Tuesday 16 January 2018

முகநூல் ஹைக்கூ

                
முகநக நட்பதே
 நட்பு
முகநூலில் 

அகநக நட்பு
வேண்டாம்
முகநூலில் 

ஒரே சொடுக்கில்
ஓராயிரம் நட்பு
முகநூலில் 

பெண்ணே உன்
படம் இடேல்
முகநூலில் 

பாம்பின் படம் தொடலும்
முகநூலில் படம் இடலும்
ஒன்றே.

வாழ்ந்தவரும் உண்டு
மாய்ந்தவரும் உண்டு
முகநூலால். 

கல்யாணம் பண்ணியும்
சந்நியாசிகள் இருவரும்
முகநூலால். 

லைக் இல்லாவிட்டால்
 லைஃப் இல்லை
முகநூலில்.

அப்பா  அம்மா
குழந்தைகள்
தனித்தனித் தீவுகளாய்.

மேதையும்
பேதையும்
முகநூல் போதையில்.

காலை எழுந்ததும் முகநூல்
கருத்தாய் உள்ளாள்
 பாப்பா.

மாலை முழுதும் முகநூல் என
வழக்கப்படுத்திக் கொண்டாள்
பாப்பா.

பொழுதுபோக்க
நுழைந்தாள் முகநூலில்;
விழுந்தாள் பழுதாகி.

அளவுக்கு மிஞ்சினால் விஷம்
அமுதம் மட்டுமல்ல
முகநூலும்.

உன்னால் நான் கெட்டேன்
என்னால் நீ கெட்டாய்
முகநூல் புதுமொழி. 

செல்லெல்லாம்
செல்லாகா
முகநூலின்றி.

வழக்கொழிந்தன
பல நூல்கள்
ஒரு நூல் உலாவர.

முகநூல் பார்த்தவனின்
முகம் சிதைந்தது
கார் விபத்தில்.

முகநூலில் லைக் போட்டவள்
சாம்பாரில்
உப்பு போடவில்லை!

முகநூலில் லைக் போட்டவன்
 மனைவியின் சமையலுக்கு
 லைக் போடவில்லை!

ஒவ்வொருவர் கையிலும்
ஒரே நூல்தான்
முகநூல்.

முகநூல் இல்லாமல்
முனியம்மா இல்லை
முனிவரும் இல்லை!

முகநூல் என்பது
இருமுனைக் கத்தி
கையாள்க கவனமுடன்.

முகநூலும் இருக்கட்டும்
ஒரு மூலையில்
ஊறுகாய் அளவில்.

   -கவிஞர் இனியன், கரூர்.





10 comments:

  1. அருமை ஐயா அருமை
    முகநூல் ஒரு மூலையில் ஊறுகாய் அளவில் இருத்தல் நலம்தான்
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. ஊறுகாய் மிகச்சரியான சொல்லாடல்

    மிகவும் இரசிக்க வைத்த கவிதை.

    ReplyDelete
  3. அருமை ஐயா அருமை
    முகநூலால் முகவரியைத் தொலைக்கும் இளைய தலைமுறையினர் அவசியம் படிக்கவேண்டிய வரிகள்.

    ReplyDelete
  4. தங்களது ஹைக்கூ காலத்தின் கண்ணாடி. நான் கடந்த அக்டோபர் 15 அன்றே முகநூலை விட்டு வெளியேறி விட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

    ஏற்கனவே WhatsApp லிருந்தும் வெளியே வந்து விட்டேன் என்பது கூடுதல் தகவல்.

    ReplyDelete
  5. Gunasekhar Karur17 January 2018 at 15:39

    Very much informative, Dr. !

    ReplyDelete
  6. Caution to men and women who remain and use the social media like Facebook and WhatsApp.

    ReplyDelete
  7. அருமையான முகநூல் விழிப்புணர்வு. இதற்குமேல் எவராலும் முகநூல் பற்றிய உளவியல் சிந்தனைகளை வெளி உலகிற்குச் சுட்டிக்காட்டமுடியாது. அனைத்தும் இனிமை. அதிலும், இன்றைய இளைஞர்கள் எழுதுவதற்கும், படிப்பதற்கும் விரும்புவதில்லை. மாறாக முகநூலில் மூழ்கியுள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், தங்களது தொகுப்பிலிருந்து,
    “வழக்கொழிந்தன
    பல நூல்கள்
    ஒரு நூல் உலாவர”.
    அருமை. தொடரட்டும். உங்களது ஆளுமைகள்.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    கரூர்.

    ReplyDelete
  8. ரொம்ப அருமையாக இருக்கிறது ஐயா கவிஞர் இனியனின் ஹைக்கூக்கள்!

    மிகவும் ரசித்தோம்.

    கீதா: ஓ இப்போது புரிந்தது ஐயா இது உங்களின் பதிவு வாட்சப்பில் வந்தது...இங்கு வரமால் போய்விட்டோம்.

    அனைத்தும் அருமை. முகநூலில் மனைவியின் சமையல் படங்களுக்கும் குறிப்புகளுக்கும் லைக் போட்டு வீட்டில் அதைப் பாராட்டிச் சில வார்த்தைகள் கூடச் சொல்லாமல் என்றும் சேர்க்கலாமோ..

    உப்பில்லா சாம்பாரையும்ரசித்தோம்...ஊறுகாயாய் முகநூல் இருந்தால் போதும் என்றதையும் ரசித்தோம். அனைத்தும் அருமை..

    ReplyDelete
  9. முறையில்லா உபயோகத்தால் முக்காடு போட வைக்கும் முகநூல்- என்பதைத் தெளிவாக்கினீர் ஐயா

    ReplyDelete