Friday 20 January 2017

வெள்ளையர் செய்த சூது

    வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்டபோது செய்த சூழ்ச்சிகளைவிட இப்போது அதிகமாகவே செய்கிறார்கள். அதுவும் நம் நாட்டின் இளைஞர்கள் இளம்பெண்களைக் குறிவைத்துத் திரை மறைவில் பல சதி வேலைகளைச் செய்கிறார்கள்.

    உலகிலேயே அதிக மனித வளம் கொண்ட நாடு இந்தியா என்பதைக் கண்டு பல வல்லரசு நாடுகள் உள்ளுக்குள் உதறல் எடுத்து மறைமுகமாக மோதுகின்றன. இதை நம் ஆட்சியாளர்கள் கண்டும் காணாமல் உள்ளனர்.

    நம்முடைய மண்ணில் இயற்கையாக விளையும் உணவுப் பொருள்களை உண்டு வளர்ந்த இந்திய இளைஞர்கள் அறிவாட்சித் திறனுடன் விளங்குவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விட்டால் இருபது ஆண்டுகளில் உலக நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள் என்பதை உணர்ந்து மறைமுகத் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.

1. கே.எஃப்.சி பீட்சா ஹட்,  கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நம் இளைஞர்களின் உணவுக் காலாச்சாரத்தை மாற்றிவிட்டன. மெல்லக் கொல்லும் நஞ்சைக் கலந்து விற்கிறார்கள். எதற்காக? மூளை மழுங்கச் செய்வதற்காகத்தான்.

2. நம் நாட்டுப் பசுக்கள் தரும் பாலைப் பருகும் இளைஞர்களின் மூளைத் திறனைச் செயலிழக்க வைக்கும் நோக்கத்தோடு மேலை நாட்டு மாடுகளை நம் நாட்டுக் கட்டுத் தறியில் கட்டி நாச்சுப் பாலைக் கறந்து விற்கத் தொடங்கிவிட்டார்கள்.

3. எஞ்சியுள்ள நாட்டு மாடுகளை அழிக்கும் வகையில் அதிக டாலர் கொடுத்து நம் நாட்டு மாடுகளின் இறைச்சியை இறக்குமதி செய்கிறார்கள். அறிந்தோ அறியாமலோ நம் ஆட்சியாளர்கள் இதற்கெள்ளாம் உடைந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனையில் வேதனை.

4. காலங்காலமாக நடந்து வந்த இயற்கை விவசாயத்தைத் திட்டமிட்டு, மலட்டு விதைகள், நச்சுப் பூச்சிக் கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். நம்மாழ்வார் புண்ணியத்தில் நிலைமை கொஞ்சம் சீரடைந்துள்ளது.

5. நம் நாட்டு இளைஞர்களை பைத்தியக்காரர்களாய் ஆக்கும் நோக்கில் பாலியல் இணையதளங்களை உருவாக்கி, அவர்கள் நல்ல கட்டுரைகளைப் படிக்கும்போது நடுவிலே காட்டுகிறார்கள்.

    இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ சதிகள் அரங்கேறுகின்றன. நல்ல வேளையாக இந்த ஜல்லிகட்டுப் பிரச்சனை விசுவரூபம் எடுத்து இளைஞர்களின் கண்களைத் திறந்து விட்டது. முதல் கட்டமாக கொக்கோகோலா போன்ற வெளிநாட்டுப் பானங்களைத் தடைசெய்ய வேண்டும் என்று களத்தில் இறங்கியிருக்கிறார்கள். மீண்டும் நம் ஊர் குண்டு சோடாவும் கலரும் கடைகளில் இடம்பெறும் என நம்புவோம்.

    இன்று போராட்டக்களத்தில் நிற்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களில் ஒருவர் ஒரு குறும்படத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளார். கி.பி. 1700 களில் தொடங்கி இன்றுவரை வெள்ளையர்கள் செய்யும் சூதுவாதுகள் எவையெவை என்பதை அருமையாகக் காட்சிப்படுத்தியுள்ளார். படத்தின் நிறைவில் பாரதியாரின் நெருப்புக் கவிதை ஒன்றைப் பொருத்தமாகச் சேர்த்துள்ளார். கோடை எஃப்.எம். இரவிச்சந்திரனின் கணீர்க்குரல் செய்திகளைச் சிந்தாமல் சிதறாமல் செவிகளில் கொண்டு சேர்க்கிறது. போராட்டக் களங்களில் பெரிய எல்.இ.டி திரைகளில் இப் படத்தைப் போட்டுக் காண்பிக்க வேண்டும்.

     இக் குறும்படம் தயாரித்த ரூபன் என்ற இளைஞர் பாரதி சொல்வதுபோல் ஓர் அக்னிக் குஞ்சாகவே எனக்குத் தோன்றுகிறார். இன்றைக்குப் போராடும் இளைஞர்களின் ஒரு குறியீடு அவர்.

    இந்த அக்னிகுஞ்சுகளை வெள்ளையர் என்னும் பொந்துகளில் வைத்தாகிவிட்டது. இனி அவர்களுடைய சூது நிலைத்து நிற்காது.

    அந்தக் காடு வெந்து தணியும் காலம் நெருங்குகிறது. நமது இளைஞர்கள் செல்வழி நன்று; வெல்வது உறுதி.


    குறும்படத்தை பின்வரும் இணைப்பில் காணலாம். https://youtu.be/tAT1b3m6jn4

10 comments:

  1. Replies
    1. குறும்பட இணைப்பிற்கு நன்றி...

      Delete
  2. நல்லதோர் குறும்படம். நன்றி.

    ReplyDelete
  3. உங்கள் பதிவு பற்றி இன்று என் தளத்தில் குறிப்பிட்டு இருக்கிகிறேன்.

    ReplyDelete
  4. இளைஞர்களுக்கான எழுச்சிஉரை. பல்லோருக்கும் பரவ வேண்டும். மக்கள் உணர வேண்டும வெளிமோகத்தில் திளைக்காமல். நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  5. துளசிதரன்: நல்ல பதிவு...அதுவும் இந்த நேரத்தில்...

    கீதா: நிச்சயமாக தற்சார்பு பொருளாதாரத்திற்கான எச்சரிக்கை மணி எப்போதோ அடிக்கப்பட்டும் இன்றேனும், இப்படியேனும் விழிப்புணர்வு வந்தால் நல்ல விசயம். குறும்படத்தைக் கொஞ்ச நேரம் பார்த்ததும் உணர்ச்சி மேலிட அதற்கு மேல் பார்க்கும் தைரியம் இல்லை....காந்தியின் பொருளாதாரத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப என்று நாம் கையிலெடுக்கிறோமோ அப்போதுதான் நமதுகிராமங்களும் வாழ்வியலும் காப்பாற்றப்படும்....

    நல்ல பதிவு!!!

    (எங்கள் தளத்தில் நாங்கள் இருவர் நண்பர்கள் எழுதுகிறோம். துளசிதரன், கேரளா, கீதா, சென்னை

    ReplyDelete
  6. உண்மை ஐயா
    வெளி மோகத்தில் இருந்து மக்கள் வெளிவர வேண்டும்

    ReplyDelete
  7. வெள்ளையர்கள் நஞ்சாக்கும் நாகரிகத்தை விதைக்க நமது ஆட்சியாளர்கள் தான் காரணம். ஒரு சில செய்திகள் புலனம் வாயிலாக வாசிக்கும் பொழுது எதிர்காலம் என்பது வினாக்குறியாகத் தோன்றுகிறது. இயற்கையை அழித்து செயற்கையாகச் செறிவூட்டப்பட்ட காய் கனிகளை உண்ணப் பழக்கிவிட்டனர். அதிலும் தற்போதைய இளைஞர்களின் எழுச்சி தமிழகத்துக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே ஒரு சவால் விடுவது போன்று உள்ளது. இவ்வளவு வீரத்தையும், விவேகத்தையும் எங்கே வைத்திருந்தனர் எனத் தெரியவில்லை. இதே மனஉறுதியுடன் இருப்பார்களானால் அய்யா அப்துல்கலாம் அவர்களின் 2020இல் இந்தியா வல்லரசாவது உறுதி. இனி எந்த இலவசத்துக்கும், கையூட்டுக்கும், பசப்புமொழிகளுக்கும் தமிழன் தலைவணங்கவும் மாட்டான், மயங்கவும் மாட்டான். அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கம் இன்று ஏறுதலுவலுக்காகவும் அவர்கள் வாயிலாக நாட்டு மாடுகளை அழிக்கும் போக்கை மாற்றவும், வெளிநாட்டு குளிர்பானங்களை ஒதுக்கித்தள்ளவும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஒன்றுபடுவோம் உயர்வடைவோம்.
    முனைவர் ரா.லட்சுமணசிங், கரூர்.

    ReplyDelete
  8. ஜல்லிக்கட்டுக்கு எதிரான மாணவர் புரட்சி இப்போது வெற்றி பெற்றுவிட்டது. சரி. ஆனால், இனிவரும் நாட்களிலும் இம்மாதிரியான தன்னெழுச்சியான போராட்டம் ஏற்படும் என்றோ, வெற்றிபெறும் என்றோ உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஏனெனில் இன்றைய வெற்றிக்கு முக்கிய காரணம், கலைஞரோ, அல்லது ஜெயலலிதாவோ முதல்வராக இல்லை என்பதே. பன்னீர் அரசின் காவல்துறை அடக்கி வாசித்ததும் ஒரு காரணம். எனவே, இன்றைய வெற்றி சரியான லட்சியத்திற்காகவும், சரியான சூழ்நிலையாலும் கிட்டிய வெற்றிதான் என்பதை மறந்துவிடக்கூடாது. இதை வைத்து, கொக்கோ கோலாவை ஒழிப்போம், இன்னொன்றை ஒழிப்போம் என்றெல்லாம் வீர முழக்கம் இடுவது சரியில்லை. இளைஞர்களின் கனவே பன்னாட்டு நிறுவனங்களில் அதிகச் சம்பளம் கிடைக்கும் வேலைக்கு போகவேண்டும் என்பதாக இருக்கையில், அந்நிறுவனங்களின் பொருட்களை நாம் பயன்படுத்தமாட்டோம் என்று சொல்வது அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லையே! - இராய செல்லப்பா , நியூ ஜெர்சி.

    ReplyDelete