Tuesday 19 July 2016

திருக்குறள் இனிய(ன்) வெண்பா


கல்லென  கல்லார் கிடப்பர்; உலர்ந்திட்ட
புல்லென  தள்ளுமே  இவ்வுலகு- ஆதலால்
கற்க கசடற கற்பவைக்  கற்றபின்
நிற்க  அதற்குத்  தக.



இருமுறை  எச்செயலும்  எண்ணுக;  இன்றேல்
வரும்பல துன்பங்கள் வாழ்வினிலே-  ஆதலால்
எண்ணித் துணிகக் கருமம்  துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு



நெல்லையார் கொட்டினும்  அள்ளலாம்; கொட்டிய
சொல்லையார் அள்ளிட  லாகும்?- அதனாலே
யாகாவா ராயினும்  நாகாக்க  காவாக்கால்
சோகாப்பர்  சொல்லிழுக்குப்  பட்டு.



சிறுதுரும்பும் பல்குத்த லாகுமே; சான்றோர்
தருஞ்சொல்லில் ஒன்றானும் நன்றாகும்-  ஆக
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற  பெருமை தரும்.



பொய்யும் புறமும்  சுவர்ப்பட்ட பந்தினைப்போல்
எய்யும் மனிதரைச் சேருமே-  ஆதலால்
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற்  பயனிலாச்  சொல்.



தீம்பால் தயிராகக்  காத்திருக்க; சூல்தாங்கும்
தேன்மொழி வலிஎன்றால் காத்திருக்க லாகாதே
தூங்குக தூங்கிச்  செயற்பால  தூங்கற்க
தூங்காது செய்யும்  வினை.



நோக்கின் பிறன்மனை  பேர்கெடும்;  தன்மனை
நோக்கான் எனினும்  பெயர் கெடும்-  ஆதலால்
செய்தக்க அல்ல செயக்கெடும்  செய்தக்க
செய்யாமை  யானுன்  கெடும்.



பணத்தைப் பெருக்கென பாரதி  சொன்னான்
திரவியம் தேடென்றாள்  ஒளவையும்-  ஆதலால்
செய்கப் பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எகதனிற்  கூரிய  தில்.



நன்றுசெய்ய எண்ணிடின் என்றுசெய்ய?  நன்றியை
இன்றுசெய்க; நாளைக்  கியலுமோ  யாரறிவார்?
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க  மற்றது
பொன்றுங்கால் பொன்றாத்  துணை.



உடலால்  உழைப்பின் உயர்தல் உறுதி
உடலால் வியர்வை  விளைபயன்  பற்பல
தெய்வத்தான்  ஆகா  தெனினும்  முயற்சிதன்
மெய்வருத்தக்  கூலி  தரும்.

8 comments:

  1. குறளால் குறளுக்கே குறிப்புரைத்த இனியனவர்
    இறவாப் புகழ்பெற்றார் காண்!

    ReplyDelete
  2. குறளால் குறளுக்கே குறிப்புரைத்த இனியனவர்
    இறவாப் புகழ்பெற்றார் காண்!

    ReplyDelete
  3. Really Amazing compilation sir. You frequently make me astonish about your personality. How your small head could contain such a wonderful thought? What a wonderful person you are with a strong love towards Kural! It is not VENBA; It is always VELLUM PA. நெல்லையார் கொட்டினும் அள்ளலாம்; கொட்டிய சொல்லையார் அள்ளிட லாகும்? Very beautiful like to ponder. Thanks for your thought provoking INIYAN VENBA. Feel very proud to be your disciple sir.

    ReplyDelete
  4. நல்ல சிந்தனை, நல்ல கருத்து திருவள்ளுவரின் குறளுக்கு மேலும் வலுச்சேர்த்துள்ளது. நன்று.

    ReplyDelete
  5. ஆகா.
    குறளுக்குப் பெருமை சேர்க்கும் வெண்பாக்கள்.
    அருமை அய்யா

    ReplyDelete
  6. ஆகா.
    குறளுக்குப் பெருமை சேர்க்கும் வெண்பாக்கள்.
    அருமை அய்யா

    ReplyDelete