Thursday 19 December 2019

அந்தோ மறைந்தார் அழகப்ப இராம்மோகன்


  காரைக்குடிக்கு அருகில் உள்ள கானாடுகாத்தான் என்னும் சிற்றூரில் 1939 ஆம் ஆண்டு பிறந்தவர் அழகப்ப இராம்மோகன். இயற்பியல் வல்லுநரான இவர் அமெரிக்கா சென்று பல பொறுப்புகளில் பணியாற்றினார். பணிநிறைவுக்குப் பின் தொடந்து அமெரிக்காவில் வசித்த இவர், இலினாய்ஸ் மாநிலத்தில் போலிங்ப்ரூக் என்னும் ஊரில் அமைந்துள்ள தன் வளமனையில் கடந்த 12.12.19 அன்று தன் எண்பதாம் வயதில் இயற்கை எய்தினார்.

   தன் அயராத முயற்சியால் ஈட்டிய செல்வத்தில் பெரும்பகுதியைத் தமிழ் வளர்ச்சிக்காகச் செலவிட்டார். உலகத் தமிழ் அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி அதன் மூலம் திருக்குறளின் பெருமை உலகம் முழுதும் எட்டச் செய்தார். 

   இவருக்கு நூல் வாசிப்பும் சுவாசிப்பும் ஒன்றே. புதுநூல் ஒன்றை வாங்கினால் முதலில் அதை மூக்கால் முகர்ந்து அது வீசும் மணத்தை நுகர்ந்த பிறகுதான் படிக்கத் தொடங்குவாராம். நூல் வாசிக்காத நாள் வீண் நாள் என நினைப்பவர். தான் பெற்ற இன்பம் மற்றவரும் பெற வேண்டும் என்னும் பரந்த நோக்கில் கானாடுகாத்தானில் பெரிய நூலகம் ஒன்றை உருவாக்கினார். அதன் திறப்புவிழா 26.12.19 அன்று நடைபெறுவதாய் இருந்தது. அதைக் காணும் பேறு வாய்க்காமல் மறைந்து விட்டார்.
Dr.A.Ram Mohan (photo courtesy: Google)

   தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் பல நூல்களைப் பெரும் பொருள்செலவில் வெளியிட்டார். அவற்றுள் குறிப்பிடத் தகுந்தது திருக்குறள் நூல். இது இராம்மோகனின் கனவுத் திட்டமாகும். தங்கமுலாம் பூசப்பட்ட பைபிள் நூல் போல திருக்குறளை வெளியிட வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்கான வல்லுநர் குழுவை அமைத்துத் திட்டமிட்டுச் செயற்பட்டார். பல மில்லியன் டாலர் பணத்தைச் செலவிட்டுத் தரமான அச்சில் பத்தாயிரம் படிகளை வெளியிட்டார். ஒரு நூலின் விலை இரண்டாயிரத்து ஐந்நூறு என்றால் அதன் கட்டமைப்புத் தரத்தை நீங்கள் உணரமுடியும்.

    இந்த மாமனிதரின் மறைவையொட்டி அமெரிக்கா, கனடா நாளேடுகள் செய்திக்கட்டுரை வெளியிட்டுப் புகழ் சேர்த்தன. ஆனால் நம்மூர் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை!

  நல்ல வேளையாக, ஈரோடு தமிழன்பன் எழுதிய ஓர் இரங்கல் பா இணையத்தில் வெளிவந்தது. அது அமெரிக்காவில் வசிக்கும் எனது நண்பர் நாசா விஞ்ஞானி திரு.நா.கணேசன் மூலமாக என் கவனத்துக்கு வந்தது. அதை வலைப்பூ வாசகர்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அமெரிக்காவின்
அகரத்தமிழன் இராம்மோகன்
அழகப்பன்
இன்றில்லை என்பதறிந்து
நேற்றும்
கண்ணீர் வடிக்கிறது
நாளையின் கண்களிலும்
கண்ணீர் தேங்குகிறது!

பொதிகை
அனுப்பிவைத்த ஒரு
புலவன்போல் இருந்தவன்
 
வைகை
அனுப்பிவைத்த  ஒரு
புரவலன்போல்
இருந்தவன் இன்றில்லை!

கனவுகளிலும்
தமிழ்வளர்க்கத் திட்டமிட்டவன்
நனவுகள் கைகளில் தானே
ஆயுதமாய்த்
தமிழ்ப்பகையை எதிர்த்தவன்
இன்றில்லை!

இன்று-
எமக்குப் பகல்ஒழிக்கும்
இரவானது இடரானது

இராம்மோகன்
இறப்பறிந்து தமிழ்த்தாய்
னகர இறுவாய்
எல்லா எழுத்துகளுக்கும்
கருப்புடை அணிவித்தாள்!

வள்ளுவனாரின்
ஆயிரத்து முன்னூற்று முப்பது
அருங்குறட்பாக்களும்
கைகளில் மலர்வளையங்களோடு
இராம்மோகன் வீட்டு
வாசலில் நிற்கின்றன!

முப்பாலிலும்
துயரம் பொங்கி வழிகிறது
இராம்மோகன்
முகம்பார்த்து அழுகின்றன!

செப்பலோசை
ஒனறும் செப்பமுடியா நிலையில்
ஊமை ஓசை உள்ளிருந்து
அரற்றுகின்றது!

அவருடைய
இதயநேர்த்தியும்
ஈரக்கனவும் படைத்த
பரிசுப்பதிப்பு வள்ளுவத்தின்
பக்கம்
ஒவ்வொன்றிலிருந்தும்
திருவள்ளுவர்
தேம்பி அழுகிறார்!.

கையேடு
தமிழருக்குத் தயாரித்தவன்
யாரோடு புறப்பட்டுப் போனான்
தெரியவில்லையே!
பொய்யோடு வாழாதவன்
இனி
மெய்யேடு தந்த
ஐயன்
வள்ளுவனோடு வாழலாம்
என்று புறப்பட்டுப் போனானோ?
குறிப்பு: அழகப்பன் இராம்மோகன் குறித்து மேலும் விவரங்கள் அறிய  https://ta.wikipedia.org/s/5gtd,  https://kural.org  என்னும் தளங்களுக்குச் செல்லுங்கள்.


5 comments:

  1. மிகவும் வருந்துகிறேன்...

    ReplyDelete
  2. ஐயாவும் நானும், பல முறை அவரது பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் சந்தித்து உரையாடி உள்ளோம். தமிழகப் பள்ளிகளில் தரம் வாய்ந்த கணிதம், அறிவியல் தமிழ் மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என எண்ணம் கொண்டவர்.. விரிவான திட்டமும் வைத்திருந்தார்...
    மாலை வேளையில் அவரும் அவரது துணைவியாரும் சிற்றுண்டி அன்புடன் கொடுத்து உபசரிப்பார்கள்..

    தமிழன்னைக்கு இழப்பு.. பேச்சு, மூச்சு, வாழ்வு அனைத்தும் அன்னை தமிழுக்கே என வாழ்ந்தவர்...

    ஆழ்ந்த இரங்கல்கள்
    சி. இராஜேந்திரன் IRS
    மலர்க்கொடி இராஜேந்திரன்
    வள்ளுவர் குரல் குடும்பம்
    www.voiceofvalluvar.org
    voiceofvalluvar1330@gmail.com

    ReplyDelete
  3. எனது இரங்கல்களும் ஐயா

    ReplyDelete