காதில் வந்து விழுந்த செய்தியை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.
சுவாசிக்கும் மூச்சுக்காற்று கெட்டு விட்டதால் மூச்சு முட்டுகிறதாம். அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாள்கள் விடுமுறையாம். காற்றில் கலந்த தூசு மற்றும் உலோகத் துகள்களைப் போக்க ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளிக்க முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ளாராம். இந்தக் கூத்தெல்லாம் எங்கே நடந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? வேறு எங்கே? நம் நாட்டின் தலைநகரான புது தில்லியில்தான்!
இந்தச் சிக்கல் குறித்து இப்படி என் வலைப்பூவில் 2017ஆம் ஆண்டு எழுதினேன்.
இப்போது கனடாவிலிருந்து, காற்று மாசு குறித்து எழுதுகிறேன்.
திடீரென்று என்னை மாப்பிள்ளை அழைத்தார். “மாமா, இன்னும் இரண்டு நாட்களுக்கு வெளியில் தலை காட்டாதீர்கள். நடைப்பயிற்சி எதுவும் வேண்டாம்” என்று அன்புக்
கட்டளை - இல்லை இல்லை - அதிரடிக்
கட்டளை இட்டார்.
மேலும் அவர் கூறினார்: “கனடா நாட்டரசு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒட்டாவா பெருநகருக்கு அருகிலுள்ள மலைக்காடுகளில் காட்டுத் தீப்பற்றிக் கட்டுக்கடங்காமல் உள்ளதால் காற்றில் கண்ணுக்குப் புலப்படாத கரித்துகள்கள் கலந்து காற்றின் தரம் குறைந்துவிட்டது. பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.. அதனால்தான் உங்களை வெளியே போக வேண்டாம் என்று சொன்னேன்.”
Picture created by AIநடைப் பயிற்சிக்கெனப் போட்டிருந்த ஷூ, ஜேக்கட் போன்றவற்றைக் களைந்துவிட்டு, மடிக்கணினி முன் அமர்ந்து பணி செய்கின்றேன்.
இந்தச் சூழ்நிலையில் அவசர வேலையாக வெளியில் செல்வது எப்படி? என் மனம் எதையெதையோ கற்பனை செய்தது.
இன்னும் சில ஆண்டுகளில் மூச்சுக்காற்று விற்பனை சூடு பிடிக்கப் போவது உறுதி. எங்கே பார்த்தாலும் இப்போது தண்ணீர்க் குடுவைகள் விற்பது போல ஆக்சிஜன் குடுவைகள் விற்கும் காலம் விரைவில் வரும். மூக்கில் பொருத்தப்படும் வென்ட்டிலேட்டர்களும் காற்றுக் குடுவைகளூம் பெட்டிக் கடைகளில் விற்கப்படும். இரண்டையும் வாங்கி காற்றுக் குடுவையைத் தோளில் மாட்டிக்கொண்டு, வென்ட்டிலேட்டரை மூக்கில் பொருத்திக்கொண்டு திரிய வேண்டியதுதான். பார்த்தால் இராமாயணத்தில் வரும் அனுமாருக்கும் நமக்கும் பெரிய வேறுபாடு இருக்காது!
வாகனப் பெருக்கத்தால் காற்று கெட்டுவிட்டது. உலகமயமாதல் என்னும் கோட்பாட்டால் பெரிய தொழிற்சாலைகள் பல்கிப் பெருகி அவற்றிலிருந்து வெளிவரும் கரும்புகையால் காற்று மாசடைந்துவிட்டது. அறுவடைக்குப்பின் கிடைக்கும் வேளாண் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்துவதாலும், குன்றெனக் குவிந்து கிடக்கும் நகராட்சிக் குப்பைகள் கொளுத்தப்படுவதாலும் உருவாகும் ‘டையாக்சின்’ என்னும் நச்சு வாயு காற்றில் கலக்கிறது. காட்டுத் தீப்போன்ற இயற்கைப் பேரிடர்களாலும் காற்று மாசடையும் நிலை உள்ளது. சிலசமயம் இது செயற்கைப் பேரிடர் என்று சொல்லத் தக்கவகையில் மனிதர் செய்யும் தவறுகளால் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் காட்டுத்தீ ஏற்பட்டதற்குக் காரணம் மனிதத் தவறே என்று கூறப்பட்டது.
நாம் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் குளிர் சாதனங்கள் மூலமாக வெளிவரும் தீமைதரும் பசுங்குடில் வாயுக்கள் பலவும் காற்றில் கலக்கின்றன.
மின் தகனக் கூடங்களை நாடாமல், திறந்த வெளி எரி மேடைகளில் பிணங்கள் எரிக்கப்படுவதால் காற்று சீர்கெட்டுப் போகிறது.
இப்படி வரிந்து கட்டிக்கொண்டு காற்றைக் கெடுப்பவர்கள் மனிதர்களே. பிறகு “குத்துதே குடையுதே” என்று ஓலமிடுவதும் அவர்கள்தாம்.
“காற்றுத் தேவனை வணங்குவோம்
அவன் வரும் வழியில் சேறு தங்கலாகாது
நாற்றம் இருத்தலாகாது
அழுகின பண்டங்கள் போடலாகாது
எவ்விதமான அசுத்தமும் கூடாது.”
என்பது மகாகவி பாரதியாரின் அறிவுரை.
இது
நம் அறிவுக்கு எட்டுமா
என்பதே நான் விடுக்கும் வினா.
முனைவர் அ.கோவிந்தராஜூ,
கனடாவிலிருந்து.
சுயநலம் மிக்க மனித இனம் முன்னோர்கள் சொன்ன வழிமுறைகளை துறந்ததால் வந்த வினை
ReplyDeleteகாற்றை விட நற் கடவுளேது?!
ReplyDeleteமனிதனை விட சுயநல சூறாவளியேது!?
மாசுபடுத்தியும் மாறா தன்மையினாய் மீட்டு வாழ்வளிக்கும் வளி !, நம் விழி