Sunday 31 October 2021

வீடுதோறும் பேய்கள்

    Halloween என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப் பெறும் பேய்கள் விழா இன்று கனடா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டின் தீபாவளியைப் போல வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

  இது ஒரு நாள் விழா அன்று. ஒரு மாதம் முழுவதும் களைகட்டும். கடைகளில் விதவிதமான பேயுருவங்கள் விற்கப்படும். மக்கள் அவற்றை வாங்கி வந்து வீட்டு முகப்பில் தொங்க விடுதுண்டு! சிலர் தம் வீட்டின் முன் வளர்ந்து நிற்கும் மேப்பிள் மரக்கிளைகளில் கட்டித் தொங்க விடுவர். வெண்ணிற உடையணிந்த அந்தப் பேய்கள் இரவில் காற்றில் அசைவதைப் பார்த்தால் கனடாவில் நிலவும் கடுங்குளிரிலும் நம் உடல் வேர்த்துக் கொட்டும்.

    வீட்டின்முன் கல்லறை மேடை அமைத்து அதன் மீது ஒரு மனித எலும்புக் கூட்டை உட்கார்ந்த நிலையில் வைத்து, இருட்டில் பயங்கரமாய்த் தெரியும் வகையில் மின் விளக்கொளி படுமாறு வைத்திருப்பர். மற்றும் சிலர் தம் வீட்டின் முன் மண்டை ஓடுகளைப் பரப்பி வைத்துள்ளனர். நிதி வசதி, ஆர்வம் இவற்றிற்கு ஏற்ப பேய்கள் அலங்காரம் கூடும் அல்லது குறையும்; ஆனால் ஒரு பேயாவது இல்லாத வீட்டைக் காணமுடியாது. ஏனோ இந்தப் பேய்கள் அலங்காரம் இஸ்லாமியர் இல்லங்களில் துளியும் இருப்பதில்லை.





    இந்தப் பேய்நாளுக்கு முந்தைய இரவில் வியக்கத்தக்க பயங்கர நிகழ்வுகள் அரங்கேறும். இந்த இரவை Devil’s Night என்று சொல்கின்றனர். இந்த இரவுப் பொழுதில் மக்கள் சிலர் பேய் போல உடையணிந்து வலம் வருவர். நெஞ்சில் துணிவும் துடுக்கும் நிறைந்த இளைஞர் சிலர் பாழடைந்த பங்களாக்களில் நுழைந்து அங்கு வாழும் நிஜப் பேய்களின் வயிற்றில் புளி கரைப்பதும் உண்டு!

    இந்த இரவுப் பொழுதில் சிலர் பேய்களைப் போல உடையணிந்து,  சாலையில் செல்லும் கார்களை நிறுத்தி, கத்தி கலாட்டா செய்வதும் உண்டு. சிலர் குடியிருப்பில் புகுந்து  நள்ளிரவில் நிஜப் பேயைக் கண்டவர்போல் அலறி அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்களாம்.









    இந்த ஆண்டு Halloween kills என்னும் புதுப்படம் வெளியாகி இரண்டு வாரங்களாகத் திரையரங்குகளில் கூட்டம் நிறைந்து வழிகிறது.

   பரங்கிக் காய்களுக்கும் பேய்களுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. வீட்டுக்கு வீடு பரங்கிக் காய்கள் பேய் முகத்துடன் காட்சியளிக்கின்றன. ஆனால் என் மகள் பெரிய பரங்கிக்காய் ஒன்றை வாங்கி வந்து பேய் முகமே ஆனாலும் சாந்தம் தவழச்  செதுக்கி வைத்தாள்.

  என் மகளைத் துணைக்கு அழைத்துக் கொண்டு இரவு பத்து மணியளவில் நாங்கள் வசிக்கும் ஸ்டிட்ஸ்வில் நகரில் காரில் வலம் வந்தேன். காரைவிட்டு இறங்க முடியாத அளவுக்குக் கொடுங்குளிர் இருந்ததால் காரில் இருந்தபடி சில படங்களை எடுத்தேன்.






   நல்ல வேளையாக எந்தப் பேயும் எங்கள் காரை நெருங்கவில்லை. ஆனாலும் அவை என் கனவில் வந்து கழுத்தைப் பிடித்தன. காலையில் நான் எழுந்தபோது, “ஏன் ஒங்க மொகம் பேய் அறைஞ்ச மாதிரி இருக்குது?” என்று கேட்டாள்! நானும் குளியலறைக்குள் பேய் நிலைக் கண்ணாடியில் பார்த்தேன். கன்னம் ஒரு பக்கம் உப்பி இருப்பது போல தெரிந்தது! எல்லாம் மனப்பிராந்திதான்.

  உண்மையில் பேய் இருக்கிறதா? இங்குள்ளோர் சிலரிடம் பேசினேன். இருப்பதாகத்தான் கூறுகிறார்கள். அவை மனிதர்களைப் பிடிக்க வருமாம். அவைகளிடமிருந்து தப்பிக்கவே மக்கள் பேய்போல உடையணிவார்களாம். அதுதான் பின்னர் ஹாலவீன் விழாவாக மாறியதாம்.

    கலிங்கத்துப் பரணியில் கூளி என்னும் பேய்கள் குருதியில் கூழ் காய்ச்சிக் குடித்துவிட்டுக் கொட்டமடிக்கும் காட்சியை செயங்கொண்டார் அப்படி வருணிப்பார்!

   சிலப்பதிகாரத்தில் சதுக்கப் பூதம் குறித்து இளங்கோவடிகள் விலாவாரியாகப் பேசுகிறாரே!

   ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அணையைக் கட்ட முனைந்தபோது  ஆற்றில் பாய்ந்து வந்த பெருவெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி ஒரே இரவில் அந்த அணையைக் கட்டி முடித்தவை பேய்கள்தாம் என்று இன்றும் அவ்வூர் மக்கள் பேசிக்கொள்கிறார்களே!

    அட அவ்வளவு ஏன்? நம் திருவள்ளுவரே பேய்கள் இருப்பதாகத் தம் குறளில் ஆவணப் படுத்தியுள்ளாரே!

  ‘உலகத்தார் உண்டு என்பதைச் சிலர் இல்லை என்கிறார்கள். அந்தச் சிலர் பேய்கள் என்றே கருதப்படுவர்’ என்னும் பொருள்பட அக்குறள் அமைந்துள்ளது.(குறள் 850)

பேய் ஞாயத்தை இந்த அளவில் நிறுத்திக் கொள்கிறேன்.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

11 comments:

  1. ஐயா. பேய் உண்டோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்த வித்தியாசமான விழாவைப் பார்க்கும் பொழுது பேய்கள் உண்டென்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  2. ஆம் அவர்களின் இந்த விழா கொண்டாடும் விதம் சுவாரசியம்தான். படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன.

    எல்லா ஊர்களிலும் நாடுகளிலும் அடிப்படையாக ஒன்று போல்தான் அதாவது பேய்கள், வழிப்பாடு நம்பிக்கைகள். கொண்டாட்டம்தான் வித்தியாசப்படுகிறது என்று எனக்குத் தோன்றுவதுண்டு. முன்னோர் வழிபாடு என்றும் இதைச் சொல்கிறார்களே.

    வித்தியாசமான பேய் உருவங்கள். சென்ற வருடம் இந்த வருடம் எல்லாம் நம்மூரில் கொலுவில் கொரோனா கான்செப்ட் கொலு அமைப்பு இருந்தது போல் கொரோனா பேயும், மாஸ்க் சானிட்டைசர் பயன்படுத்தும் பேய்கள் கூட எதிர்பார்த்தேன் அந்த உருவம் விற்பனைகளில் அல்லது உருவாக்கங்களில் இல்லை போலும்!

    கீதா

    ReplyDelete
  3. Loved your blog sir...
    It's so good to know about their culture 😍

    ReplyDelete
  4. மோரா கரூர்1 November 2021 at 06:59

    ஐயா, பயமெனும் பேய்தனை விரட்டியடிக்க பேய் எனும் உருவங்களைக் காட்டி பயமுறுத்துகிறார்கள். தங்களின் இந்த பனிக்காலத்துப் பதிவும் அழகிய பயங்கர படங்களும் படிக்கும்போது சிறுவயதில் கருத்த இருட்டில் தனியாக நடக்கும் போது விண்மீன் வெளிச்சத்தில் பனைமரம் அசைந்தால் கூட பேயாய்ப் பயங்காட்டும்
    இங்கு மண்டை ஓடுகளும் எழும்புக் கூடுகளும் சாலையிலே படுத்திருந்தால் பார்ப்போர் யாவர்க்குமே பதறத்தான் செய்யும் அதை தங்களின் எழுத்தின் மூலமே ஏற்படுத்தி இருக்கிறீர்கள்
    நன்றி!!!

    ReplyDelete
  5. ஆம் ஐயா கொடிவேரி அணைக்குப் பேயணை என்று தான் எங்கள் ஊரில் கூறுகின்றனர்

    ReplyDelete
  6. நல்ல விழா...

    குறளோடு முடிவு அருமை...

    ReplyDelete
  7. படித்துள்ளேன். இப்போது உங்கள் பதிவு மூலமாக புதிய செய்திகளை அறிந்தேன். சிறப்பு.

    ReplyDelete
  8. அருமையான பதிவு அய்யா!

    Halloween என்பது All Hallow’s Eve என்பதின் மருவல்.

    நவம்பர் 1 அன்று All Hallow’s Day என்றும் Saint Saint’s Day என்றும் சில வகை கிருத்துவர்களால் கொண்டாடப்படுகிறது. (Hallow = ஹேலோ = புனிதர்களின் தலைக்குப்பின் தோன்றும் ஒளி வட்டம்).

    இதற்கு முந்தைய இரவு (eve) என்பதால் அக்டோபர் 31 இரவு All Hallow’s Eve! அது மருவி Halloween ஆனது!

    இதே தினத்தை, மெக்சிகோ, குவாட்டமாலா போன்ற லத்தின் நாடுகளில் வசிக்கும் ஆஸ்டெக் மற்றும் மாயன் போன்ற பழங்குடி இனத்தவர் “Dia del de mortes” (ஸ்பேனிஷ் மொழியில் “இறந்தவர்களின் தினம்”) என ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள். அத்தினத்தன்று இடுகாட்டுச் சென்று தம் முன்னோரின் சமாதியில் படையளிட்டு வழிபடுகின்றனர்.
    (சென்ற வாரம் குவாட்டமாலாவில் இருந்த நான் இதை நேரில் கண்டேன்.. தங்களுக்கு புகைப்படம் அனுப்புகிறேன்)

    இதில் நான் உணர்ந்த குறிப்படத்தக்க ஆச்சிரியம் என்னவென்றால், நம் நாட்டில் பலர் தம் முன்னோர்களை/முன்னோர்களுக்காக வழிபடும் நாளான மகாலய அமாவாசை, வருடந்தோறும் ஏறக்குறைய (ஒரே மாதத்திற்குள்) இதே சமயம் வருவதுதான்!

    கிருத்துவ மதமாவது பின் தோன்றியது எனலாம்… பண்டைய மதங்களான இந்து, ஆஸ்டெக் மற்றும் மாயன் இவைகளுக்குள் எப்படி இந்த ஒற்றுமை!?

    ReplyDelete
  9. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நம்பிக்கை. ஹாலோவின் தினத்தன்று என் மகள் வசிக்கும் இடத்திற்கு அருகில் நடந்து சென்ற பொழுது வீடுகளுக்கு முன் அலங்காரத்தையும், பேய்கள் போல அலங்கரிக்கும் கொண்டு பரிசு கேட்டு வந்த குழந்தைகளையும் பார்க்க முடிந்தது.

    ReplyDelete
  10. புதுமையான திருவிழாதான்...

    ReplyDelete