Tuesday 28 June 2022

அன்பர் பணி செய்யும் அன்பாலயம்

    இன்று எங்கள் பெயரனின் இரண்டாம் பிறந்த நாள். அவனுடைய பெற்றோர் கனடாவில் எளிய விழாவாகக் கொண்டாடுவார்கள். இந்தியாவில் உள்ள நாங்கள் அவனுடைய பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்து செயலில் இறங்கினோம்.

   இன்று மாலை சரியாக ஏழுமணி. எங்கள் மகிழுந்து கரூர் தான்தோன்றிமலையில் இயங்கும் அன்பாலய வாசலில் நின்றது. நிர்வாகி குணசேகரன் அன்புடன் வரவேற்றார்.

  அன்பாலயத்தில் முப்பத்து மூன்று மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் வசிக்கிறார்கள். இவர்களில் சிலருக்குக் காது மட்டும் கேட்காது; சிலரால் வாய் பேச இயலாது; மற்றும் சிலருக்குக் கண் தெரியாது. இரண்டு குழந்தைகளுக்குக் காதும் கேட்காது; பேசவும் இயலாது. இந்தக் குழந்தைகளைத் தாயினும் மேலாகப் பார்த்துக்கொள்ள இரு காப்பாளர்கள், மூன்று சிறப்பாசிரியர்கள் குறைந்த ஊதியத்தில், நிறைந்த பணியாற்றுகின்றனர்.

   இந்த அன்பாலயம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்புப் பள்ளியாகும். இங்குள்ள குழந்தைகள் இங்கு எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்க முடியும். அதன் பிறகு திருச்சி போன்ற பெருநகரங்களில் உள்ள சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.







   அரசு அளிக்கும் நிதியோடு, நன்கொடையாளர்களின் நிதியாதரவில் இந்த மையம் முப்பத்து மூன்று ஆண்டுகளாகச் சிறப்பாக நடைபெறுகிறது.

   நாங்கள் அன்புடன் வழங்கிய இரவு உணவை இந்தக் குழந்தைகள் சுவைத்து மகிழ்ந்தனர். முன்னதாக ஒரு சிறுவன் எழுந்து நின்று, எங்கள் பெயரனை வாழ்த்திப் பேசினான்; உணவு அளித்தமைக்கு நன்றி கூறினான்.

     நிறைவாக நாங்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துச் சொல்லி, இந்தக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்னும் முடிவோடு விடைபெற்றோம்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

6 comments:

  1. சிறப்பான செயல் ஐயா...

    தங்களின் பேரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. Ravichandar v.s.29 June 2022 at 12:02

    Happy birthday to your grandson.

    ReplyDelete
  3. மிகவும் சிறப்பான செயல்.

    உங்கள் பேரனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    கரூர் தான்தோன்றிமலையில்// கணவர் வீட்டின் குடும்ப தெய்வம்.

    கீதா

    ReplyDelete
  4. Great, heartful b’day celebration with Anbalayam kids !!

    ReplyDelete