Saturday 8 August 2015

படித்தால் மட்டும் போதுமா?

  இன்றைய(7.8.15) இந்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தி ஒன்றைப் படித்து  முடித்ததும் இந்தியாவில் வழங்கப்படும் கல்வி மீதிருந்த எனது நம்பிக்கை தவிடுபொடி ஆகிவிட்டது.


  பெங்களூரு கல்லூரி ஒன்றில் பொறியியல் படிக்கும் மாணவன் ஒருவன் திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் திருடி, கையும் களவுமாகப் பிடிபட்டு இப்போது விசாரணைக் கைதியாக கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறான் என்பதுதான் அந்தச் செய்தி.

   படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற கதையாகத்தான் இம் மாணவனின் செயல் உள்ளது. திருடுவது என்பது எவ்வளவு இழிவான செயல்! படித்த இளைஞர்கள் இந்த இழி செயலில் ஈடுபடுவது கண்டு நெஞ்சு பொறுக்காமல் வேதனைப் படுகிறேன்.

      மற்ற நாட்டு அறிஞர்கள் திருடுவது தீது என்றார்கள். திருட நினைப்பதே தீது  என்றார் திருவள்ளுவர்.

   அம்மா பசியால் வாடி வருந்திக் கிடந்தால் கூட இது போன்று சான்றோர் பழிக்கக் கூடிய செயல்களைச் செய்யக்கூடாது என அறிவுறுத்திய மகான்கள் வாழ்ந்த நம் நாட்டில் இன்று படித்தவர்கள் செய்யக்கூடிய பாவம் கொஞ்ச நஞ்சமல்ல.

   படித்தவர்கள்தாம் இலஞ்சம் வாங்குகிறார்கள்., படித்தவர்கள் குடித்துவிட்டு மனைவி மக்களை அடிக்கிறார்கள். படித்தவர்கள்தாம் மணந்தவர்  இருக்க மாற்றாரை விரும்பிப் போகிறார்கள். படிக்காதவர் இத்தகைய தவறுகளைச் செய்தால் அறிவில்லாமல் செய்தார் என நினைக்கலாம். ஆனால் படித்தவர் செய்வதைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

   படித்தவன் பாவம் செய்தால் ஐயோ என்று போவான் என்று பாரதியார் கூறியது படித்தவர் காதில் விழாமல் போனது நாட்டின் தீயூழ் என்றுதான் சொல்ல வேண்டும்.

   பண்பாட்டை, ஒழுக்கத்தைச் சொல்லித்தராத கல்வியால் வீட்டுக்கும் நாட்டுக்கும் அவமானமே வந்து சேரும். மேலே குறிப்பிடப்பட்ட மாணவனின் செயலால் அவனுடைய தாயும் தந்தையும் அவமானத்தால் கூனி குறுகிப் போயிருப்பார்கள். வெளியில் தலை காட்ட முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பார்கள்.

   ஒரு நாடு நல்ல நாடு அல்லது கெட்ட நாடு என்பது அங்கு வாழும் ஆடவர்களைப் பொறுத்தது என்று ஒளவையார் கூறுவதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாடாகொன்றோ; காடாகொன்றோ;
அவலாகொன்றோ; மிசையாகொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!

   இது குறித்து ஆழ்ந்து சிந்தித்தவர் பாரதியார். ஒரு பெண் கற்பை இழக்கிறாள் என்றால் அதன் பின்னணியில் இருப்பவன் ஓர் ஆடவன் அல்லவா? ஆடவன் நல்லவனாக இருந்தால் பெண்ணுக்கு மானபங்கம் நேராது. அதனால்தான் அவர் சொல்கிறார்:

   கற்பு நிலை என்று சொல்ல வந்தார்  இரு
     கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்.

    ஆணெல்லாம் கற்பை விட்டுத்  தவறு செய்தால்
    அப்போது பெண்மையும் கற்பு அழிந்திடாதோ?

   இவற்றை எல்லாம் நம் கல்வி சொல்லிக் கொடுப்பதில்லை. நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவது எப்படி என்பதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் பலராக இருக்கிறார்கள். வாழும் முறைமைக்கு அடிப்படையான மதிப்பீடுகளைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் அரிதாகி வருகின்றனர்.


     குளிக்கச் சென்றவன் சேற்றைப் பூசிக்கொண்டு  வந்த கதையாக படித்து முடித்தவர்கள்தாம் பாவம் செய்கிறார்கள்.

7 comments:

  1. சம்பாதிக்க மட்டும் படிப்பு உதவும் என்று நினைத்தால் இப்படித்தான்...

    ReplyDelete
  2. பண்பாட்டை, ஒழுக்கத்தைச் சொல்லித்தராத கல்வியால் வீட்டுக்கும் நாட்டுக்கும் அவமானமே வந்து சேரும்.
    உண்மைதான் ஐயா
    இன்றைய கல்வி முறை மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு
    பள்ளிக்கூடங்கள் எல்லாம், மதிப்பெண் தொழிற்சாலைகளாக மாறி
    ஆண்டுகள் பல கடந்து விட்டன.
    வேதனைதான் ஐயா

    ReplyDelete
  3. கல்விக் கூடத்தில் அறிவைப் பெறலாம், ஆற்றலைப் பெறலாம், ஒழுக்கத்தைப் பெறலாம் - ஆசிரியரின் போதனைகளைக் கேட்டிருந்தால். ஆனால், இன்றைய மாணவர்களுக்கு (இருபாலருக்கும்) நான் உரைப்பது ”நீங்கள் வகுப்பறைக்குள் நுழையவில்லை வாழ்க்கைக்குள் நுழைகிறீர்கள்” என்பதை உணர்ந்தாலே போதும்.

    ReplyDelete
  4. கல்விக் கூடத்தில் அறிவைப் பெறலாம், ஆற்றலைப் பெறலாம், ஒழுக்கத்தைப் பெறலாம் - ஆசிரியரின் போதனைகளைக் கேட்டிருந்தால். ஆனால், இன்றைய மாணவர்களுக்கு (இருபாலருக்கும்) நான் உரைப்பது ”நீங்கள் வகுப்பறைக்குள் நுழையவில்லை வாழ்க்கைக்குள் நுழைகிறீர்கள்” என்பதை உணர்ந்தாலே போதும்.

    ReplyDelete
  5. எது இருந்தும் ஒழுக்கமில்லா வாழ்க்கை எதுமில்லாததே. ஆசிரியரும் பெற்றோரும் இணைந்துதான் மாணவர்களை நல்வழிப்படுத்தவேண்டும் . அது ஒரு வேள்வி . அவர்கள் அதற்கு தயாரா? தயாரென்றால் சமுதாயம் உருப்படும். குறை சொல்வதால் பயனில்லை.. மிகவும் மனம் வேதனைப்பட்டு ஆசிரியர் எழுதியுள்ளார்.

    ReplyDelete
  6. எது இருந்தும் ஒழுக்கமில்லா வாழ்க்கை எதுமில்லாததே. ஆசிரியரும் பெற்றோரும் இணைந்துதான் மாணவர்களை நல்வழிப்படுத்தவேண்டும் . அது ஒரு வேள்வி . அவர்கள் அதற்கு தயாரா? தயாரென்றால் சமுதாயம் உருப்படும். குறை சொல்வதால் பயனில்லை.. மிகவும் மனம் வேதனைப்பட்டு ஆசிரியர் எழுதியுள்ளார்.

    ReplyDelete
  7. எது இருந்தும் ஒழுக்கமில்லைஎன்றால் வாழ்கையே இல்லை. ஆசிரியரும் பெற்றோரும் இணைந்துதான் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும். அது ஒரு வேள்வி. குறை சொல்வதால் பயனொன்றுமில்லை.. அதற்கு அவர்கள் தயாரா ? சமுகம் உருப்பட்டுவிடும். ஆசிரியர் வேதனைப்பட்டு எழுதியுள்ளார்.

    ReplyDelete