Saturday 4 November 2017

விழி நிறைய விடை பெறுகிறோம்

   கனடாவில் எங்கள் அருமை மகள் செல்வி புவனாவுடன் ஐந்து மாதங்கள் வசித்தோம். அவள் காட்டிய அன்பில் திளைத்தோம். ஐந்து மாதங்கள் ஐந்து மணித்துளிகளாய் பறந்து விட்டன. இன்று விடை பெறும் நாள். “அப்பா, இது உங்களுக்கும் அம்மாவுக்குமான விமான டிக்கெட்” என்று சொன்னபடி அச்சியந்திரம் துப்பிய பயணச் சீட்டைக் கொடுத்தாள். அதில் உள்ள விவரங்களைச் சரிபார்க்கும்போதே விழிகளும் மனமும் நிறைந்தன; கண்ணீராலும் நினைவுகளாலும். 

    
  இன்று அதிக தூரம், அதிக நேரம்  நடக்கிறேன். நான் நாளும் பார்த்து, பேசிப் பழகிய ஒப்பிலாப் பேரழகுடன் ஓட்டமும் நடையுமாய் ஓடும் ஒட்டாவா ஆறு, அதில் நீந்தி மகிழும் கனடா வாத்துகள், நாரைகள், கடற்காகங்கள் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை கண்ணாரக் கண்டு விடைபெறுகிறேன்.

   ஆற்றங்கரையில் வயதுக்கு வந்த இளம்பெண்ணைப் போல வளர்ந்து எழில் கொஞ்சும் மரக்கூட்டங்களைப் பார்த்துக் கையசைத்து விடைபெறுகின்றேன்.

   ஆற்றைப் பார்த்தவாறு அழகுற அமைக்கப்பட்டிருந்த ஓர் இருக்கையில் அமர்ந்து பழகிய அழகிய விழுமிய மாமனிதர்களை எல்லாம் கைப்பேசி வழியே அழைத்து அவர்களை விட்டுப் பிரிவதைத் தட்டுத் தடுமாறியபடி சொன்னேன்.

  என்னை முதன் முதலில் கைப்பிடித்து அழைத்துச் சென்று காடுகளையும் குன்றுகளையும் சுற்றிக்காட்டிய நண்பர் முருகானந்தம்,  அவர்தம் அன்புத் துணைவியார் விருந்தோம்பல் திலகம் லதா முருகானந்தம், அமுது படைத்து அன்பு காட்டிய அருமைப் பெண்மணி ஜெயா கணேசமூர்த்தி, தமிழ்ச் சங்க நிகழ்வில் தலைமையேற்க வைத்த ஆற்றல்சார் அம்மணி அனிதா வருண், தமிழ் ஆர்வலர் சுந்தரமூர்த்தி, 
டொரண்டோவில் பார்த்துப் பழகிய எழுத்தாளர் அகில், பேராசிரியர் நா.சுப்பிரமணியன், பேராசிரியர் சு.பசுபதி, மருத்துவர் இரா.இலம்போதரன் ஆகிய அனைவரிடமும் பேசி நன்றி பாராட்டி விடை பெற்றேன்.

    அவ்வப்போது நான் பதிவிட்ட நாற்பது பயணக் கட்டுரைகளைப் படித்தும், பகிர்ந்தும், பின்னூட்டம் இட்டும் உற்சாகப்படுத்திய வலைப்பூ நண்பர்கள், முகநூல் நண்பர்கள், வாட்ஸப் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. சில கட்டுரைகளை வெற்றிமுனை மாத இதழில் வெளியிட்டுச் சிறப்பித்த அதன் முதன்மை ஆசிரியர் நீதிபதி மூ.புகழேந்தி, ஆசிரியர் முனைவர் மோ.பாட்டழகன் ஆகியோரை இத் தருணத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

  இங்கே இளைய மகளும் எங்கள் குடும்பத்தில் ஒருவர் எனச் சொல்லத்தக்க தம்பி இளம்பொறியாளர் குமரேசனும் பயண ஏற்பாட்டிற்கு உறுதுணையாக உள்ளார்கள்.

      இந்த ஐந்து மாதங்களில் ஆறுகள், காடுகள், குன்றுகள், குளங்கள், நாடு நகரங்கள் என எல்லா இடங்களிலும்  பல சமயங்களில் தனியாளாய்ச் சுற்றித் திரிந்தேன். ஆனால் கசப்பான அனுபவம் எனச் சொல்லும்படியாய் ஒன்றுகூட இல்லை. எங்கும் தூய்மையானக் காற்றும் தண்ணீரும் இருப்பதால் எமக்கு நோய்நொடி என்பது எள்ளளவும் வந்ததில்லை. அதற்கு இந்த நாட்டில்  நடக்கும் நல்லாட்சியே காரணம்.

   இப்படி வகுத்தான் வகுத்த வகையால், கனடா பயணத்தை இனிதே நிறைவு செய்து, இனிமையான நினைவுகளுடன் அமெரிக்காவை நோக்கிப் பறக்க ஆயத்தமாகிறோம்.

இன்று கனடா; நாளை அமெரிக்கா.

     அங்கே எங்கள் பெரிய மகள் டாக்டர் அருணாவும் மாப்பிள்ளை சிவ கணேஷ் அவர்களும் ஆசை ஆசையாய் எங்களை அன்புடன் வரவேற்பதற்குப் பூங்கொத்துடன் காத்திருக்கிறார்கள்.

வாழ்க கனடா! வளர்க அதன் புகழ்!
...............................
முனைவர் . கோவிந்தராஜூ,
கனடாவிலிருந்து.

   



12 comments:

  1. தங்கள் பயணக்கட்டுரைகள் வாயிலாக நாங்களும் உங்களுடன் கனடாவில்​ பயணித்த , கனடாவைத் தரிசித்த, நிறைவைப் பெற்றோம்.
    கட்டுரைகள் படங்கள் அனைத்தும் வெகு அருமை. தொடர்ந்து தங்கள் அமெரிக்கப் பயணமும் சிறக்க வாழ்த்துகள்.
    "மகள் தந்தைக்காற்றும் உதவி'யை செவ்வென நிறைவேற்றுகிற புவனாவுக்கு அன்பு விசாரிப்புகள்.

    ReplyDelete
  2. நாங்களும் பிரிய(யா) விடையை கனத்த இதயத்துடன் கனடாவிற்கு கொடுத்து ,

    ஆவலுடன் அடுத்த இன்னிங்ஸ் அமெரிக்காவில்!

    BON VOYAGE!

    ReplyDelete
  3. ஆகா
    அமெரிக்காப் பயணமா
    மகிழ்வோடு காத்திருக்கிறோம் ஐயா

    ReplyDelete
  4. God bless you for another set of tasty articles.

    ReplyDelete
  5. Kodai vidumuraiel thangalai santhikka ninaithi vaaippai thavarvittu katturaikalmoolam kanadavil santhathil mikka mahilchi aiya. Adutthu amerikkavil santhikkum avaludan

    ReplyDelete
  6. படித்த எங்களுக்கே கண்ணீர் வருகிறது
    உவப்ப தலை கூடி உள்ளப்பிரிகிறீர்கள்
    இன்னொரு அற்புதத்தை உங்கள் விழிகள் வாயிலாக காண காத்திருக்கிறோம்

    ReplyDelete
  7. Your enthusiasm to enjoy every walk of life will keep you happy always.Best wishes

    ReplyDelete
  8. உங்களுடனேயே வந்ததுபோலவும், சுற்றித் திரிந்ததுபோலவும் இருந்தது. நேரத்தை நல்லபடியாக பயன்படுத்தியதோடு எங்களுடனும் பகிர்ந்துகொண்டீர்கள். உங்களது பதிவுகள் மூலமாக பல செய்திகளை நாங்கள் அறிந்துகொண்டோம். பிரிவின் ஏக்கத்தை நாங்களும் உணரும் அளவு வைத்துவிட்டீர்கள் உங்கள் எழுத்து மூலமாக.

    ReplyDelete
  9. தங்களது அமெரிக்க பயணம் சிறப்படைய எம் உள்ளார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா!

    ReplyDelete
  10. ஐயா தங்களது கனடா பற்றிய பல தகவல்கள் அறிந்தோம். அங்கு தமிழ் எப்படி வாழ்கிறது என்பதையும் அறிய முடிந்தது. நாங்களும் கனடாவை விட்டுப் பிரிவது போன்ற வருத்தம். அடுத்து அமெரிக்க பயணமும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ஐயா!

    கீதா

    ReplyDelete
  11. கனடாவின் அருமைகளை ஒளிப்படங்கள் மற்றும் எழுத்துக்கள் வாயிலாகத் தெரிவித்தீர்கள். பயனுள்ள தகவல்கள் அறிந்தும், ஒளிப்படங்களைக் கண்டும் மகிழ்ந்தேன்.. அடுத்து அமெரிக்காவின் சிறப்புகளைக் கடந்த தங்கள் பயண அனுபவத்தைக் காட்டிலும் புதிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன். தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி)
    கரூர் - 5

    ReplyDelete
  12. அன்பு நண்பர் அவர்களுக்கு அன்பான வணக்கம்.
    வழக்கம் போல் கணினி பலநாட்கள் கோளாறு. ஒருவகையில் சரியாக, இன்று பார்த்தேன். பிரிய முடியா பிரிவால் தங்கள் உள்ளம் வாடுவதைக் கண்டு வருத்தமுற்றேன். இந்தப் பிரிவு இயல்பானதே. வருந்த வேண்டாம்.
    வெற்றிமுனைக்கும் நன்றி சொல்லியுள்ளது நன்றிக்குரியது. வாருங்கள். தமிழகம் பல வினோதமான செய்திகளுடன் காத்துக்கொண்டுள்ளது. வாருங்கள். அமெரிக்காவில் எவ்வளவு நாட்கள்? அங்குதான் என் நண்பர் ஓக்ளஹாமாவில் உள்ளார். தமிழாயும் நல்லார். வந்தவுடன் தெரிவியுங்கள். தொலைபேசி எண்ணை அனுப்புகின்றேன். நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete