழைந்து அரிசி, பருப்பு, காய்கறி விலை நிலவரங்களை நோட்டமிட்டேன். சின்ன வெங்காயம் கரூரில் கிலோ 22 ரூபாய். இந்தக் கடையில் 50 ரூபாய்!

  இரண்டு சிறுவர்கள் பத்து பன்னிரண்டு வயது இருக்கலாம், எதை எதையோ எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் ஒரு பொருளை வாங்கியபின் பில்லைத் தந்தார்கள். அதில் ஒரு விவரத்தையும் படித்துப் புரிந்துகொள்ள இயலவில்லை. பொடி எழுத்துகளில் தெளிவற்ற விதத்தில் இருந்தது. இது குறித்து கடை மேலாளரிடம் பேசலாம் எனச் சென்றேன். தனியறையில் அடிப்பதற்குக் கையை ஓங்கிக்கொண்டிருந்தார். நான் சற்றுமுன் பார்த்த இரண்டு சிறுவர்களும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். சாக்லேட்டுகளைத் திருடி கால்சட்டைப் பைகளில் நிரப்பிக்கொண்டதைக் காமிரா மூலம் பார்த்த ஊழியர் அவர்களைப் பிடித்து மேலாளர்முன் நிறுத்திவிட்டார்.
photo courtesy: Google

    நான் பேசாமல் வெளியில் வந்து நெடுநேரம் நின்று கொண்டிருந்தேன்.

 அச் சிறுவர்கள் வெளியில் வந்ததும் பேசிப் பார்க்கலாம் என நினைத்தேன். ஒரு மணி நேரம் காத்திருந்தும் அவர்கள் வெளியில் வந்தபாடில்லை. வெளியில் நின்ற கடைக்காவலரிடம் அதுபற்றிப் பேச்சுக் கொடுத்தேன். இது போன்ற திருட்டுகளால் ஒவ்வொரு மாதமும் இருப்பைச் சரிபார்க்கும்போது ஏறக்குறைய மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள சாக்லேட்டுகள் இருப்பில் குறைகிறதாம்.

    திருடுவது என்பது விலங்கினத்தின் இயல்பூக்கங்களில் ஒன்றாகும். அது குழந்தைப் பருவத்தில் தலை தூக்குவதும் இயல்புதான். திருடுவதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி வள்ளுவர் கள்ளாமை என்னும் தனி ஓர் அதிகாரத்தில் விரிவாகப் பேசுகிறார். அவற்றைப் பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளிடத்தில் அடிக்கடி எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக, பள்ளித் தலைமையாசிரியர்கள் காலை வணக்க வகுப்பில் இது குறித்துப் பேச வேண்டும்.

  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியுள்ள

திருடாதே... பாப்பா திருடாதே... 
திருடாதே... பாப்பா திருடாதே...

வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே


சிந்தித்துப் பார்த்துச் செய்கையை மாத்து
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ

தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா

அது திரும்பவும் வராம பாத்துக்கோ

என்னும் பாடல் வரிகளை நினைவூட்டுவதும் நல்லது.



4 comments:

  1. அருமையான பாடல் ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. சூழலைக் கூறி, பாடலைப் பகிர்ந்த விதம் அருமை ஐயா.

    ReplyDelete
  3. நல்ல பதிவு ஐயா. பாடலும் அருமை நிகழ்வைச் சொன்ன விதமும் சிறப்பு.

    துளசிதரன், கீதா

    கீதா: பொதுவாகவே நான் இது போன்ற கடைகளில் பொருட்கள் வாங்குவதில்லை ஐயா. விலை ரொம்பக் கூடுதல். மட்டுமின்றி பல அன்றாண்டங்காய்ச்சிகள் அம்மாக்கள் பாவம் காய்களைப் பரப்பி வைத்துக் கொண்டு விற்பார்கள் அங்கு விலை நமக்கு ஏற்றாற் போலும் இருக்கும் அவர்களுக்கும் நாம் வாங்குவதால் பயன் என்பதால் சந்தையில் அல்லது இப்படியான அம்மாக்கள் விற்பவற்றில் தான் வாங்குவது....

    ReplyDelete