Monday 21 October 2024

மனமிருந்தால் மாற்றம் உண்டு

  பயனுள்ள வாழ்வு, பகட்டான வாழ்வு. இவ்விரண்டில் இன்று பெரும்பாலோர் வாழ நினைப்பது பகட்டான வாழ்வே. இதுதான் இன்றைய இளைஞர்கள் மனத்திலே ஒரு கருத்தேற்றமாகத் திணிக்கப்படுகிறது.

இந்தக் கருத்தேற்றத்தை அடித்து நொறுக்கினார் ஈரோட்டு இளைஞர் ஒருவர்.

அப்பா வாழ்ந்த வாழ்வு அவருக்கும் பிறருக்கும் பயனுள்ள வாழ்வுதான்ஆனால் வாழ்நாள் முழுவதும் உழைத்தும் கூட வயிற்றுப்பாட்டுக்கு மேல் ஒரு வசதியும் வாய்க்கவில்லை. பார்த்தார் சிவகுருநாதன். தந்தையின் தொழிலைத் தொடர்ந்தால் வசதியாக வாழ முடியாது என நினைத்தார். B.E. முடித்தார்; MBA முடித்தார். தகவல் தொழில் நுட்பத் துறையில் நல்ல ஊதியம் தரும் பணியில் சேர்ந்தார். ஓர் அழகான பெண்ணைப் பார்த்துத் திருமணமும் செய்து கொண்டார். ஒரு BMW கார் வாங்கும் கனவும் கண்டார்.

ஆனால் நடந்தது என்ன?

   சிவராஜ் என்னும் ஓர் எளிய மனிதரின் சந்திப்பு, அவர் தந்த காந்திய நூல்- இவற்றால் வந்த விழிப்பு சிவகுருநாதனை தலைக்கீழாய் மாற்றிப் போட்டது. மனைவியின் ஒப்புதலுடன் பார்த்த வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தார்.

   தந்தையார் செய்து வந்த கைத்தறி நெசவுத் தொழிலில் தீவிரமாக இறங்கினார். அது குலத்தொழில் என்பதால் எளிதில் கைவரப்பெற்றார். மில் வேட்டிகளைவிட கைத்தறி வேட்டிகள் எவ்வாறு சிறந்தவை என்பதை அறிவியல் அடிப்படையில் கற்றுத் தேர்ந்தார். இந்தத் தொழிலையும் திட்டமிட்டுச் செய்தால் நேர்மையாக உழைத்துச் சிறந்த வருவாய் ஈட்ட முடியும் என நம்பினார். ஒத்த சிந்தனை கொண்ட இளைஞர்களைத் திரட்டினார்; செயலில் இறங்கினார்; வெற்றி கண்டார்.

  நூற்பு ஹேண்லூம்ஸ் என்னும் அமைப்பை உருவாக்கிச் சிறந்த தொழில் முனைவோராக ஆவதற்கு வழிகாட்டி வருகின்றார்.  

     இந்த நெசவுக்கலை மெல்ல அழிந்து வருவதை நேரில் கண்ட சிவகுருநாதன் பண்டைத் தமிழரின் பாரம்பரியக் கலைகளில் முதன்மையான நெசவுக் கலையை அழிவிலிருந்து காப்பாற்ற என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்; மனைவியிடம் கலந்து ஆலோசனை செய்தார். அவர்களுக்கு முன்னரே ஒரு குழந்தை உள்ளது. இப்போது இரண்டாவது குழந்தை பெற்றுள்ளனர். நெசவுப் பள்ளி என்பதே அவர்கள் பெற்றெடுத்த இரண்டாவது குழந்தை!

நூற்பு நெசவகம்

கருமமே கண்ணாக

கைத்தறி நெசவுப் பள்ளி

நல்லதொரு குடும்பம்

 

   நசிந்துவரும் நெசவுத் தொழிலை மீட்டெடுக்க வாய்ப்பளிக்கும் சிறப்புப்பள்ளி இது. ஒருமாதம் முதல் ஆறுமாதம் வரை எந்த வயதினரும் இப்பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற முடியும். இப் பள்ளியில் படித்த பல பட்டதாரி இளைஞர்கள் கைத்தறித் தொழிலில் இறங்கி இன்று கைநிறைய சம்பாதிக்கின்றனர். இதற்கு வழிகோலிய சிவகுருநாதனை ஊரே கொண்டாடுகின்றது. ஈரோட்டில் நடந்த ஒரு மாபெரும் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பங்கேற்று இந்த இளைஞரைப் பாராட்டியுள்ளார் என்பது மாநிலம் முழுவதும் பேசப்பட்ட செய்தி. அந்தச் செய்தி வெளிநாட்டில் இருக்கும் என் காதிலும் விழுந்ததே!

 இனி நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பெரிய பெரிய கார்ப்பொரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் வேட்டி சேலைகளைக் குளிர்ப்பதன அங்காடிகளுக்குச் சென்று வாங்குவதை நிறுத்திவிட்டு, சிவகுருநாதன் போன்ற எளிய நெசவாளர்கள் நெய்து தரும் கைத்தறி வேட்டிகளை, கைத்தறிச் சேலைகளைத் தேடி வாங்குவதற்கு முன்வர வேண்டும்.

   நான் நாடு திரும்பியவுடன் முதல் வேலையாக ஈரோடு சென்று சிவகுருநாதனைக் காணவேண்டும் என எண்ணியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை சிவகுருநாதனைக் காண்பது சிவனைக் காண்பதற்கு ஒப்பாகும்.

முனைவர் .கோவிந்தராஜூகனடா நாட்டிலிருந்து.

----------------------------------------

 நன்றி: இந்த இளைஞரைப் புலன வழியே எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர் திரு.சின்னசாமி இராஜேந்திரன்,IRS அவர்களுக்கும்,

இந்த இளைஞர் குறித்த செய்திகளை, படங்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைந்த ‘YSதமிழ்என்னும் மின்னிதழுக்கும்

6 comments:

  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். உரியவர்களை , குறிப்பாக இளைஞர்களைஇனம் கண்டு உரிய முறையில் பாராட்ட வேண்டும். நான் தற்போது நூற்பு வேட்டிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அண்ணா. விடாது இன்று வரை கைத்தறியில் நெய்துவரும் நெசவாளர்களின் அன்புதான் நல்லதொரு துணியாக பரிணமிக்கிறதுங்க அண்ணா . உங்களுக்கும் கோவிந்தராஜ் ஐயாவுக்கும் நன்றிங்கள் அண்ணா.

      Delete
  2. உங்கள் அன்பிற்கும், பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா. உங்களைபோன்று உள்ளார்ந்த அன்போடு அரவணைக்கும் நூற்பின் சொந்தங்கள் அனைவரது அன்பால் தொடர்சியாக நம்பிக்கையோடு பயணிக்கிறோம் ஐயா. ஊருக்கு வரும்பொழுது அவசியம் வாருங்கள் ஐயா.

    அன்பும்... பிரார்த்தனைகளும்...
    சிவகுருநாதன்.சி,
    நூற்பு | www.nurpu.in | 9578620207.

    ReplyDelete
  3. அருமை, வாழ்த்துக்கள்💐💐💐💐

    ReplyDelete
  4. நமது பண்பாடு வளர்க்கும் நண்பர்களை வாழ்த்துவோம்,

    ReplyDelete
  5. மிகச் சிறந்த பதிவு ஐயா!
    நூற்புக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete