Saturday 29 April 2017

உயிரைக் குடிக்கும் உப்பு- சிறுகதை முனைவர் அ.கோவிந்தராஜூ

   “இண்டியன்ஸ் ஆர் ஃபூல்ஸ். தே ஹேவ் இனஃப் மணி பட் நோ ப்ரெய்ன்” என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.
அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர்.   கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது..

  டாக்டர் இர்வின்  இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்

     . மேலும் அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர். பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது  குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர். நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்தபோது ஒருமுறை இவரை நூலகத்தில் வைத்துப் பேசியிருக்கிறேன்.

சதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்:

    “இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள். காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய்  போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள். வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன.

   இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம். நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.. பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. சென்னையில் நம் நாட்டின் சப்வே பிரான்ச்சில் பீசாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலை மோதுகிறது”

   “தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன. பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன. வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை. உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.”

    “ ஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக் கொள்வோம். அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேர்களை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றிவிடுவோம்.”

    “அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை?” - ஒரு பண முதலை கேட்டது.

  ஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம். இனி பத்து வயது சிறுவர்கள் கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்லவேண்டும்.”

   “நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும். அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதய நோயாளிகளாகவே இருப்பர். அவர்கள் அனைவரும் இரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம்.”
   “அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன?”
                            # # #
 “உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு”

     ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின.

    இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது. எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன. கல்லுப்பின் பயன்பாடு அறவே  நின்றுவிட்டது.

 சரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது. பெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன. அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன.

                           # # #
   இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குமுன் திரண்டார்கள்.

   மெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்: 

  “பொது மக்களே! நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா? நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்?   
                
    “ஃபெரஸ் சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?”.

   “ஒரு குண்டூசி முனையளவு சயனைட் வயிற்றுக்குள் இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.”

 “நாம் வாங்கும் பொடிஉப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.”

  ‘2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுன் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார். ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள். அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.”

     “ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?. இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான். போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.”

   கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன. இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.”

   “நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன. வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப்  பேசுவார்கள். ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.”

   “போதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.”

   சுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்தார்கள்.
  அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர்.


   இதை எல்லாத்  தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள். ஆனால் எதிலும் ஒளிபரப்பவில்லை! இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது!.

9 comments:

  1. உண்மையிலேயே நமது தொலைக் காட்சிகள்தான் சமூகப் பொறுப்பு மிக்கவை

    ReplyDelete
  2. மிகவும் அருமையான தகவல் ஐயா. இன்று படித்தவர்கள் தான் கவர்ச்சி விளம்பரங்களுக்கு பலியாகின்றனர். தகவலுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  3. நீங்கள் அவ்வப்போது பதிவிடும் அறிவுப்பூர்வமான சிந்தனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி ஐயா.

    ReplyDelete
  4. நல்ல வேளை, டாக்டர் இரவின், சின்னம்மாவின் உறவினர்களை சந்திக்கவில்லை.

    ReplyDelete
  5. அருமை நன்றி

    ReplyDelete
  6. அருமை நன்றி

    ReplyDelete
  7. அருமை நன்றி

    ReplyDelete
  8. அருமை நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  9. உப்பின் விலை உணவுப்பண்டங்களில் மிகவும் மலிவானது. நமது உடலில் போதுமான உப்புச்சத்துக்காக உணவில் சேர்க்கிற பண்டமாக உப்பு இருந்த்தது. அன்றைய காலத்தில் உப்புக்குறவர்கள் கழுதைமேல் உப்புப்பொதியை ஏற்றி பண்டமாற்றுமுறையில் உப்பைக் கொடுப்பர். சங்க இலக்கியத்தில் “உப்புக்கு நிகர் நெல்லே” என்ற வரியின் வாயிலாக உப்பும் நெல்லும் சமமாக மதிக்கப்பட்டுள்ளது. இயற்கையாக விளைவிக்கப்படும் எந்தப்பொருளும் மனிதனுக்குத் தீங்கு தருவதில்லை. இராசாயனக்கலப்பு என்று வந்ததோ அன்றே மனிதனுக்குப் புதுப்புது நோயும் வந்தது. உணவில் சுவையைத் தூண்ட வேண்டும் பணம் சம்பாதிக்க வேண்டும் என வணிக நிறுவனங்கள் புதுப்புது கலப்படங்களைச் செய்து வருகின்றனர். கரூரில் எத்தனையோ உணவகங்கள் உள்ளன. ஒரு சிலவற்றில் கூட்டம் அலைமோதும். ஆனால் ஒரு உணவகத்தில் மட்டும் கூட்டமே இருக்காது. அது ஒரு இயற்கை உணவு விடுதி. உழவர் சந்தை வழியாகச் சென்றால் வெங்கடேஸ்வரா லாட்ஜ் எதிரில் அமைந்துள்ள “நளன் உணவகம்”. ஒவ்வொரு நாளும் ஒரு “சூப்”, இட்லியில் பலவகை, நான் கொள்ளு இட்லியை விரும்பி உண்பேன். ஒவ்வொரு நாளும் ஒரு மூலிகை இரசம். சிறுதானிய தோசைகள் அதன் பயன்பாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மட்டுமே பயன்பாடு. மிளகாயைப் பயன்படுத்துவதே இல்லை. வயிறு காந்தும் என்பதற்காக மிளகை மட்டுமே பயன்படுத்துகின்றனர். உணவின் முக்கியத்துவத்திற்காக இந்த தகவலைக் குறிப்பிட்டேன். நிலத்தை உழுபவர்கள் உழவர்கள். உப்பை விளைவிப்பவர்கள் உழாஉழவர்கள் என இலக்கியம் குறிப்பிடுகிறது. உப்பில் இவ்வளவு தீமைகள் உள்ளது என்பதை ஆவணப்படுத்தியுள்ளார். கவனமுடன் வாழ வேண்டும். உடல் உபாதைகளில் இருந்து விடுபட வேண்டும். கல் உப்பைப் பயன்படுத்த வேண்டும். நன்றி
    பேராசிரியர்.ரா.லட்சுமணசிங்

    ReplyDelete