Sunday, 9 November 2014

அன்பெனும் அமிழ்தம்

                                                                                                         
     அன்பு ஆற்றல் மிக்கது.

          ஒரு பிளவுபட்ட குடும்பம் குழந்தையின் அன்பால் ஒன்று சேர்வது உண்டு

  . காதலனுக்குமண்ணில் மாமாலையும் ஒரு சிறுகடுகாய்தோன்றக் காரணம் காதலி காட்டும் அன்பின் வலிமைதான்.

          மனைவி காட்டும் தன்னலமற்ற அன்பு, நெறிகெட்டுச் செல்லும் கணவனை நல்வழிப்படுத்தும் ஆற்றல் மிக்கது.

        இன்றளவும் குடும்பம் என்னும் கட்டுக்கோப்புக் குலையாமல் இருப்பதற்குக் காரணம் அன்னை பொழியும் அன்பின் வலிமை தான்.

    குடும்பத் தலைவனாய் விளங்கும் தந்தை ஓய்வின்றி உழைப்பதும் ஆழ்மனதில் கிக்கும் அன்பின் பேராற்றலால்தான்.

   சாதி, மதம், இனம் பாராமல் அன்பு காட்ட வேண்டும். மற்ற எல்லா உயிர்களிடத்தும் அன்பைப்  பொழிய வேண்டும். பகைவரையும் மன்னித்து அன்பு செய்ய வேண்டும்.  இந்த அன்பு நெறியைத்தான்நின்னோடு ஐவரானோம்என்று குகனையும், ‘நின்னோடு அறுவரானோம்என்று அனுமனையும், ‘நின்னோடு எழுவரானோம்என்று விபீடனையும் இராமன் தம்பியராக்கிக் கொள்வதாய் கம்பன் படைத்துக்காட்டுகிறான். இவ்வன்பு நெறி தழைக்குமாயின் உலகமாந்தார்  உவகையுடனும் அமைதியுடனும் வாழலாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சே. இக்கூற்று அன்புக்கும் பொருந்தும். தாயும் தந்தையும் தம் குழந்தைகளிடத்து அளவுக்கு அதிகமான அன்பைச் செலுத்தி, அதாவது செல்லம் கொடுத்து, குழந்தையின் போக்குக்கு விட்டு,  பின்னர்  துன்பப்படுவதுண்டு.

    கண்மூடித்தனமான அன்பு என்று ஒரு வகையும் உண்டு. இது மிகவும் ஆபத்தானது. இது காலப்போக்கில் வெறியாக மாறிவிடும். மொழியின் மீது அன்பு இருக்க வேண்டும். மொழி வெறியாக மாறக்கூடாது. மதத்தின் மீது ப்ற்றுபு இருக்கலாம். அது ஒருபோதும் மதவெறியாக மாறுதல் கூடாது.

    நம் நாட்டில் இல்லறம் என்பது வற்றாத அன்பின் அடிப்படையில் அமைவது. ஆயினும் அவ்வற்றாத ஊற்று வரதட்சணைச் சிக்கல்களால் வறண்டு போவதைப் பார்க்கிறோம். செல்வ மகளையும் கொடுத்து, செல்வத்தையும் கொடுக்க ஏழைத் தந்தையால் இயலுமா? பாரதியார் கண்ணம்மாவை நோக்கி, அன்பொழுக செல்லமடி நீ எனக்கு சேமநிதி நானுனக்கு என்று கூறுவதைப் போல, அருள் காட்டி ம் புரியும் இளைஞர் கூட்டம் பெருக வேண்டும். வள்ளுவர்  கூறுவது போல், அன்பு பண்பாகவும், அறம் பயனாகவும் உள்ள இல்லங்கள் பெருக வேண்டும். கணவனின் மனமும் மனைவியின் மனமும் அன்பால் இணைக்கப்பட வேண்டும். மனமுறிவுதான் மணமுறிவுக்குக் காரணம்.

   கிணற்று நீர் இறைக்க இறைக்கத்தான் ஊறும். அதுபோல் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட காட்டத்தான், அன்பு பெருகும். பிற உயிர்களிடத்து அன்பு காட்டி, அதனால் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்க வேண்டும். இவ்வின்பத்தை அனுபவித்தவர்  தாயுமானவர். 
           “அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால்
           இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமேஎன்று கூறுகிறார்.

        “காக்கை குருவிகள் எங்கள் ஜாதிநீள்
          கடலும் மலையும் எங்கள் கூட்டம்
 என்று அஃறிணைப் பொருள்களிடத்தும் அன்பு காட்டியவர் பாரதியார்.

  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அன்பின் மிகுதியால் நெஞ்சு  நெக்குருகிப் பாடியவர் வள்ளலார்.

   ஒரு முறை காந்தியடிகளின்  உதவியாளர்  மீராபென் விடுத்த வேண்டுகோளின்படி, ஆசிரமத்தில் வசித்த  இளைஞர்கள் சிலர்  இரவு நேரத்தில் சுந்தழையைக் கொத்துக் கொத்தாகப் பறித்து வந்தனர். அதைக் கண்ட காந்தியடிகள், “மரங்களும் நம்மைப்போல் உயிருடையவை. நம்மைப்போலவே வளர்கின்றன; முகர்கின்றன; உண்கின்றன; பருகுகின்றன; உறங்குகின்றன .அவை இரவில் ஓய்வு பெற்று உறங்கும் போது தழைகளைப் பறித்தல் தவறுஎன்று கூறினாராம்!

   இன்றைக்குச் ரியாக நூற்றி இருபத்தியோர் ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் (9.11.1893)மெரிக்காவில் சிக்காக்கோவில் நடைபெற்ற ர்வமத மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார்.,   ‘மெரிக்க நாட்டுச் சகோதரர்களே, சகோதரிகளேஎன்று  கூறி உரையைத் தொடங்கியபோது எழுந்த கரவோலி அடங்க பத்து நிமிடம் ஆனதாம்!

      எனவே, நாடு, மொழி, இனம் கடந்து, யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்னும் கணியன் பூங்குன்றனாரின் வழியில்.எல்லோரும் நம்  றவினர் என ஒவ்வொருவரும் எண்ணி வாழத் தொடங்கினால் உலகில் போர்  ஏது?  பூசல் ஏது?


.     அண்மைக்காலமாக, மனித மனங்கள் மெல்ல மெல்ல பாலைவனங்கள் ஆகிவருகின்றன.  இறைவன் அன்பு மயமானவன். எனவேதான் எல்லா மதங்களும் அன்பைப் போதிக்கின்றன. அன்பெனும் அமிழ் நீர் எல்லோருடைய உள்ளங்களிலும் மீண்டும் பெருக்கெடுக்க  வேண்டும். இதற்கான வழிகளைச் சிந்திப்போம்.

Thursday, 6 November 2014

மீண்டும் ஹைக்கூ கவிதைகள்


    என் வலைப்பூவை அடிக்கடி பார்ப்பவர்களில் சிலர் தொடர்ந்து ஹைக்கூ கவிதைகள் எழுதுமாறு மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர். யாரும் சிந்திக்காத கோணத்தில் நான் சிந்திப்பதாக பாராட்டுமழை வேறு பொழிந்தனர். அதற்குப்பிறகும் எழுதாமல் இருக்க முடியுமா?
   போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற கண்ணதாசனின் பாடல் பொருளை ஒருமுறை நினைத்துப்பார்த்துவிட்டு எழுதிய கவிதைகளே பின் வருவன. 

என் வலைப்பூவில்
வண்டுகளோடு இப்போது
வாண்டுகளும்.

தொலைபேசியால்
தொலைந்தது
கடிதம் எழுதும் பழக்கம்.

தொலைக்காட்சியால்
தொலைந்தது
படிக்கும் பழக்கம் 


பாருக்குள்ளே நல்ல நாடு
‘குடி மக்கள் பாடுகிறார்கள்
BARக்குள்ளே நல்ல நாடு

இத் தலைமுறை குழந்தைகள்
தொலைத்தது பென்சிலை மட்டுமல்ல
தம் குழந்தைப் பருவத்தையும்.

கே.ஜி முதல் பி.ஜி வரை
வகுப்புகள் நடைபெறும் ஒரே இடம்
தனிப்பயிற்சி மையம்


யாருக்காக அந்தத்
தங்கப் பதக்கம்?
மேற்கு வானில் சூரியன்.

கடன்கொடுத்தவனைப்
பார்க்கப் பிடிக்காமல் நிலா...
அமாவாசை. 

வானம் முழுவதும்
வண்ண மேகங்கள்
விற்காத பஞ்சு மிட்டாய்

பன்னிரண்டில் நாங்கள்
உலர்கிறோம்., நீ மலர்கிறாய்
மாணவரும்  குறிஞ்சிப்பூவும்.

கவிழ்த்துப்போட்ட
வடைச்சட்டியாய்
வானம்.

வானத் தொலைக்காட்சியில்
ஒலியும் ஒளியும்
இடி மின்னல்.

உருக்கிய வெள்ளியை
ஊற்றியது யார்?
மலை அருவி. 

வானத் தொலைக்காட்சியில்
வண்ண விளம்பரம்
வானவில்.

வருண பகவானின் கோலிக்குண்டுகள்
தரைமீது தவறி விழுந்தன
ஆலங்கட்டி மழை.

குவியாடியில்
உலகமே தெரிகிறது
புல்லின்மேல் பனித்துளி.

சோறு போடும் ஆறு- அதைக்
கூறு போடுவது யாரு?
மனிதன்.

விடிய விடிய
வெல்டிங் வேலையில் வருணன்
மின்னல். 

மலைமுகட்டில் மட்டும் வெயில்
வீடியோ எடுக்கிறானோ
இறைவன்.

குளத்து நீரில்
மிதக்கும் விளக்கு
நிலா.

பூமித்தாய்
நெருப்பைத் துப்புகிறாள்
எரிமலையாய்.

எந்தக் குழந்தை
பூமி கிலுகிலுப்பையை ஆட்டுவது?
நில நடுக்கம்.

ஒதாமல் ஒருநாளும்
இருக்க வேண்டா
பிளஸ் டூ மாணவன். 

கோழி போட்டால் பணம்
மாணவன் போட்டால் ரணம்
நாமக்கல்லில் முட்டை.

இளமையில் கல்
இல்லை இல்லை
இளமையில் நாமக்கல்

பள்ளி மாணவனும்
பண்ணைக்கோழியும் ஒன்றுதான்
நாமக்கல்லில்

குன்றின் மேல் இட்ட
வெண் துப்பட்டா
அருவி.

முதல்நாள் மிடுக்கு நடை
மறுநாள் கடைக்கு எடை
செய்தித்தாள்.





Sunday, 2 November 2014

பெண் என்னும் பெருஞ்செல்வம்


     இன்று உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஈன்றெடுத்த பெருமை யாருக்கு உள்ளது? பெண்களுக்கல்லவா இப்பெருமை வாய்க்கப் பெற்றுள்ளது!. ஆக உலகத்தையே உருவாக்க வல்ல இப்பெண்களின் நிலை நாட்டில் எப்படி உள்ளது? வீட்டில் எப்படி உள்ளது? இந்த இழிநிலைக்கு யார் காரணம்?  

   ஓர் அறிவார்ந்த விவசாயி சேமித்து வைக்க வேண்டிய விதை நெல்லை அவித்து உண்பானா? அல்லது பின்னாளில் நெல்லாய் விளைந்து பசிநீக்கும் என்பதை உணராமல் நாற்றங்கால் நிலையிலேயே அந்த இளம் நாற்றுகளைப் பிடுங்கி எறிவானா? வயிற்றில் வளர்வது பெண்கரு என அறிந்தால் அதை அழிப்பதும் அல்லது பிறந்ததும் பெண் எனத் தெரிந்தால் அதனைக் கொலை செய்வதும் இன்றும் சமுதாயத்தில் நின்றபாடில்லை. இந்த இழிநிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?

     படித்த ஆண்களும் பெண்மையின் அருமை தெரியாமல் திரிகிறார்கள்.

    பெண்களே பெண்களைப் போற்றாத அறியாமையை என்னென்பது!  பெண்களே பெண்களை இழிவுபடுத்தும் மூடநிலை உள்ளதே! பெண்ணே பெண் குழந்தையை வெறுக்கின்றாளே! சில தாய்மார்கள் தம் ஆண் குழந்தையைப் போற்றியும் பெண் குழந்தையைத் தூற்றியும் பேசுவார்கள். இதைத்தான் பாரதி,  மாதர் தம்மையே இழிவு செய்யும் மடமை என்றான்.

   மேலும் அனைத்து நிலையிலும் சம உரிமையைத் தராத அரசியலமைப்புச் சட்டங்கள் பெண்களுக்குத் தடைக்கற்களாக உள்ளன. இப்படிப் பலரும் பலவும் காரணமாகி, பெண்மை என்னும் பெருஞ்செல்வம் அழிந்து வருகிறதோ என்னும் அச்சம் ஏற்படுகிறது.

பெண்ணுரிமைக்காக முதல் முதலாகக் குரல் கொடுத்த பாரதி, பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்று கூவினான்.

  மலைவாழை போன்ற கல்வி அதை வாயார உண்ணுவாய் என் புதல்வி என்று பாடி, சிறுமியரைப் பள்ளிக்கு அனுப்பச் சொன்னார் பாரதிதாசன்.
     
   பெண்ணின் பெருந்தக்க யா உள? என்று போற்றினார் திருவள்ளுவர்.

  மங்கயராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் கவிமணி தேசிக விநாயகம்.

  மனைவி நல வேட்பு நாள்(ஆகஸ்ட் 30) ஒன்றை அறிவித்து மனைவியர் பெருமையை அவர்தம் கணவர்க்கு  உணர்த்தியவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

   பிறந்த ஊரைப் பிரிந்து, பெற்றோரைப் பிரிந்து, உடன்பிறந்தாரைப் பிரிந்து புகுந்த வீட்டில் பதியம் போடப்படும் அந்த இளஞ்செடியை புகுந்த வீட்டில் உள்ள அனைவரும் போற்றி வளர்க்க வேண்டும். குறிப்பாக மாமியார் தன் மருமகளை மறுமகளாக நடத்த வேண்டும்.

   பெண் என்பவள் தூய இன்ப ஊற்று! அன்பின் பெருக்கு! அவள் பிறந்ததும் மழலை பேசி மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறாள். பின்னர் கல்வியில் சிறந்து களிப்படையச் செய்கிறாள். திருமணத்திற்குப் பிறகு மனைவி என்னும் பொறுப்பேற்று மணிவிளக்காய்த் திகழ்கின்றாள். தொடர்ந்து,  தாய் என்னும் நிலையில் தியாகத் திருவுருவாய் விளங்குகிறாள். பின்னர் வயது முதிர்ந்து பாட்டியாகி வழிகாட்டுகிறாள், வணங்குவோரையெல்லாம் வாழ்த்துகிறாள்! குடும்பத்தின் பாரம்பரியம் மற்றும்  அனுபவப் புதையலாய்த் திகழ்கிறாள்.

   எனவே, பெண் என்பவள் வீட்டின் சொத்துகுடும்பத்தின் ஆணிவேர் அவளே. அத்தகைய பெண் என்னும் பெருஞ்செல்வத்தைப் போற்றிக் கொண்டாடுவோம். இல்லையேல் ஒரு கட்டத்தில் திண்டாடுவோம்.