Thursday 24 November 2016

பாடி விளையாடு பாப்பா

  சற்றேறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்னால் என் முதல் கவிதை நூலின் வெளியீட்டு விழாவில் என் இனிய நண்பர் ஹைக்கூ திலகம் இரா.இரவி அவர்கள் பங்கேற்று வாழ்த்தினார். அடுத்த நாளே நூல் மதிப்புரை எழுதி அனுப்பி வைத்தார். அந்த மதிப்புரையை இப்போது எனது வலைப்பூவில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


நூலின் பெயர் : பாடி விளையாடு பாப்பா
நூலின் ஆசிரியர் : கவிஞர் முனைவர் .கோவிந்தராஜூ
மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

   பாவை பதிப்பகத்தின் தரமான பதிப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் முனைவர் .கோவிந்தராஜூ அவர்கள் டி.என்.பி.எல். பதின்ம மேல்நிலைப்பள்ளியின் முதல்வராக பணிபுரிந்து வருபவர். கவிஞர் இனியன் என்ற புனைப்பெயரும் உண்டு. இவருக்கு இனியன் என்பது காரணப் பெயர் என்றே சொல்ல வேண்டும். எல்லோரிடமும் இனிமையாக பழகக் கூடிய இனிய மனிதர்.

      இந்நூலின் தனிச்சிறப்பு என்னவென்றால் குழந்தைகள் பாடலாக இருந்தாலும்  இக்கவிதைகளைப் பெரியவர்களும் படித்துப் பயன் பெறலாம். சிறந்த பாடல்களுக்கான ஓவியத்தை ஆசிரியரின் புதல்வி செல்வி புவனா வரைந்து இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த நூலின் வெளியீட்டு விழாவில் பங்கு பெற்றேன். கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ.உமா மகேஸ்வரி அவர்கள் மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள். நூலின் சிறப்புக்களை எடுத்துச் சொன்னார்கள். காந்தியப் பூனை என்ற பாடலில் மனித நேயம் உள்ளது. லியைக் கொல்லாமல் விரட்டி அடிக்கும் சைவப் பூனை என்று குறிப்பிட்டார்கள். காவல் துறைத் தலைவர்  திரு.ஐ.இராஜாவும் நூல் பற்றி சிறப்பாக உரையாற்றினார்கள்.

   இயந்திரமயமான இன்றைய உலகில்என் குழந்தைக்கு தமிழ் வராதுஎன்று சொல்வதையே பெருமையாக கருதிடும் பெற்றோர்கள் மலிந்து விட்ட காலமிது. குழந்தைச் செல்வங்களிடமிருந்து திட்டமிட்டுத் தாய்மொழியான தமிழ்மொழியை அந்நியப்படுத்தி வருவது கண்கூடு. இம்முறை தவறு என்பதை பெற்றோர்கள் விரைவில் உணர வேண்டும். பிஞ்சு நெஞ்சங்களில் தாய்மொழி தரமாக விதைக்கப்பட்டால் தான். தானாக சிந்திக்கும் ஆற்றல் வளரும்; விஞ்ஞானியாக வரும். அறிவியல் இமயம் அப்துல் கலாம் தமிழ் வழி பயின்ற மாணவர் அவரிடமிருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர் இந்நூல் ஆசிரியர்.

   நூல்களுக்கு அணிந்துரை எழுவது ஒரு கலை.இந்தக் கலை முனைவர் இரா.மோகன் அவர்களுக்கு மிகச்சிறப்பாக வருகின்றது.அதனால் தான் இவரிடம் அணிந்துரை வாங்கிட பலரும் போட்டி போடுகின்றனர். வழங்கிய அணிந்துரைகளே தனிநூலாக்கி பெருமை சேர்த்து விடுவார்கள். இந் நூலாசிரியர் இனியன் அவர்கள் முனைவர் இரா.மோகன் அவர்களின் மாணவர். இந்நூலில் முனைவர் இரா.மோகன் அவர்களின் அணிந்துரை மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது.

  முனைவர் செ.சைலேந்திரபாபு அவர்களின் வாழ்த்துரை கூடுதல் சிறப்பு. குழந்தை இலக்கியம் மிகக் குறைவாகவே உள்ளது. வாழ்த்துரையில் சொன்னது போல நூலாசிரியர் தொடர்ந்து இதுபோன்ற நூல்களை எழுதி வரவேண்டும்.

சொற்கள் நடந்தால் வசனம்; சொற்கள் நடனமாடினால் கவிதைதேர்ந்தெடுத்த மணியான சொற்களின் நடனத்தைக் காண முடியும். அதுமட்டுமல்ல நயமான கருத்துக்களையும் வாழ்வியல் நெறிகளையும் வலியுறுத்தும்அழகிய அற்புதப் படைப்பு. ஐம்பத்தெட்டுத் தலைப்புகளில் குழந்தைப் பாடல்கள் அணிவகுத்து நிற்கின்றன.

     பாடல்களின் தலைப்புகள் பற்றி தனி ஆய்வே நடத்தலாம். அவ்வளவு சிறப்பான தலைப்புகள் காந்தியப் பூனை, வனத்தைக் காக்க வேண்டுமே. காலைநேரம் எழுந்திரு. வாழ்ந்து காட்டு, கவிதை இன்பம் இப்படி தலைப்பைப் படித்தாலே பாடல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் சிறப்பாக உள்ளது. அன்புறையில் இந்நூலை சிறுவர் சிறுமியருக்கு காணிக்கையாக்கி இருப்பது முற்றிலும் பொருத்தம் இந்த நூலை ஒரு குழந்தை முழுவதும் புரிந்து படித்தால் அக்குழந்தைக்கு தமிழ்ப்புலமை வரும்என்பதை அறுதியிட்டுக் கூறலாம். நீங்களும் வாங்கிப் படித்துப் பாருங்கள் உண்மையை உணருவீர்கள்.

   மயில் என்ற முதல் பாடலிலே. முதல் சொல்லிலேயே. ரு கருத்தை வலியுறுத்தி விடுகின்றார். மயில் என்றதும் தோகையைப் பார்த்ததும் சிலர் மயில் என்று பெண்களை வர்ணிப்பதும் உண்டு. பலர் தோகை உள்ள மயிலை பெண் மயில் என்று நினைக்க வாய்ப்புண்டு. ஆண் மயிலுக்குத் தான் தோகை உண்டு. பெண் மயிலுக்கு தோகை இல்லை என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக. செல்வி புவனா வரைந்துள்ள தோகையுடன் கூடிய மயில் ஓவியத்திற்குமயில்என்ற முதற் பாடலில் மயிலண்ணா மயிலண்ணா என்று ஆரம்பித்து முதல் கவிதையின் முதற் சொல்லிலேயேஆண் மயிலுக்குத்தான் தோகை உண்டுஎன்ற கருத்தை வலியுறுத்தி விடுகிறார். தொடக்கமே இப்படி என்றால் நூலின் நடையை சொல்லவும் வேண்டுமா? தெளிந்த நீரோடை நடை; நீரோடையில் நாம்  குளித்து வந்த உணர்வினைப் படித்து முடித்தவுடன் உணர்கிறோம்.

உழைத்தால் உயரலாம் என்ற உயர்ந்த கருத்தை வலியுறுத்தும் பாடல்வரி  இதோ.
சிட்டாய் பறந்து உழைத்தால்
துட்டு சேரும் தானே?”
உருவத்தில் பெரியது யானை, காட்டில் மிகவும் பலம் வாய்ந்தமிருகம் யானை, ஆனால் யானை சைவம் என்ற கருத்தை வலியுறுத்தும் பாடல்:
விரும்பி சைவ உணவினை
வேண்டும் மட்டும் உண்பதால்
இரும்பு போன்ற மரத்தையும்
எளிதில் பிடுங்கிப் போட்டிடும்
இன்றைக்கும் உடல் நலத்திற்கு சைவ உணவே சிறப்பு என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வரும் காலத்தில் இந்தப் பாடல் சைவ உணவின் முக்கியத்துவத்தை நன்கு உணர்த்துகின்றது. அசைவ உணவு தேவையா நம்மைச் சிந்திக்க வைக்கிறது.

   தவளையைக் கண்டதும் கல்லைக் கொண்டு எரிந்து கொல்லும் குணம் மனிதர்களிடையே உண்டு. அதனை விளக்கும் பாடல்:
உனக்கு எமன் மனிதர் தாம்
உடனே ஓடி ஒளிந்திடு
   இப்படி நூல் முழுவதும் சிந்தனைகளை விதைக்கும் பாடல்கள். செவிக்கும் சிந்தைக்கும் விருந்தாக அமைகின்றன. இந்நூலை படித்து முடித்தவுடன் என் நினைவிற்கு வந்த வரி எது தெரியுமா?

என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில் ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்?

   பிறமொழிக் கலப்பின்றி மிகச் சிறப்பான பாடல்களைப் படித்த போது, இன்றைக்கு ஆங்கிலம் கலந்து எழுதுபவர்கள். பேசுபவர்கள் கன்னத்தில் அறைவது போல் இருந்தது. சிக்கனம், வாய்மை போன்ற உயர்ந்த பண்புகளை வலியுறுத்தும் பாடல்கள். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரியானதிருடாதேஎன்ற சொல்லைத் தலைப்பாக்கி அழகிய பாடலை வடித்து உள்ளார்  நூல் ஆசிரியர்.

     திருவள்ளுவர், காமராசர், நேரு, பாரதியார், பாட்டி, தாத்தா இப்படி பலரையும் பாடல்களாலே குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள். குழந்தைகள் மட்டுமல்லர்; பெரியவர்களும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய அற்புத நூல்.  இந்தச் சிறப்பான நூலை தமிழ்நாடு அரசு பாடநூலாக அறிவிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். உலக அளவில் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பது டி.என்.பி.எல் நிறுவனம்.அந் நிறுவனத்திற்குப் பெருமை சேர்ப்பவர் நூலாசிரியர் முனைவர் .கோவிந்தராஜூ அவர்கள். பாராட்டுக்கள்!


    சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பேச்சாளர் முது முனைவர் வெஇறையன்பு சொல்வதைப் போல தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருங்கள். எழுதிக் கொண்டே இருங்கள்.

5 comments:

  1. தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருங்கள். எழுதிக் கொண்டே இருங்கள்.

    ReplyDelete
  2. சிறப்பான மதிப்புரை ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அருமையான மதிப்புரை. நாம் எழுதாமல் விட்டோமே என்ற குற்றவுணர்வுமுண்டு. நீதபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  4. ஐயா, தாங்கள் பதிவிட்டுள்ள தங்கள் நூலிற்கான மதிப்புரை படித்தேன். இந்த பதிவிலேயே உங்கள் மொத்தப் புத்தகத்தையும் பயின்றதொரு உணர்வு. இயங்கும் செயலே மானுடம். நில்லாமல் இயங்கும் நீங்கள் மானுடத்தின் மகுடம்.உங்கள் பதிப்புகளை பெற்று என் குழந்தைகளுக்கு தமிழமுது படைக்கவேண்டும்

    ReplyDelete
  5. ”பாடி விளையாடு பாப்பா” - இந்நூலை முதலில் படிக்க வேண்டியவர்கள் பெரியவர்கள். ஏனென்றால் அதனில் உள்ள இன்பத்தைச் சுவைத்த பின்னரே அதன் சுவையினை குழந்தைக்கு ஊட்ட முடியும். அதனால் தான் ஹைக்கூ திலகம் இரா.இரவி அவர்களின் நூல் மதிப்புரையில் பெரியவர்களும் படித்து இன்புறலாம் என குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளின் மனநிலையினை அறிந்தவர்களால் தான் குழந்தை இலக்கியம் படைக்க இயலும். அந்தவகையில் குழந்தைக் கவிஞர் என்ற பெயர் பெற்ற அழ.வள்ளியப்பா போன்று தாங்களும் குழந்தைக் கவிஞர் தான். தாங்கள் பணியாற்றிய பள்ளியில் படித்த இளம் சிறார்களிடம் அவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த தாங்கள் எடுக்கும் முயற்சிகளை நான் அறிவேன். சிறார்களுடன் சிற்றுலா செல்வதில், அவர்களுடன் கலந்துரையாடுவதில் தாங்கள் எடுத்துக்கொள்ளும் செயல்கள் அனைத்துமே அவர்களை ஒரு தனித்திறன் படைத்தவர்களாக உருவாக்கும் முயற்சியே!, ஆகையால் நீங்கள் ”பாப்பா பாட்டு” எழுத முழுத்தகுதி பெற்றவர் தான். பயிர் விளைவிப்பவர்களை விவசாயி அல்லது உழவன் என்பர், உப்பு விளைவிப்பவர்களை உழாஉழவன் என்பர், நல்ல நூலகளை, நல்ல சொற்களை உலகுக்கு அறிமுகப்படுத்துபவர்கள் சொல்லேருழவன் என அழைப்பர். அத்தகைய ஆற்றல் மிக்கவரான உங்களை முனைவர் இரா.மோகன் அவர்கள், காவல்துறைத்தலைவர் முனைவர் சைலேந்திரபாபு அவர்கள் என அனைவரும் போற்றும் பேறு பெற்றவர்களாகத் திகழ்கிறீர்கள். வளர்க உமது எழுத்துப்பணி.
    என்றும் அன்புடன்...
    பேராசிரியர் ரா.லட்சுமணசிங்

    ReplyDelete