Friday 30 January 2015

எது வலிமை?


    இந்த ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற குடியரசுதின அணிவகுப்புத் தொடர்பான செய்திகளை நாளேடுகளில் பார்த்தேன். வலிமையான பாரதம் என்பதைப் பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு இருந்ததாக நாளேடுகள் எழுதின. மகிழ்ச்சிதான். ஆனால் வலிமையான பாரதம் என்பதன் சிறு கூறுதான் இது.

    வலிமையான பாரதம் என்பதை இன்னொரு கோணத்தில் சிந்திக்க வேண்டும். மனித வளமே நாட்டின் உண்மையான வலிமையாக இருக்க முடியும்.

   கையூட்டுக் கலாச்சாரம் மிகுந்துள்ள பாரதம் எப்படி வலிமையான பாரதமாக இருக்க முடியும்? கல்வித்துறையில் எனக்குத் தெரிந்த உயர் அதிகாரி, ஒரு ஆசிரியரின் விருதுக்கான விண்ணப்பத்தை அடுத்த நிலைக்குப் பரிந்துரை செய்ய இலஞ்சம் கேட்டார். அந்த ஆசிரியரையும் எனக்குத் தெரியும். விருதுக்குத் தகுதியானவர்தான். ஆனால் இலஞ்சம் கொடுக்காவிட்டால் பரிந்துரை செய்யமாட்டாரே என்ற அச்சத்தில் ரூபய் பத்தாயிரம் கொடுத்தார். கொடுத்ததையும் பெற்றுக்கொண்டு, “இலை போட்டீர், சோறு போடவில்லையே என்று கூறினாராம் அந்த அதிகாரி. நல்லவேளை, இவர் அரசு ஊழியராக இருந்தார். இவர் ராணுவ அதிகாரியாக இருந்திருந்தால் பக்கத்து நாட்டிடம் பணம் வாங்கிக்கொண்டு இராணுவம் தொடர்பான முக்கிய தகவல்களை கசிய விட்டிருப்பார். இப்போது சொல்லுங்கள். வலிமை என்பது வெறும் தளவாடங்களிலும் உட்கட்டமைப்புகளிலுமா உள்ளது?

    பணியில் ஆர்வமில்லாத ஓர் ஆசிரியர், “ஏதோ பிழைப்பு நடக்கிறது என்று கூறுகிறார்.
 இன்னொருவர் சொல்கிறார்: “வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சனையில்லாமல் வேலைசெய்கிறேன்.
 மூன்றாமவர், “என்னிடம் படிக்கும்  மாணவர்கள் நாட்டைத்தாங்கும் எதிர்காலத் தூண்கள். அவர்களை உருவாக்கும் உன்னத பணிசெய்கிறேன் என்றார்.
 இப்போது சொல்லுங்கள். வெறும் பள்ளிக்கட்டடங்களால் பாரதம் வலிமை பெறுமா? மேலே மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட ஆசிரியரைப் போன்றவர்களால் மட்டுமே வலிமையான பாரதம் உருவாகும். அரசுத் துறையில், பொதுத்துறையில், தனியார் துறையில் பணியாற்றுவோரின் ஒட்டு மொத்தப் பணிக்கலாச்சாரம் உயர்ந்தால்தான் பாரதம் வலிமை பெறும்.

   தேர்தல் சமயங்களில் வாக்குகளை விற்றுக் கோழிக்கறி வாங்கி சமைத்துச் சாப்பிட்டால், சாப்பிட்டவரின் உடல் வேண்டுமானால் வலிமை பெறும். ஆனால் பாரதத்தின் வலிமை குறையும்.

     நம்பி தேர்ந்தெடுத்து நாம் அனுப்பிய மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் பலரும் ஊழலில் திளைக்கின்றனர். அரசியல் வாதிகள் சிலரின் பேராசையால் கருங்கல் மலைகள் காணாமல் போய்விட்டன. ஆறுகளின் வயிற்றைக் கிழித்து வறளச் செய்துவிட்டனர். இப்படிப்பட்டவர்களால் பாரதத்தாய் வலிவும் பொலிவும் இழந்து உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கிறாள்.


  எனவே, இலஞ்சம் என்னும் பணக்கலாச்சாரம் ஒழிந்து பணிக்கலாச்சாரம் ஓங்கினால்தான் பாரதம் வலிமை பெறும். ஊழலை ஒதுக்கித்  தள்ளிவிட்டு உழைப்பில் ஆர்வம்காட்டும் ஆள்வோர் ஆளப்படுவோர்- இவர்களால் மட்டுமே பாரதம் வலிமை பெறும். இத்தகையோர் ஊர்தோறும் அணிவகுத்து, நெஞ்சை நிமிர்த்திப் பீடுநடை போட்டால் வலிமையான பாரதத்தைப் பறைசாற்றும் அணிவகுப்பு என்று எழுதலாம்.

Tuesday 27 January 2015

இந்திய மண்ணில் பிறப்போம்

     இன்று(26.1.15) நம் நாட்டின் அறுபத்து ஆறாவது குடியரசுத் திருநாள். நம்மை நாமே ஆள்வதற்கு நல்ல விதி செய்த நாள். வழக்கம்போல் குழந்தைகள் உற்சாகமாக ஓடிவந்து, “ஐயா, இந்த இனிய நாளில் பாடுவதற்கேற்ற ஒரு பாடலை இயற்றித் தாருங்கள் என்று கேட்டார்கள்.

    இது ஒருவிதமான அன்புத்தொல்லை; இன்பத்தொல்லை. எனவே அவர்கள் வேண்டுகோளை மறுப்பதில்லை.

     உடனே அவர்களுக்காக ஒரு பாடலை எழுதினேன். இது அவர்களுக்கு மட்டுமல்ல;  எனக்கும் என்னுடன் சேர்ந்து வாழும் நூற்று இருபது கோடி குடிமக்களுக்கும்.

   இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தக் கையோடு, நம் பிரதமர் மோடி அவர்களுடன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டேன்.

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

 எத்தனை பிறவி எடுத்தாலும்
 இந்திய மண்ணில் பிறப்போம்
 புத்தன் காந்தி வாழ்ந்ததனை
 வியந்து விண்ணில் பறப்போம்.(வந்தே)

  நூற்று இருபது கோடிமக்கள்
  உயிராய் விளங்கும் இந்நாடு.
  வேற்று நாட்டவர் எல்லோரும்
  விரும்பி மதிக்கும் பொன்னாடு. (வந்தே)

  நம்முடை நாடு உயர்ந்திடவே
  நல்ல வழிகளை யோசிப்போம்.
  நம்மைப் பெற்று வளர்த்திட்ட
  தாயினும் மேலாய் நேசிப்போம்.(வந்தே)

  வாழினும் ஒன்றாய் வாழ்வோம்
  வீழினும் ஒன்றாய் வீழ்வோம்
  சூழினும் பகைவரை வெல்வோம்
  சுதந்திரம் மூச்சென சொல்வோம் (வந்தே)


              - கவிஞர் இனியன்

Tuesday 20 January 2015

நில், கவனி, செல், வெல்.

 அன்புள்ள மாணவக் கண்மணிக்கு,
     நலமா? முதன் முறையாக நீ பொதுத்தேர்வு எழுதப்போகிறாய். மனத்தில் பயமா? பயப்படாதே.

    காலமே கடவுள்; காலமே ஆற்றல்.  காலத்தையும்  காசையும் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும். தேர்வு நெருங்கும் இந்தச் சமயத்திலும், சோம்பிக் கிடப்பதும், நண்பர்களுடன் சுற்றுவதும், அரட்டையில் ஈடுபடுவதும் அறிவுடைமை ஆகாது.

   சாலையில் செல்லும் ஒருவர்  கணநேர கவனக்குறைவால் விபத்தில் சிக்கி, கால் முறிந்து காலம் முழுவதும் கஷ்டப்படுவது போல், நீயும்  காலத்தின் அருமை தெரியாமல்,  போகிற போக்கில் படித்து, ஏனோதானோ எனத் தேர்வெழுதி, குறைந்த மதிப்பெண் பெற்று, வாழ்வின் வசந்த வாயில்கள் அடைக்கப்பட்டு, வண்ணக் கனவுகள் சிதைந்து, வாய்ப்புகளை இழந்து, வாழ்நாள் முழுவதும் அவதிப்படப் போகிறாயா?  சற்றே சிந்தித்துப்பார்.

    நேரத்திருட்டு - இதுதான் மிக மோசமான திருட்டு. உனது பொன்னான நேரத்தை உங்கள் நண்பர்கள் திருடுகிறார்கள்; செல்பேசி திருடுகிறது; இணையதளம் திருடுகிறது; தொலைக்காட்சி திருடுகிறது; சினிமா திருடுகிறது; கிரிக்கெட் திருடுகிறது, வெட்டிப்பேச்சும், வீண் அரட்டையும் உன்  நேரத்தை வெகுவாகத் திருடுகிறது. காசைத் திருடு கொடுத்தவன் கூட பிறகு சம்பாதித்து விடலாம். காலத்தைத் திருடு கொடுத்தவன் ஒரு போதும் மீண்டும் பெற முடியாது. இனி உனது நேரத்தை யாரும் எதுவும் திருட அனுமதிக்காதே.  நீயும் மற்றவருடைய நேரத்தைத் திருடாதே.

  “இன்றைய பொழுதை நீ கவனித்துக் கொண்டால் நாளைய பொழுது உன்னைக் கவனித்துக் கொள்ளும் என்று டாக்டர் செ.சைலேந்திர பாபு கூறுவார். இதை நீ படிக்கும் புத்தகத்தின் முகப்புப் பக்கத்தில் உன் முத்தான கையெழுத்தில் முத்திரை வாசகமாக எழுதி வை.

          தேர்வு என்னும் பழுக்கக் காய்ச்சிய இரும்பை  மன ஒருமைப்பாடு என்னும் சம்மட்டியால் அடித்து விரும்பிய வண்ணம் வளைக்கலாம்; நீட்டலாம். திருவள்ளுவரின் வைரக் குறள் கூறுகிறது
:
    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
                                 திண்ணிய ராகப் பெறின்

      இந்த ஒரு குறள் போதும்  நீ பொதுத் தேர்வை எதிர்கொள்ள.
“படிக்கிறேன்; ஆனால் மறந்து விடுகிறது என்று கூறுகிறாய்.  இக்கூற்றில் உண்மை ஏதும் இல்லை.  ர்வத்தோடு அம்மா சமைக்கிறாள்;  அத்தனையும் சுவையாக உள்ளன. ர்வத்தோடு திரைப்படப் பாடலைக் கேட்கிறாய்; முழுப்பபாடலும் மனப்பாடமாகிறது. அது மறப்பதும் இல்லை. ஆக ர்வத்தோடு படித்தால் மனத்தில் பதியும். ர்வத்துடன் கூடிய முயற்சியும், தொடர் முயற்சியுடன் கூடிய பயிற்சியும், பயிற்சியுடன் கூடிய படிப்பும் இருந்தால் மறதி என்னும் நோய் புறமுதுகுக் காட்டி  ஓடிவிடும்.

      ஊக்கத்தின் எதிர்ச்சொல் தூக்கம். ஊக்கம் இல்லாதவர்களுக்குத்தான் தூக்கம் வரும்.  டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பற்றி உனக்கு நீதி நெறி வகுப்பில் சொன்னேன் அல்லவா? அவர் இந்த வயதிலும் ஆறுமணி நேரம் மட்டுமே தூங்குகிறார்., நாள் தோறும் பல மணி நேரம் உழைக்கிறார். தான் ஏற்றுக்கொண்ட அத்துணைப் பணிகளையும் முரண்பாடின்றி செய்து முடிக்கிறார். எப்படி முடிகிறது?  ஊக்கம் தான் - இடைவிடாத ஊக்கம்தான். இந்த ஊக்கம் உனது உள்ளத்திலும்  ஊற்றாய்ப்  பெருகட்டும்.

      பொதுத் தேர்வுக்கு இறுதிக் கட்டத் தயாரிப்பு என்பது மிக முக்கியம். 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இறுதிச்சுற்றில் ஓடுவது போன்றது இது.  இதுவரையில் உன்னிடம் பின் தங்கி இருந்தவர்கள் கூட திடீரென முழு வேகத்தில் ஓடி உன்னை முந்த முயற்சி செய்வார்கள். விழிப்புடன் செயல்படு. தொடர்ந்து முயலாமையால் முயல் ஆமையிடம் தோற்ற கதை உனக்குத் தெரியுமல்லவா?

     பொதுத் தேர்வில் எளிதில் வெற்றி பெற, ர் எளிய சூத்திரம் உண்டு. முறையாகப் பள்ளிக்குச் செல். அங்கு நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதும், திருப்புத் தேர்வுகளை ஒழுங்காக எழுதுவதும் வெற்றிக் கனிகளை  ஈட்டித் தரும். சரியாகப் படிக்க வில்லை, எனவே திருப்புத் தேர்வை எழுதவில்லை என்று கூறுவது உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளும் நிலைதான். பள்ளித் தேர்வுகளை எழுதிப் பழகினால்தான் பொதுத் தேர்வு பொதுத்தேர்வாக இருக்கும்;  இல்லையேல் அது புதுத்தேர்வாகவே இருக்கும்.
பொதுத் தேர்வுக்குத் தயாராகும் இச் சமயத்தில் உடல் நலம் காப்பதில் ரி கவனம் செலுத்துக.  நேரம் தவறாமல் சத்தான உணவை உண்ண வேண்டும். குறிப்பாக காலை உணவைத் தவிர்த்தலோ, குறைத்தலோ கூடாது.  அது மூளைச் சோர்வை உண்டாக்கும். மேலும் படித்தது மறந்து விடும்.

   தேர்வுக்குப் படிக்கும் காலத்தில், மசாலா நிறைந்த காரமான உணவைத் தவிர்த்தல் நன்று.  ஐஸ்கிரீம், குளிர்பானம் -  அறவே கூடாது. இளநீரும்  மோரும் பருகுவது மிகவும் நல்லது.

   அடுத்து, மனத்தில் தேவையற்ற உணர்வுகளை வைத்து அடைகாத்தல் கூடாது. இப்போது நீ வளர் இளம்பருவத்தில்  உள்ளாய். உன்  மனத்தில் தோன்றும் எதிர்பாலினக் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராதே. அத்தகைய உணர்வுகள் தற்காலிகமானது. அதை ஆங்கிலத்தில் infatuation என்பார்கள். இவை மனத்தில் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது மிகச் சிலருக்குப் பள்ளியில் படிக்கும் பருவத்தில் ஏற்படும் மனமாசு. இது மனத்தில் தோன்றும் முட்செடி. படிப்பு என்னும் பயிரை வளர விடாமல் தடுக்கும். முட்செடிகளை முளைக்கும் போதே பிடுங்கி எறிக. இதைச் செய்யத் தவறினால்,  அவை முட்டுக் கட்டையாக மாறி  உன்னை முடக்கிவிடும்.

    நீ செல்வழி நன்றாயின் வெல்வது உறுதி.
நில், கவனி, செல், வெல்.

என்றென்றும் அன்புடன்,
உன்னை விரும்பும் ஆசிரியர்


Monday 12 January 2015

சிறகை நமக்குத் தருநாளாம்!


      நான் பணியாற்றும் பள்ளியில் நாளைக்குச் சமுதாயப் பொங்கல் விழா கொண்டாடுகின்றோம். அதற்கு ஒரு சேர்ந்திசைப் பாடலை இயற்றித் தரவேண்டும் என மாணாக்கச் செல்வங்கள் கேட்டனர். அவர்களின் அன்புக் கட்டளையை மீறமுடியுமா?

இதோ அவர்களுக்காக ஒரு பாடல்........

தைமா தத்தின் முதல்நாளாம்
  தமிழருக் கெல்லாம் திருநாளாம்!
மாந்தர் போற்றும் மறுநாளாம்
  மன்புகழ் வள்ளுவர் திருநாளாம்! 
        
கதிரவன் கதிர்கள் படுவதனால்
  கழனியில் பயிர்கள் விளையுதம்மா!
ஆதவன் தந்திடும் ஒளிக்கொடையால்
  அவனியில் உயிர்கள் தழைக்குதம்மா!

உழவர் சிந்தும் வியர்வையினை
  உவந்து நிலமகள் பெறுவாளாம்!
பழங்கள் தானியம் பருப்பெனவே
  பதமாய் மாற்றித் தருவாளாம்!

சூரிய சக்தி மட்டும்தான்
  சூழலை இனிதாய்க் காத்திடுமே!
வீரியம் மிகுந்த சக்தியது
  விந்தைப் புதுமைப் பூத்திடுமே!

பகலவன் அவனை வழிபடவே
  பைந்தமிழ்ப் பொங்கல் திருநாளாம்!
சிகரம் தொட்டுப் பார்த்திடவே
  சிறகை நமக்குத் தருநாளாம்!


13.1.15           -கவிஞர் இனியன்