தனி மனித ஒழுக்கக்கேடு அவனோடு நிற்காது. அதன் பாதிப்பு எல்லாப் பக்கமும் தொடரும். ஒரு நீண்ட சரவெடியில் ஒரு வெடியில் தீப்பற்றினாலும் அனைத்தையும் வெடிக்கச் செய்தல் போல, தனிமனிதனுடைய ஒழுக்கக்கேடு அவனோடு நிற்பதில்லை. குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவன் மனைவி மக்களை சொல்லக் கூடாத சொல்லால் காயப்படுத்துகிறான். பிறகு கண்ணில் பட்டவற்றை எடுத்து அவர்கள் மீது வீசிக் காயப்படுத்துகிறான். சமாதானம் செய்ய வந்த அண்டை வீட்டுக்காரனையும் அடிக்கிறான்.
பிறர் மனைவியுடன் ஒருவன் பாலியல் தொடர்பில் உள்ளான் எனின் அது தனிமனித ஒழுக்கக்கேடு. ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் அது வெளியில் தெரியும்போது இரண்டு வீடுகளிலும் இடிவிழுந்தாற்போல் நிலைமை மோசமாகிறது. தொடர்புடைய இருவரும் அவமானத்தால் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. தொடர்பில்லாத இருவரும் கூனிக் குறுகி நிற்கின்றனர். சில சமயம் கொலையில் கூட முடிந்து விடுகிறது.
அறவழியில் வரும் இன்பத்தை மட்டுமே ஒருவன் பயமின்றி, பழியின்றித் துய்க்க முடியும் என்பதை மெத்தப் படித்தவர்கள் கூட அறியாமல் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. ‘அறத்தான் வருவதே இன்பம்’ என வள்ளுவர் அடித்துச் சொல்லியும் பலர் அவர் பேச்சைக் கேட்பதில்லை.
படிற்றொழுக்கம் உடையவனைப் பார்த்து அவனோடு வாழும் ஐந்து பேர்கள் எள்ளி நகைப்பர் என்று வள்ளுவர் கூறுகிறார்.
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். (குறள் 271)
The five elements (Pañcabhūta) will laugh within
At a hypocrite's fraudulent conduct.
படிறு + ஒழுக்கம் =படிற்றொழுக்கம். படிறு என்பது ஏழு வகையான குற்றங்களை உள்ளடக்கிய ஒற்றைச் சொல்லாகும் என்று நாசா விஞ்ஞானி நா.கணேசன் கூறுகிறார். அவர் கொடுக்கும் பட்டியல் பின்வருமாறு:
படிறு paṭiṟu
, n.
1.
Lying, falsehood; பொய். (பிங்.)
2.
Deceit, fraud; வஞ்சனை. (திவா.) படிறிலவாஞ் செம்பொருள் (குறள், 91).
3.
Unruliness, lawlessness; அடங்காத்தனம்.
4.
Mischief; குறும்பு. படிறு பலசெய்து (திவ். பெரியாழ். 3, 2, 6).
5.
Stealth; திருட்டு. (பிங்.)
6.
Clandestine union; களவுப்புணர்ச்சி. மேவும் படிறுவவேம் (திருக்கோ. 390).
7.
Cruelty, wickedness; கொடுமை. ஊராண்மைக் கொத்த படிறுடைத்து (கலித். 89).
இவற்றுள்
ஒன்றையோ பலவற்றையோ தெரிந்தே செய்யும் ஒருவர் ஆசிரியராக, அலுவலராக, அரசியல் தலைவராக,
ஆன்மிகக் குருவாக வேடந்தாங்கி சமுதாயத்தில் வலம் வருவதைக் காணும்போது, அவனோடு பயணம்
செய்யும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பேர்களும் தமக்குள் பேசி, கைகொட்டி
நகைப்பார்களாம்!
-முனைவர் அ.கோவிந்தராஜூ,
மனநல ஆலோசகர், கரூர்.