கனடாவில் என் மகளுடன் இருக்கும் காலத்தில் அவ்வப்போது நூலகத்திற்குச் செல்வதுண்டு. இம்மை உலகத்திலிருந்து மறுமை உலகத்திற்குச் சென்ற மனமகிழ்ச்சியில் அரைநாள் பொழுதை அங்கே கழிப்பதுண்டு.
அண்மையில் நான் சென்ற நூலகத்தின் பெயர் பீவர்ப்ரூக்
பொது நூலகம். இரு தளங்களைக் கொண்ட பெரிய நூலகம். ஒரு சொகுசு விடுதிக்குள் வந்து விட்டோமோ
என நினைக்கும்படி இருக்கைகள் அமைந்திருந்தன.
அங்கே ஓரிடத்தில் காப்பி தயாரிக்கும் இயந்திரம் இருந்தது. வாசகருக்குச் சோர்வு
ஏற்பட்டால் காப்பி தயாரித்துக் குடிக்கலாமாம்!
வயதானவர்கள் கண் சோர்வில்லாமல் படிப்பதற்கென பெரிய எழுத்துகளில் அச்சடிக்கப்பட்ட
நூல்கள் கொண்ட பகுதி என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அங்கே இருந்த சிறுவர் நூலகம் மிகப் பெரிதாக இருந்தது. அவர்கள் உயரத்தில் அமைந்த சிறிய அடுக்குகளில் புத்தகங்கள் அழகுற அடுக்கப்பட்டிருந்தன. அவர்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு செயல்பாடுகள் அரங்கேறும் பெரிய கூடம் உள்ளது. நான் சென்றபோது ஒரு கதைசொல்லி ஏதோ ஒரு கதையை படு உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். குழந்தைகள் காதுகளை மட்டுமல்ல வாயினையும் திறந்து வைத்துக்கொண்டு கேட்டார்கள்.
அந்த நூலகத்தில் இருந்த இன்னொரு பகுதியைப் பார்த்துச் சிலைபோல் நின்றேன். வேறு
எந்த நூலகத்திலும் நான் பார்த்திராத காட்சி அது.
ஒரு மேசை. அதன் மீது ஒரு திறந்த பெட்டி இருந்தது.
அதில் வெங்காயம், கேரட், வெள்ளரி போன்ற காய்கறிகள் இருந்தன. நூலகத்திற்குள் காய்கறிகளுக்கு
என்ன வேலை என யோசித்தபோது மேலே இருந்த அறிவிப்பு என் கண்ணில் பட்டது.
“உங்களிடம் உள்ள காய்கறி, பழங்களை எளிய மக்களுக்குக் கொடுத்துதவலாமே” என்பதுதான் அந்த அறிவிப்பு!
நூலகரிடம் விசாரித்தேன். “வசதியும் கொடையுள்ளமும் உடையவர்கள் தரமான காய்கறிகளைக் கொண்டுவந்து
இப் பெட்டியில் வைப்பார்கள். நூலகத்திற்கு வரும் நிதிவசதி குறைந்த மக்கள் அவற்றில் கொஞ்சம் எடுத்துச் செல்வார்கள். இப்படி ஒரு நாளைக்கு குறைந்தது பத்து கிலோ காய்கறிகள்
கைமாறுகின்றன” என்று கூறி என்னை வியப்பில் ஆழ்த்தினார்!
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; அப்படி ஈத்துவக்கும்
இன்பமே இன்பம் என்பார் வள்ளுவர். அதை அந்த நூலகரிடம் விளக்கிச் சொல்லி, அவருக்குப்
பாராட்டு தெரிவித்தேன்.
அடுத்தமுறை அந்த நூலகத்திற்குச் செல்லும்போது ஒரு கிலோ வெங்காயத்துடன் செல்ல
வேண்டும் என்னும் உறுதிப்பாட்டுடன் வெளியில் வந்தேன்.
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.
The purpose of life is to love and live for others. This place loves and lives for others . its like a mother because she involves other in her word itself
ReplyDeleteVery good information.
ReplyDeleteIt is a lesson for us to implement in india too
Super sir.... பள்ளிப்படிப்பை முடித்த பிறகும் எனது ஆசிரியருடன் கலந்துரையாடுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐயா நான் தங்களின் மாணவன். தங்களது பதிவுகளால் அமெரிக்காவில் எவ்வாறு வாழ்க்கை இருக்கிறது என்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது.அதுபோல் நம் நாட்டிலும் வரவேண்டும் என ஏங்க வைக்கிறது.நீங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து பதிவிடுகிறீர்கள் மிக்க நன்றி.
ReplyDeleteகு.குமார் ஆசிரியர் கொங்கர்பாளையம்.