Wednesday 31 January 2018

அமெரிக்காவின் அழகிய சந்திர கிரகணம்

   ஒருவன் குண்டூசிகளை எடுத்து நம் உடல்மீது குத்திக்கொண்டே இருந்தால் எப்படியிருக்கும்? அப்படி ஒரு குளிர் அதிகாலையில். காலை ஐந்து மணிக்கு எழுந்து குளிர் தாங்கும் உடையணிந்து காமிராவும் கையுமாக புறப்பட்டு, வெளியில் ஓடிப் பார்த்தால் அம்புலி மாமா என் கண்ணுக்கு அகப்படவே இல்லை. சுற்றிலும் உயர்ந்த கட்டடங்களும் மரங்களும் இருந்தால் எப்படித் தெரியும்?

  விட்டேனா பார் என்று எட்டி நடை போட்டேன். ஒரு திறந்த வெளியை நோக்கி நடந்தோடினேன். கண்டேன் நிலவைக் கண் குளிர.

   காமிராவை எடுத்து இயக்க முடியவில்லை. கை விரல்கள் விறைத்துப்போய் விட்டன. காரணம் கையுறைகளை எடுக்க மறந்தேன். உள்ளங்கைகளைத் தேய்த்துச் சூடாக்கிக் கொண்டு, ஒரு மணி நேரம் நடுங்கும் நாய்க் குளிரில் நின்று, எடுத்த படங்கள் சிலவற்றை வலைப்பூவில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.











   இந்தக் குளிரிலும் மனத்தில் ஒரு கவிதை ஊற்றாகப் பெருக, அதையும் உங்கள் சிந்தனைக்கு விருந்தாகப் படைக்கிறேன்.
       சந்திர கிரகணம்
  பல விகற்ப பஃறொடை வெண்பா

சுற்றுகிற சூரியனைச் சுற்றுமே பூமியும்
பூமிதனைச் சுற்றும் நிலவென் றறிக.
நிலவு கதிரவன் நில்லாத பூமி
விலகாது சற்றே விளங்குநேர்க் கோட்டில்
நடுவிலே பூமியோர் நந்தியாய் நின்று
தடுக்கும் கதிரோன் தருநல் ஒளியை
பொருளிலார் வாடி வதங்கிடல் போல
இருளடைந் தேகும் நிலா.

ஆண்டுகள் நூற்றைம் பதுகழிய வானிலே
ஆண்டோர் அதிசயம் ஈங்குளோர் காண்பார்
இரண்டா யிரத்துப் பதினெட்டாம் ஆண்டில்
இரவில் முழுமதி மூன்று.

முனைவர் அ.கோவிந்தராஜூ,

அமெரிக்காவிலிருந்து.

11 comments:

  1. ஐயா, இன்று கிரகணம் தோன்றுவதில் இருந்து முடியும் வரை நானும் எனது குடும்பத்தினரும் கண்டோம். நான் அறிவியல் படிக்கவில்லை என்பதன் வருத்தம் எனது மகளின் கேள்வி அம்புகளால் உணர முடிந்தது. அவர்கள் கிரகணம் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு என்னால் விளக்கவே முடியவில்லை. ஆனாலும் மகிழ்ச்சி. அவர்கள் காணும் முதல் கிரகணம் இதுவே

    ReplyDelete
  2. We appreciate your efforts.Here in India also we could see the eclipse in total

    ReplyDelete
  3. படங்கள் அருமை ஐயா
    தங்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது

    ReplyDelete
  4. நன்று. நன்றி

    ReplyDelete
  5. கலையியலோடு புகைப்படம் எடுக்கும் உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  6. இதுவன்றோ வெண்பா; வெல்லும் பா
    ஐயா இன்பா, இனியா உன் மீது
    எங்கள் அன்பு என்றும் தனியா.
    உன் ஆர்வத்தைத் தடுப்பது உறைபனியா?
    எப்பொழுதும் அறிவுத் தேடலே உன் பணியா?.
    வியக்கிறேன் நான், உனதெழுத்தாற்றல் கண்டு
    உனைமிஞ்ச இத்தரணியில் எவர் உண்டு?
    மொத்தத்தில் உன் வெண்பா நன்று.
    (பிழையிருப்பின் மன்னிக்கவும்)
    குறிப்பு - சுற்றும் சூரியன் சுற்றுமதைப் பூமி எனத் தொடங்கினால் இன்னும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. கவித்துவம் நிறைந்த பின்னூட்டம்

      Delete
  7. சந்திர கிரகணம் பற்றிய நல்ல பதிவு. கவிதை பிடித்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி. அவ்வப்போது எனது வலைப்பூவைக் கண்டு நல்ல கருத்துரைக்கின்றீர். நன்றி

      Delete
  8. படங்கள் அருமை என்றால்..தங்களின் கவிதையும் நிலவுடன் போட்டி போடுகின்றதே!! அருமை ஐயா..

    கீதா

    ReplyDelete
  9. இணையம் விட்டு விட்டு வருவதால் கருத்துகள் தாமதமாகிறது ஐயா..

    கீதா

    ReplyDelete