Thursday 3 March 2022

காட்டில் நடந்த திருமணம்

 

உலகக் கானுயிர் நாள்(மார்ச் 3)

 சிறப்புக் கவிதை

 

காட்டில் நடந்த திருமணம்



 

காட்டில் நடந்த திருமணம்

   கண்ணில் இன்னும் நிற்குதே

ஏட்டில் எழுதிப் பார்க்கிறேன்

   எழுத எழுத நீளுதே!

 

காட்டு யானைக் கூட்டத்தில்

   காதல் கொண்ட இரண்டுக்குக்

காட்டு ராசா தலைமையில்

   கலக்க லான திருமணம்!

 

பத்து நூறு மின்மினிப்

   பூச்சி தந்த ஒளியிலே

புத்தம் புதிய ஆடையில்

   பூனை ஒன்று பாடிட

 

பாட்டைக் கேட்டு மயில்களும்

   பைய வந்தே ஆடின!

நாட்டம் கொண்ட நரிசில

   நட்டு வாங்கம் செய்தன!

 

கெட்டி மேளம் கொட்டிட

   கிட்ட வந்த மான்களும்

ஒட்டித் தாளம் போடவே

   ஓடி வந்த முயல்களும்

 

இரட்டை நாத சுரங்களை

   இரண்டு புலிகள் ஊதிட

அரட்டை அடித்துக் குரங்குகள்

   அட்ட காசம் செய்தன!

 

ஓநாய் எல்லாம் வந்தன

   ஒன்று சேர்ந்து கொண்டன

கானாப் பாட்டுப் பாடியே

   கால்கள் வலிக்க ஆடின!

 

தாலிக் கட்டி முடிந்ததும்

   தடபுட லான பந்தியில்

வேலி தாண்டி மந்திகள்

   விரைந்து சென்று குந்தின!

 

மெல்ல வந்த கரடிகள்

   மேவும் வாழை இலைகளில்

நல்ல நல்ல உணவினை

   நகைத்த வாறு படைத்தன!

 

முப்ப தானை வரிசையாய்

   மூங்கில் செடிகள் நட்டன!

இப்ப டித்தான் திருமணம்

   இனிதே நடந்து முடிந்தது!

 

    -கவிஞர் இனியன், கரூர்

     துச்சில்: கனடா

 

 

 

4 comments:

  1. இன்றைய தினத்துக்கு தகுந்த கவிதை ஐயா.

    ReplyDelete
  2. அருமை. நீங்களும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள் நானும் ரசித்து வாசித்தேன் ஐயா.

    இன்றைய தினத்திற்குப் பொருத்தமான கவிதை!

    கீதா

    ReplyDelete