Friday 10 November 2017

ஆவிகளை அழைக்கும் அமெரிக்கர்

   உலகில் ஆவிகளைக் கொண்டாடும் நாடுகள் பலவாக உள்ளன. அவற்றுள் கனடாவும் அமெரிக்காவும் முதலிடத்தில் இருக்கின்றன. அக்டோபர் 31ஆம் தேதிதான் அவர்களுக்குப் பேய்கள் தினம். ஹாலவின் டே(Halloween Day) என ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்.






வீட்டின் முன் பேய் அலங்காரம்
  
Door to door candy collection
இறந்து போனவர்கள் அன்றைய நாளில் ஆவி வடிவில் திரும்பி வருவதாக நம்புகிறார்கள். அவர்களை வரவேற்கும் வகையில் வீட்டின் வாயிலில் சிவப்புப் பூசணிக்காயை முழுதாகவோ செதுக்கியோ வைக்கிறார்கள். சிலர் பேய் உருவங்களை வடிவமைத்து வைக்கின்றனர். வேறு சிலர் மனித எலும்புக்கூடுகளையும் மனித மண்டை ஓடுகளையும் கலை நயத்துடன் வைத்திருப்பதைக் காணலாம். ஆவி வடிவங்களைத் தம் வீட்டின்முன் இருக்கும் மரங்களில் தொங்க விட்டிருக்கிறார்கள். பேய்த்தனமான ஆர்வக்கோளாறு காரணமாக, இரவு நேரத்தில் தம் வீட்டு வெளிப்புற வெள்ளைச் சுவரில் எல்.சி.டி.புரஜக்டர் மூலம் பற்பல பேய்ப்
படங்களைக் காட்டுவோரும் உள்ளார்கள்! இந்தக் கூத்துகளெல்லாம் அன்றைய நாளுக்கு ஒரு வாரம் முன்பாகவே தொடங்கி, பின்னரும் ஒரு வாரம் நீடிக்கிறது.

   உளவியலாளர் என்ற முறையில் இந்தக் கொண்டாட்டத்தில் ஒரு நன்மை இருப்பதாக நான் நினைக்கிறேன். எலும்புக் கூடுகளைப் பார்ப்பதாலும், தாமே பேய் வேடம் தரிப்பதாலும் குழந்தைகளுக்கு பேய் குறித்த அச்சம் அறவே நீங்கிவிடுகிறது. நம் ஊரில் பேய்கள் பற்றிய பயம் சிறியவர்களுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் உள்ளதே! இன்னொன்றையும் கவனித்தேன். இவ் விழாவின்போது காட்டப்படும் ஆவி வடிவங்கள் பயமுறுத்தும் வகையில் இல்லை. இப் பேய்களுடன் கைகுலுக்கி மகிழவே தோன்றுகிறது.

  இறந்து போனவர்கள் அன்று கருப்புப் பூனை வடிவத்தில் வருவதாகவும் நம்புகிறார்கள். எனவே அன்றைய நாளில்  பூனைகள் குறுக்கே சென்றால் கெட்ட சகுனமாக நினைக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் ஆண்டு முழுவதும் அப்படி நினைக்கிறோம்!

   
கடைகளில் கிடைக்கும் பேய் பொம்மைகள்
ஆவிகள் தினத்தில் சிறுவர் சிறுமியர் எல்லாம் வெள்ளை நிறத்தில் எலும்புக் கூடுகள் வரையப்பட்ட கருநிற ஆடைகளை அணிந்துகொண்டு வீட்டுக்கு வீடு சென்று கதவைத் தட்டுகிறார்கள். வீட்டில் உள்ளோர் கதவைத் திறந்து தயாராக வைத்துள்ள விதவிதமான சாக்கலேட்டுகளை விரும்பித் தருகிறார்கள். வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியில் செல்ல நேர்ந்தாலும் ஒரு பை நிறைய சாக்கலேட்டுகளை வாசலில் வைத்துச் செல்வது இங்கே வழக்கமாக உள்ளது. அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் விற்கும் சாக்கலேட்டுகளில் இருபத்தைந்து விழுக்காடு இந்தப் பேய்கள் தினத்தை முன்னிட்டு விற்றுத் தீர்வதாக ஒரு நாளேடு சுட்டிக் காட்டுகிறது. அதே போல ஆவிகள் தினம் தொடர்பான ஆடை அணிகலன்கள், பொம்மைகள், தின் பண்டங்கள், பூசணிக் காய்கள் ஆகியனவும் சந்தைகளில் குவிகின்றன.

  
பள்ளியில் பேய் தின விழா
பள்ளிகளில் கூட இதற்கு முக்கியத்துவம் தந்து விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

   உண்மையில் பேய் இருக்கிறதா இல்லையா என்ற வினாவும் உலகில் எல்லா இடங்களிலும் எல்லா காலத்திலும் உலா வந்துகொண்டுதான் இருக்கிறது.

“வேப்பமர உச்சியிலே பேயொண்ணு ஆடுதென- நீ
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க – உந்தன்
வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க –அந்த
மூளையற்றோர் வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே”

என்று பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் சொல்வதுதான் எனக்குச் சரியெனப் படுகிறது.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
..............................................................
முனைவர் அ. கோவிந்தராஜூ,
அமெரிக்காவிலிருந்து. முகாம்: நியூ யார்க்

   

8 comments:

  1. ஐயா, இன்றைய கணினி உலத்தில் தொழில்நுட்ப உதவியுடன் அதிகமாக பேய் படங்களை எடுத்து திரையிடுவதால் மக்கள் மனதில் குறிப்பாக குழந்தைகள் மனதில் ஒருவித பயம் நிலவிவருகிறது. நகரத்தில் வாழும் பலர் இருட்டை தங்கள் இல்லத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். மேலும் முகச் சாயம் மற்றும் முடிக்கு சாயம் பூசி போலியான வாழ்க்கை வாழ்வதால் உண்மையைப் பார்த்தால் பயமாகத் தெரிகிறது. எனது பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் பல இரவுகளில் தோட்டத்தில் தனியாக பயிர்களுக்கு நீர் பாச்சுவேன். எலி, பூராண், கொசு, பூச்சிகள், பாம்புகள், பல்லிகள், காடைக்குருவிகள், ஆந்தைகள், கூகைகள், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை, காட்டுப்பூனை, குள்ளநரி, கீரி மற்றும் மான் வரை பார்த்திருக்கிறேன். மேலும் பாம்புக்கடியும் வாங்கியிருக்கிறேன். ஆனால் ஒரேயொரு நாள் கூட பேயையோ பேயின் அறிகுறியோ பார்த்ததில்லை. பேய் என்பதை நம் மனம் தான் உருவாக்குகிறது. ஒருவிதத்தில் இது போன்ற விழாக்கள் பயத்தைத் தவிர்க்கும் என்ற உங்கள் கருத்து மிகவும் சரியான ஒன்று.

    ReplyDelete
  2. கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் இது போன்ற நம்பிக்கைகள் பல இருக்கின்றனதான். பெயர் தான் விச்சியாசப்படுகிறது. நம்மூரிலும் ஒரு சில தினங்களில் இறந்தவர்களுக்கு படையல் வைப்பதுண்டு இல்லையா. இறந்தவர்கள் வருவது போலவும்....நம்பிக்கைகள் இவ்வுலகம் முழுவதும் நிறைந்துள்ளதுதான் அது வளர்ச்சியடைந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சி அடையாத நாடாக இருந்தாலும்...

    ஹலோவின் நாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடடப்படும். பூசணிக்காய் நிறைந்து காணப்படும். உங்கள் தகவல்கள் அருமை ஐயா.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  3. நம்ம ஊரில் பேய்களை விரட்ட பூசாரியை நாடுகிறோம்.

    மாறாக அங்கே பேய்களை வரவேற்கும் விதமாக விழா எடுக்கிறார்கள்!

    விந்தையாக உள்ளது!

    ReplyDelete
  4. நம்ம ஊரில் பேய்களை விரட்ட பூசாரியை நாடுகிறோம்.

    மாறாக அங்கே பேய்களை வரவேற்கும் விதமாக விழா எடுக்கிறார்கள்!

    விந்தையாக உள்ளது!

    ReplyDelete
  5. ஹாலோவீன் தினம் பற்றிய​ கட்டுரை மற்றும் படங்கள் அருமை ஐயா.

    இறப்பின் பின் என்ன? என்ற புதிரே பேயாக உருவகப் படுத்தப்படுகிறது.

    நீத்தாரை நினைவுகூர்வது , நீத்தும் நினைவில் வாழ்வது நம் நாட்டில் மட்டுமின்றி மேலை நாடுகளிலும் உள்ளது என்று அறிந்து கொள்ள முடிகிறது.
    வட தமிழகத்தில் மயானக் கொள்ளை என்று சிறப்புடன் விழா கொண்டாடுகின்றனர். விழா நாளில் மயானத்தை அலங்காரம் செய்து அனைவரும் அங்கு சென்று படையலிடுகின்றனர்.

    ReplyDelete
  6. பேய்கள் தினம்..இப்போதுதான் கேள்விப்படுகிறேன். வியப்பாக உள்ளது.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா
    உங்கள் கூற்றுப்படி சிறுவர்-சிறுமியர்களுக்கு பேய் பயம் நீங்கி விடுகிறது என்பது சரியான கருத்து.

    இதை நாமும் பின்பற்றினால் குழந்தைகளுக்கு நல்லதுதான்.
    -கில்லர்ஜி

    ReplyDelete