Wednesday 29 March 2017

மனுஷ்ய புத்திரனும் மதி மயக்கமும்

   ஹமீது என்கிற மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை நான் விரும்பிப் படிப்பதுண்டு.
அவருடைய நூல்களை என்னிடம் இளங்கலை தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களிடத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

     தெளிவு பெற்ற மதியாளர் என்ற எனது கணிப்பு தவறோ என எண்ணும் வகையில் அவருடைய கட்டுரை ஒன்று தி இந்து தமிழ் நாளிதழில் இன்று வெளியாகி உள்ளது.  அவர் ஒரு முஸ்லீம் என்பதால் வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு வீடு தர மறுக்கிறார்கள் என்பது ஒட்டு மொத்தத் தமிழ் நாட்டின் மீது அவர் கூறும் குற்றச்சாட்டாகும்.

    “எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சனையா அல்லது நான் இருப்பதே பிரச்சனையா என்று குழப்பமாக இருக்கிறது” என்று புலம்பி தள்ளியுள்ளார்.

   மனுஷ்ய புத்திரன் அவர்களே, நீங்கள் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

    நானும் வீடு வாடகைக்கு விடுவதுண்டு. முஸ்லீம் மக்களுக்கு வீடு கொடுத்திருக்கிறேன். வீட்டைத் தூய்மையாகப் பராமரிப்பவரா என்ற ஒன்றை மட்டுமே பார்ப்பேன். உங்களுக்கு வீடுதர மறுத்த ஒரு சிலரைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பொதுமைப்படுத்துவது நியாயமாகப்படவில்லை.

     “என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால் எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படுகிற சாமானிய முஸ்லீம்களின் நிலை என்னவாக இருக்கும்?” என்று கேட்கிறார்.

   “எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக் கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன்,”எங்களுக்கு இங்கு இடமில்லையா?”  இது அவர் விடுக்கும் இன்னொரு வினா.

    இந்த வினாக்களை  முஸ்லீம் மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். காரணம் தமிழ் நாடு முழுவதிலும் முஸ்லீம் உட்பட அனைவரும் இணக்கமாகவே வாழ்கிறார்கள். சொல்லப் போனால் உறவுமுறை கொண்டாடி வாழ்கிறார்கள். திருச்சிக்கு அருகே ஓர் ஊரில் இந்து, முஸ்லீம், கிறித்துவர்களுக்கு ஒரே பொது இடுகாடு உள்ளது. அந்த இடுகாட்டின் பெருங்கதவுக்கான மூன்று சாவிகள் அந்த மூன்று மதப் பெரியவர்களிடம் உள்ளன.

    எனவே அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைக் கட்டுரையாகப் பொதுவெளியில் இட்டதால் அவர்தம் மதிப்பைச் சற்றுக் குறைத்துக் கொண்டதாகவே நான் கருதுகிறேன்.

    இதழ்களும் வெறுப்பு விதைகளை விதைக்கும் வகையில் கட்டுரைகளை வெளியிடுவதைத் தவிர்க்கலாம். இரு சமுதாயத்தினரிடையே சிண்டு முடியும் வேலையை ஊடகங்கள் ஒருபோதும் செய்யக்கூடாது.


பொன் கத்தி என்றாலும் காயப்படுத்தும் தானே?

6 comments:

  1. உங்களைப் பாராட்டுகிறேன். ஆனால் அவர் குறிப்பிட்ட சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது துயரமான யதார்த்தம்

    ReplyDelete
  2. நல்லதொரு விளக்கம் நண்பரே - கில்லர்ஜி

    ReplyDelete
  3. ...வருமானம் நிரந்தரமானதா என்று பார்த்து தான் வீடு கொடுப்பார்கள். டிவி, சினிமாவில் இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்களுக்கும் சரி, free lance எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கும் வீடு கிடைப்பதில்லை. யாருக்கு வீட்டை விட்டால் திரும்ப வாங்க முடியாது என்ற அச்சம் ஏற்படுகிறதோ அவர்களுக்கு வீடு கிடைக்காது. ஏற்கெனவே இருந்த வீட்டு உரிமையாளரிடம் தகராறோ, வழக்கோ ஏற்பட்டு அது அனைவருக்கும் தெரிந்துவிட்டால் வீடு கிடைக்காது. இவரைத்தேடி அதிக்க் கூட்டம் வரும், அதனால் பார்க்கிங் பிரச்சினை வரும், அல்லது இவரைப் பார்க்க குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் அதிக அளவில் வந்து மற்ற குடியிருப்புகளின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம்.
    இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  4. உங்களின் பரந்தமனம் தெரிய மனுஷ்யபுத்திரனின் கட்டுரை காரணமாகியுள்ளது. வீட்டை யாராக இருந்தாலும் சுத்தமாகவே வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் கட்டுரை தமிழ்ச்சமுதாயத்திற்குக் கிடைத்த பாதுகாப்பு. நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  5. உங்களின் பரந்தமனம் தெரிய மனுஷ்யபுத்திரனின் கட்டுரை காரணமாகியுள்ளது. வீட்டை யாராக இருந்தாலும் சுத்தமாகவே வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் கட்டுரை தமிழ்ச்சமுதாயத்திற்குக் கிடைத்த பாதுகாப்பு. நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete