Monday 1 February 2016

இக்கரைக்கு அக்கரை பச்சை

   நேற்று நானும் என் மனைவியும் மகிழ்வுந்தில் ஒரு நான்கு வழிச் சாலையில் பயணித்தோம். அளவான வேகத்தில் செலுத்தியபடி கொடைக்கானல் பண்பலை வானொலியில் ஒலிபரப்பான பிரதமர் மோதியின் மனதோடு குரல் உரையைக் கேட்டுகொண்டே வந்தேன்.


    நம் பக்கத்தில் அமர்ந்து தோழமையோடு நம் தோள்களத் தொட்டுப் பேசுவது போலவே அவருடைய பேச்சு இருந்தது. அவர் குறிப்பிட்ட ஒரு செய்தி என் சிந்தனையத் தூண்டியது.

   “இதை நரேந்திர மோதியும் செய்யவில்லை; இரயில்வே துறையும் செய்யவில்லை;  அந்த ஊர்மக்கள் செய்தார்கள். இப்போதெல்லாம் அந்த இரயில் நிலையத்தில் இரயில் நின்றால் பயணியர் சாளரத்தின் வழியாக தேநீர்க்காரர் வருகிறாரா என்று பார்ப்பதில்லை. மாறாக, அந்த இரயில் நிலையத்தின் சுவர்களையே உற்றுப் பார்க்கிறார்கள்” என்று சொன்னார் மோதி.

   அவர் குறிப்பிட்ட தானே இரயில் நிலையத்தில் உள்ளூர் இளைஞர் ஒன்று சேர்ந்து உள்ளூர் ஓவியரின் திறமைக்கு மதிப்பளித்து அவரைக் கொண்டு அழகான உள்ளூர் மரபு சார்ந்த ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய தாய்மொழியில் நல்ல பொன்மொழிகளை அழகாக எழுதி வைத்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம் மோதி சுவைபடக் கூறினார்.

    நம் ஊரில்  நல்ல பேச்சாளர் இருப்பார்; ஆனால் செலவு செய்து வெளி ஊரிலிருந்து பெரும் பேச்சாளரை பெறும் பேச்சாளரை  அழைத்து வருவோம். நம்  ஊர் கவிஞர்களை, ஓவியர்களை அங்கீகரிக்கமாட்டோம். நம் ஊரில் இருக்கும் பாடகருக்கு வாய்ப்புத் தரமாட்டோம்; ஆனால் சென்னைலிருந்து சினிமா பாடகரை அழைத்து வருவோம்.

    நம்மூர் மரபுவழி விளையாட்டான கபடியை ஒதுக்கிவிட்டு கிரிக்கெட் விளையாடுவோம். தாய்மொழியின் சிறப்பை உணராமல் பிற மொழிகளை நேசிப்போம்; பூசிப்போம். அழகான மனைவி அருகில் இருந்தாலும் அயலாளை நோக்கும் அவலமும் தொடரத்தானே செய்கிறது?

   இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல ஒரு மாயையில் இருக்கின்றோம். வீட்டுக்குப் பின்னால் உள்ள தோட்டத்துப் பச்சிலையின் சிறப்பை உணராமல் இருக்கின்றோம்.

   இதற்கு விதி விலக்காக, மோதி குறிப்பிடுவது போல உள்ளூர் திறமைக்கு மதிப்பளிக்கும் செயல்பாடுகள் நிகழ்ந்து கொண்டும் இருக்கின்றன.

 
  சில மாதங்களுக்குமுன் புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். மாநாட்டு அரங்கிலே உள்ளூர் கவிஞர்களின் கவிதை வரிகளும், அவற்றுக்கு ஏற்ற உள்ளூர் ஓவியர்களின் ஓவியங்களும் கண்ணைக் கவரும் வகையில், கருத்தைக் கவரும் வகையில் வைக்கப்பட்டிருந்தன. அதற்காக மாநாட்டு ஏற்பாட்டாளர் முத்து நிலவன் அவர்களைப் பெரிதும் பாராட்டினேன்.

   
அங்குதான் அப்படி என்றால், புதுக்கோட்டை நகராட்சி அலுவலகச் சுற்று சுவர்களில் உள்ளூர் ஓவியர் வெங்கடேசன் அவர்களின் மண்ணின் மணம் வீசும் வண்ண ஒவியங்கள் இடம் பெற்றிருந்தன.

     
அவ்வாறே, சிதம்பரம் நடராசர் கோவிலில் முகப்பு மண்டப மேற்கூரையில் உள்ளூர் ஓவியக் கலைஞரின் கைவண்ணம் கண்டேன்.

   நம் வீட்டுக் குழந்தை ஒரு தாளில் கிறுக்கினால்கூட, “என் மகன் எவ்வளவு அழகாக படம் வரைகிறான் பாருங்கள்’ என்று பாராட்டும் நாம் நம்  ஊர் அளவில் நம் நாட்டு அளவில் திறமைகளைப் போற்றத் தவறிவிடுகிறோம்.

   நம்முடைய பாராட்டும் பயனும் அயலாருக்கு, அயல்மொழிக்கு, அயல்நாட்டுக்குச் சென்று சேர்வது எனக்கு நியாயமாகப்படவில்லை. நம் வீட்டுத் தென்னைமரம் பக்கத்து வீட்டுக்கு  சாய்ந்து வளைந்து சென்று தேங்காய்களை உதிர்ப்பது போன்றதே இது. இத்தகைய  மனப்போக்கை முத்தழிழ் அறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் முடத்தெங்கு கலாச்சாரம் என்பார்.

    வாருங்கள்; நம் தோட்டத்துப் பச்சிலையைப் பயன்படுத்துவோம்.

      

6 comments:

  1. உண்மைதான் ஐயா
    உள்ளூரிலேயே உள்ள திறமைசாலிகள் போற்றப்பட வேண்டியவர்கள்
    போற்றுவோம்

    ReplyDelete
  2. நல்ல சிந்தனையைத் தூண்டிவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
  3. Lets celebrate our kith and kin having extraordinary knowledge.

    ReplyDelete
  4. தலைப்பே மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.பல காலமாகவே இத்தகைய போக்கு நம் மக்கள் மனதில் வேறூன்றிவிட்டது. அறிவாளிகளை விட்டுவிட்டு அரிதாரம் பூசியவர்களிடம் மனதைச் செலுத்தும் நம் மக்கள் மாற வேண்டும். நம்மவர்களும் அறிவாளிகளே, கலைஞர்களே என்பதை உணரவேண்டும். ஊக்கு விற்பவனை ஊக்குவித்தால் தேக்கு விற்கத் தயாராவான். அது போல ஊக்கமும், உற்சாகமுமே ஒருவனை வெற்றியடையச் செய்யும் எளிய முறை. தங்கள் கட்டுரையின் வரிகள் மட்டுமல்ல வரைபடங்களை நிழற்படமாக்கி அதை அழகுற வெளிப்படுத்திய பாங்கு போற்றத்தக்கது.

    ReplyDelete
  5. தலைப்பே மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.பல காலமாகவே இத்தகைய போக்கு நம் மக்கள் மனதில் வேறூன்றிவிட்டது. அறிவாளிகளை விட்டுவிட்டு அரிதாரம் பூசியவர்களிடம் மனதைச் செலுத்தும் நம் மக்கள் மாற வேண்டும். நம்மவர்களும் அறிவாளிகளே, கலைஞர்களே என்பதை உணரவேண்டும். ஊக்கு விற்பவனை ஊக்குவித்தால் தேக்கு விற்கத் தயாராவான். அது போல ஊக்கமும், உற்சாகமுமே ஒருவனை வெற்றியடையச் செய்யும் எளிய முறை. தங்கள் கட்டுரையின் வரிகள் மட்டுமல்ல வரைபடங்களை நிழற்படமாக்கி அதை அழகுற வெளிப்படுத்திய பாங்கு போற்றத்தக்கது.

    ReplyDelete
  6. This is true. I am sorry I do not know how to type in Tamil.Can anyone help?

    ReplyDelete