Monday 6 November 2023

கவரிமானா? கவரிமாவா?

 கவரிமா என்பது மான் இனம் அன்று, அதன் உண்மையான பெயர் கவரிமா..

இமயமலையில் வாழும் மாட்டு வகையைச் சார்ந்தது. அதுவும் எருமை மாட்டு வகையைச் சார்ந்ததாகும். 

இதையே நம்மில் பலர் கவரிமான் என்று குழப்பிக் கொள்கிறார்கள்.

 கவரிமான் எங்கு வசிக்கிறது? அதன் முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமாஎப்படித் தற்கொலை செய்து கொள்ளும்?

 

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.” குறள்: 969 ) 

என்கிறார் திருவள்ளுவர் 

கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம். 

ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி  அறிவியல் புத்தகங்களில் இல்லையே? குழப்பமாக இருக்கிறது அல்லவா? 

அந்தக் குறளைக் கவனமாகப் பாடியுங்கள். 

அதில் சொல்லப்பட்டு இருப்பது கவரி மான் அன்று.

கவரி மா 

ஆம். கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது. 

அதைத்தான் நம் மக்கள் கவரிமான் என்று குழப்பி விட்டனர். 

புறநானூற்றில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது.

 

"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

தண் நிழல் பிணி யோடு வதியும்

வட திசை யதுவே வான் தோய் இமயம்" (புறம்:122) 


பதிற்றுப்பத்திலும் இது குறித்த செய்தி உள்ளது. 

கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி,                                                                      பரந்திலங்கும் அருவியொடு நரந்தம்
கனவும், ஆரியர் துவன்றிய                                                                                                    பேரிசை யிமயம்” (பதிற். 11)  

இமயமலைப் பகுதியில், கவரிமா என்ற விலங்கு,  நரந்தை எனும் புல்லை உண்டு வாழும்* என்பது இப் பாடல்களின் வழியே உணரப்படும் பொருள். 

அதாவது கவரிமா இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் வியப்பு. 

*கவரிமா என்பது மான் வகையைச் சார்ந்தது அன்று. மாட்டு வகையைச் சார்ந்தது என்பது அடுத்த வியப்பு. 

வள்ளுவர் சொன்னது இதைத்தான். 

முடி சடை போல தொங்கக் கூடிய விலங்குதான் கவரிமா. 

இந்த முடியை வெட்டி எடுத்துச் செயற்கை முடி உருவாக்குவது வழக்கம். 

கவரி என்பதில் இருந்துதான் சவரி முடி என்ற இன்றைய சொல் உருவாகி இருக்கலாம். 

மாஎன்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான ஒரு சொல். 

சரி. 

இந்தக் குறளுக்குப் பொருள் என்ன? 

பனிப் பகுதியில் வாழும் கவரிமாவுக்கு அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோமனிதர்களால் வெட்டப்பட்டாலோ  குளிரினால் இறந்து விடும்.

அதே போல மானமுள்ளவர் பெருமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டால், அவர்கள் வாழ்வது அரியதாகி விடும். 

 கவரிமாவை கவரிமான் எனப் புரிந்து கொள்வதுதான் தவறு.

கவரிமா என்று ஊகிக்கப்படும் யாக்’(Yak of the Himalayas) என்பது நீண்ட, அடர்த்தியான மயிர்க்கற்றைகளைக் கொண்ட, இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம். காட்டு யாக்என்பது மாட்டினத்திலேயே பெரிய விலங்குகளுள் ஒன்று. நன்கு வளர்ந்த யாக் 1.6 முதல் 2.2 மீட்டர் உயரமும் 325 முதல் 1000 கிலோ எடையும் கொண்டிருக்கும்.

இதன் முடிகளைப் பயன்படுத்தி சாமரம் செய்வது அக்கால வழக்கம். 

நான் எண்ணிப் பார்க்கிறேன். 

திருவள்ளுவருக்கு எப்படி இமயமலையில் வாழ்ந்த கவரிமாவைத் தெரிந்தது?  தமிழ் நாட்டில் இல்லாத ஒரு விலங்கை எப்படி அவரது குறட்பாவில் உவமையாக்கினார்? 

அவருக்கு முன்னால் வாழ்ந்த சங்கப்புலவருக்கு வடநாட்டு விலங்கு, அது மேயும் புல்வகை இவையெல்லாம் எப்படித் தெரிந்தது? 

அது தமிழ்நாட்டு விலங்குதான்! வியப்பாக உள்ளதா? 

அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தின் வடக்கு எல்லை இமயமலைதான்! இது என் கருத்து. எனினும் மறு ஆய்வுக்கு உரியதே.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

9 comments:

  1. சிறப்பான பதிவு ஐயா நானும் முன்பு இதனைக் குறித்து பதிவு எழுதினேன் .

    ReplyDelete
  2. அப்பதவிக்கு சுட்டி ஐயா
    https://killergee.blogspot.com/2020/05/blog-post_20.html?m=1

    ReplyDelete
    Replies
    1. //அப்பதிவின்//

      Delete
    2. அ. கோவிந்தராஜூ6 November 2023 at 21:23

      உங்கள் சுட்டி இட்டுச் செல்லவில்லையே.

      Delete
  3. அருமை ஐயா. இதுபோன்று எத்தனை குறளின் விளக்கத்தில் வில்லங்கம் உள்ளதோ.

    ReplyDelete
  4. // தமிழகத்தின் வடக்கு எல்லை இமயமலைதான்! //

    உறுதியாக சொல்லலாம்...

    இதற்கும் கணக்கியல் உண்டு... விரைவில் வரும்...

    ReplyDelete
  5. Valuable information sir

    ReplyDelete
  6. முனைவர் அ. கோ.7 November 2023 at 13:30

    அப்படிப் போடுங்கள் அரிவாளை.

    ReplyDelete
  7. மிக் அருமையான பதிவு. தெரிந்த விஷயம் தான் என்றாலும் உங்கள் வழி சொன்ன விதம் நன்று.

    இது பற்றி கில்லர்ஜியும் முன்பு அவர் தன் தளத்தில் எழுதியிருந்தார்.

    கீதா

    ReplyDelete