Monday 10 December 2018

பாரதியாரை நேரில் பார்த்தேன்


    பாரதியாரை நேரில் பார்த்தேன் என்று சொன்னால் நீங்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கக் கூடும். ஆனால் சென்னையில் நேற்று அவருடன் இரண்டு மணி நேரம் கூடவே இருந்தேன் என்பது உண்மை.

Monday 19 November 2018

காலமாகிப் போன கடிதம் எழுதும் கலை

     கைபேசி கைக்கு வந்ததும் கடிதம் எழுதும் வழக்கம் கடிதில் மறைந்து வருகிறது. கடிதம் எழுதுவது என்பது ஒரு கலை. நகைச்சுவை, வருத்தம், வியப்பு, அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி அழுகை என்னும் எண்வகை மெய்ப்பாடுகளையும் சரியான விகிதத்தில் வெளிப்படுத்துவன கலைகள். அப்படியே கடிதம் எழுதும்போதும் நாம் நம் அன்பை, பாசத்தை, மகிழ்ச்சியை, மனக்கவலையை, விருப்பை, வெறுப்பைத் தெரிவிக்கும் வகையில் சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தகுந்த நிறுத்தல் குறியிட்டு எழுதி அனுப்புகிறோம். கடிதத்தைத் தொடங்கும்போது இடப்படும் விளிச்சொல்லும், மடலை முடித்து எழுதப்படும் முடிப்புச் சொல்லும் மிக முக்கியம். இந்த வரைமுறைகளெல்லாம் இன்றைய இளைஞர்க்குத் தெரியாது.

Tuesday 6 November 2018

தீருமா தீபாவலி?


இன்று தீபாவளி.
 எனக்கு நேற்று இருந்த மகிழ்ச்சி இன்று இல்லை. அறுபதைச் சில ஆண்டுகளில் எட்டிப்பிடிக்க உள்ள வயதிலும், என் மனைவி அதிகாலையில் எழுந்து இனிப்பு, காரங்களை வகை வகையாய்ச் செய்ததை வக்கணையாய்த் தின்ற பின்னும் மகிழ்ச்சி  இல்லை.

Saturday 27 October 2018

எழுச்சிமிகு விழாவில் எட்டு நூல்கள் வெளியீடு

   24.10.2018 புதன் கிழமை, முழுமதி நன்னாள், மாலை ஆறு மணி அளவில் மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனார் அரங்கிற்கு நூல் ஆர்வலர்கள் வரிசைகட்டி வந்தார்கள்.

Friday 5 October 2018

தீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா

  திருமணத்திற்குப் புறம்பான பாலியல் உறவு தொடர்பான பொதுநல வழக்கில் மரபை மீறிய தீர்ப்பை அளித்துப் பனை அளவு பழியைச் சுமந்தபடி பணிநிறைவு பெற்றுச் சென்றுள்ளார்  மாண்பமையா நீதிபதி தீபக் மிஸ்ரா.

Saturday 22 September 2018

மரம் வளர்த்த மாமனிதர்

    வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தற்கொலை எண்ணத்துடன் திரிந்த ஒருவரை, “யாமிருக்கப் பயமேன்?” என்று சொன்னதுடன் நில்லாமல் அவரை கோடீஸ்வரனாகவும் ஆக்கிக் காட்டியவை மரங்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

Sunday 9 September 2018

இளமையை மீட்ட இன்பப் பயணம்

   பத்து ஆண்டுகளுக்குப் பிறகு குற்றாலச் சிற்றுலா செல்லும் வாய்ப்புக் கிட்டியது. எங்கள் சம்பந்தி சரவணப்பெருமாள்- டாக்டர் காந்திமதி இணையருடன் சேர்ந்து சென்றது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது.

Saturday 1 September 2018

வம்பில் மாட்டிக்கொள்ளும் வைரமுத்து

   ஊடகக் குதிரைமேல் ஒய்யாரமாக சவாரி செய்யும் வைரமுத்து மீண்டும் ஒரு வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார். சென்றவாரம் கால்டுவெல் என்னும் மேலைநாட்டுத் தமிழறிஞரைப் பற்றி திருநெல்வேலியில் பேசியிருக்கிறார். அது இந்து தமிழ் நாளிதழில் 26.8.18 அன்று வெளிவந்துள்ளது.

Sunday 19 August 2018

பறவைகள் பறக்கும் அழகே அழகு

இன்று (ஆகஸ்ட் 19) உலக ஒளிப்பட நாள்.
 நான் அண்மையில் கனடா சென்றிருந்தபோது 
மாலை மயங்கும் நேரத்தில்
 நடைப்பயிற்சி மேற்கொள்வதை 
வழக்கமாகக் கொண்டிருந்தேன். 
 அந்நேரத்தில் வானில் பறவைகள் 
பறந்து செல்லும் காட்சிகள் 
என்னை மிகவும் கவர்ந்தன. 
அப்போது நான் எடுத்த ஒளிப்படங்கள் 
சிலவற்றை இன்று பதிவிடுகிறேன்.



















கடவுளின் நாடு கலங்கி நிற்கிறது

      God’s own country என்பது கேரளா சுற்றுலாத் துறையின் முத்திரை வாசகமாகும். அந்தக் கடவுளின் நாடு இன்று கொட்டித் தீர்க்கும் பேய்மழையால் கலங்கி நிற்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, அரசு இயந்திரத்தை உரிய முறையில் இயக்கி, மீட்புப் பணிகளைத் திறம்படச் செய்து வருகின்றார்.

Thursday 9 August 2018

கேட்டாரே ஒரு கேள்வி

    உயர்நீதி, உச்ச நீதி மன்றங்களிடத்தில் எனக்கு எப்போதும் தனி மதிப்புண்டு. மறைந்த கலைஞரின் உடல் அடக்கம் செய்வது தொடர்பான சிக்கலில் தமிழகம் போர்க்களமாக மாறாமல் தடுத்த பெருமையை சென்னை உயர்நீதி மன்றம் தக்கவைத்துக் கொண்டதை நாமறிவோம்.

Thursday 2 August 2018

தனித்தமிழ்ச் சிறுகதை


  முத்தமெனும் மாமருந்து
 (முனைவர் அ.கோவிந்தராஜூ)


    கபிலா மருத்துவமனை என்பது கரூர் நகரில் அமைந்துள்ள  புகழ்வாய்ந்த  மருத்துவ மனையாகும். அது ஓர் ஐந்துடு விடுதி போன்று இருக்கும். இந்த மருத்துவமனை வளாகத்தில்   வாகனங்களை  வசதியாக நிறுத்த முடியும்.

Thursday 19 July 2018

தமிழோடு விளையாடு: நூல் மதிப்புரை

   இந்த நூலாசிரியர் திரு.த.ப.சுப்பிரமணியன் அவர்கள் எழுபத்தேழு வயது இளைஞர். நான் அவரினும் பத்து வயது இளையவன். அவரும் நானும் சம காலத்தில் தமிழாசிரியர், தலைமையாசிரியர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எனப் பற்பல பதவிகளை ஏற்று இணைந்துப் பணியாற்றியவர்கள்.      தமிழ்ப் பற்றுக் காரணமாக மரபை மீறி வருகைப் பதிவேட்டிலும் பிற ஆவணங்களிலும் தமிழில் கையொப்பம் இட்டவர்கள்; இடுகிறவர்கள்.

Friday 13 July 2018

ஒரு குருவி நடத்திய பாடம்

   மூன்று நாள்களுக்கு முன்னால் அதிகாலை நேரத்தில் விழித்து எழுந்து வெளியில் வந்தபோது ஒரு சாம்பல் வண்ண குறுங் குருவியைப் பார்த்தேன். எங்கள் வீட்டுத் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓரத்தில் அது உட்கார்ந்திருந்தது. நான் அருகில் சென்றபோதும் அது பறந்து செல்லவில்லை.

Thursday 21 June 2018

நரேந்திர மோடியும் நானும்

   காலை எழுந்தவுடன் தோட்டம் பின்பு வியர்வை தரும் மெல்ல ஓட்டம் என்று இருக்கும் நான் இன்று காலை தொலைக்காட்சிப் பெட்டியின் முன் ஒரு விரிப்பை விரித்து ஒரு மணி நேரம் யோகா செய்தேன் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

Wednesday 13 June 2018

நாடுவார் இல்லா நந்தனார் கோவில்

    சிதம்பரம் வந்து ஒரு வாரம் தங்க நேர்ந்தது. காலை நடைப் பயிற்சியின் போது அறிமுகமான ஒருவரிடம், “சிதம்பரத்தில் நந்தனார் கோவில் எங்கே உள்ளது?” என்று கேட்டேன். “தெருவுக்குப் பத்து கோவில்கள் உள்ளன. எந்த கோவிலுக்கும் பெயர்ப்பலகை இல்லை. அதனால் எது நந்தனார் கோவில் என்று எனக்குத் தெரியாதுஎன்றார். நான் கேட்டது அறியா வினா அன்று; அறிவினா.

Wednesday 6 June 2018

பூட்டுப் போடலாம் பூம்புகார் நகருக்கு


   காவிரி புகும் பட்டினம் என்னும் காரணப்பெயர் பின்னாளில் காவிரிப்பூம்பட்டினம் ஆனது. காலப்போக்கில் அது மருவி பூம்புகார் ஆனது. பண்டையத் தமிழ்நாட்டின் பழைய துறைமுக நகரங்களில் மிகவும் பழமையானது பூம்புகார்.

Tuesday 29 May 2018

இதுவரை சாப்பிடாத இட்லி இது

 இதுவரை பல நூல்களுக்கு நூல் மதிப்புரை எழுதியுள்ளேன். பல திரைப் படங்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளேன். ஆனால் முதல் முறையாக என் மனைவி தயாரித்த புதுமையான  புதுவகையான இட்லிக்கு விமர்சனம் ஒன்றை எழுதுகிறேன்.

Monday 21 May 2018

அவசியமா ஆடம்பர திருமணங்கள்?


   கடந்த இரு பத்தாண்டுகளில் ஆடம்பர திருமணங்கள் அதிகரித்து வந்துள்ளன. இந்த வகைத் திருமணங்களால், திருமண வீட்டாரின் செல்வச் செழிப்பைப் பறைசாற்றும் பயனைத்தவிர வேறு எந்தப் பயனும் இல்லை என்பதே எனது கருத்தாகும்.

Sunday 13 May 2018

தேடினும் கிடைக்காத தேன் சிட்டு

   கனடாவிலும் அமெரிக்காவிலும் பறவைகளுக்குப் பஞ்சமில்லை. தோளில் கேமராவை மாட்டிக்கொண்டு காலையில் புறப்பட்டால் நடைப்பயிற்சி முடியும்போது பத்துவகையான பறவைகளைப் படம் பிடித்து வருவேன். ஆனால் நான் வசிக்கும் கரூரில், காந்திகிராமம் பகுதியில் பறவைகள் அதிகம் இல்லை. நான் சிறுவனாக இருந்தபோது மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பறவைகள் ஆங்கில எழுத்தான V வடிவத்தில் பறப்பதைப் பார்த்திருக்கிறேன். இதை ஆங்கிலத்தில் skein என்னும் சொல்லால் குறிப்பிடுவர். இப்போதெல்லாம் இத்தகு காட்சியைப் பார்க்க முடிவதில்லை.






    அதேசமயம் என் வீட்டுக்கு விதவிதமான பறவை விருந்தாளிகள் வருகின்றன. வீட்டை ஒட்டியுள்ள இரண்டாயிரம் சதுர அடி  நிலத்தில் நிறைய மரங்களை நட்டு வளர்த்துள்ளேன். தென்னை, தேக்கு, கொய்யா, அகத்தி, புங்கை, முருங்கை, சப்போட்டா, வேம்பு, நெல்லி, வாழை, மாதுளை என பல்வகை மரங்களும் பாங்குற வளர்ந்துள்ளதால், பறவைகளுக்குக் கொண்டாட்டமாக உள்ளது. கூடு கட்டி, குஞ்சு பொறித்துக் கொஞ்சி மகிழ்கின்றன. மேலும் பெரிய தட்டுகளில் தூய குடிநீரை தினமும் நிரப்பி வைக்கின்றேன். அதைக் குடிப்பதற்கும், அதில் குளித்துக் கும்மாளம் போடுவதற்கும் அதிக எண்ணிக்கையில் வண்ணப் பறவைகள் வந்த வண்ணம் உள்ளன.

   அண்மையில் தேன் சிட்டு என்னும் குறுங்குருவிகள் அடிக்கடி வந்து செல்கின்றன. சிட்டுக் குருவியைவிட சிறியது இது. நீண்ட சற்றே வளைந்த அலகை உடையது. ஊசி முனை போன்ற கூரிய அலகால் பூவில் இருக்கும் குண்டூசி தலை அளவு தேனை ஒரு நொடியில் உறிஞ்சி எடுக்கும் திறமை உடையது இக் குட்டிச் சிட்டுகள். நாளும் காலையில் மட்டும் அதுவும்  ஏழு மணிக்கு முன்னதாக வந்து விடுகின்றன. மாலை நேரத்தில் வந்தால் பூக்கள் வாடி இதழ்கள் மூடிக்கொள்ளும் என்பதைச் சரியாக அறிந்து வைத்திருக்கின்றன.

  தொங்கும் பூக்களில் இந்தத் தேன் சிட்டு தலை கீழாய்த் தொங்கியபடி தேனைக் குடிக்கும் காட்சியைப் பார்க்கும்போது வியப்பு இமயத்தைத் தொடுகிறது. கண் இமைக்கும் நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட பூக்களில் தாவித் தாவி அமர்வதால் படம் எடுப்பதற்குப் படாத பாடு பட்டேன். நான் படம் எடுப்பதை அது  பார்த்துவிட்டால் அடுத்த நொடியில் பறந்தோடிவிடும்.

   தேனை எடுக்கும் அந்த நொடியில் ஒரு மகத்தான செயலை அந்தச் சின்னச் சிட்டு சிறப்பாக நடத்தி முடித்து விடுகிறது. ஆம், தான் நுகர்ந்த ஒரு துளி தேனுக்கு நன்றி செலுத்தும் வகையில், ஆண் பூக்களில் உள்ள மகரந்தப் பொடியை பெண் பூக்களின் மீது வைத்து விடுகின்றன. அதன் விளைவாக மலர்களுக்கும் மசக்கை உண்டாகி, மகசூல் மட்டிலா அளவில் அமைகிறது.


    ஐந்தறிவுள்ள இந்தச் சிட்டுக்கு உள்ள சுறுசுறுப்பும் முயற்சியும் ஆறறிவுள்ள மனிதனுக்கு இல்லை என்பதே என் கணிப்பாகும்.

Thursday 3 May 2018

மக்காத குப்பையும் என் மனைவியின் மகத்தான தீர்வும்

   நம் நாட்டில் திடக் கழிவுகள் பிரச்சனை என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாகவே உள்ளது. அழகு நகரங்கள் பட்டியலில் உள்ள திருச்சி மாநகரிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இது தொடர்பாக ஒரு குறும்படம் தயாரித்து வெளியிட்டும் கூட போதிய விழிப்புணர்வு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

Wednesday 18 April 2018

விபத்தை விளைவிக்கும் விநாயகர்

   சிதம்பரம் கோவில் நகரம் எனக் குறிப்பிடும் அளவுக்கு தெருவுக்குத் தெரு கோவில்கள் காணப்படுகின்றன. கொஞ்சம் பெரிய கோவிலாக இருந்தால் திருக்குளமும் இருக்கும். போதிய பராமரிப்பும் கண்காணிப்பும் இல்லாத காரணத்தால் அந்தத் திருக்குளங்கள் பொதுமக்களின் கையகப்படுத்தலுக்கு உள்ளாகி இன்று கழிவு நீர்க் குட்டைகளாக மாறிவிட்டன. இளமையாக்கினார் கோவில் திருக்குளம் இதற்கு முதன்மையான எடுத்துக்காட்டாகும்.

Saturday 7 April 2018

இன்சொல் இல்லா இந்தியா

   பத்து மாத வெளிநாட்டு வாசத்திற்குப் பிறகு நாடு திரும்பி ஒரு வாரம் ஆகிவிட்டது. நாளும் பல்வேறு அலுவலக வாயில்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறேன். அலுவலக ஊழியர் பலரையும் சந்திக்கிறேன். பெரும்பாலோரிடத்தில் நான் எதிபார்த்த இன்சொல்லோ, ஒரு புன்னகையோ இல்லை. எதிரில் இருக்கைகள் தயாராக இருந்தாலும் அவர்கள் நிற்க வைத்தே பேசுகிறார்கள்; அதுவும் எதிரியிடம் பேசுவதைப் போல்.

Wednesday 28 March 2018

காட்டுக்குள்ளே திருவிழா

   இன்னும் சில மணி நேரத்தில் இந்தியாவை நோக்கிய இனிய பயணம் தொடங்க உள்ள நிலையில், நிறைவாக நிறைவான ஒரு பதிவை இடும் நோக்கில் மடிக்கணினியைத் திறக்கிறேன்.

Tuesday 27 March 2018

பணமதிப்பு இழக்காத பணம்

   பதினெட்டாம் நூற்றாண்டில் வெளிவந்த அமெரிக்க நாட்டின் பணத்தாள் இன்றும் செல்லும் என்றால் வியப்பாக உள்ளதா? சுதந்திரம் அடைந்தபின் நான்கு முறைகள் பணமதிப்பு இழக்கச் செய்த நாட்டில் வாழும் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.

Monday 26 March 2018

கலங்க வைத்த கண்ணீர் அருங்காட்சியகம்

   ஆம். இது ஒரு கண்ணீர் அருங்காட்சியகம்தான். ஆருயிர் மனைவியும், அருமைக் குழந்தைகளும் சிந்திய கண்ணீருக்குச் சாட்சியாக இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளவற்றைப் பார்த்தபோது என் கண்கள் கலங்கின.

Tuesday 20 March 2018

மறக்க முடியாத மரக்கா Arboretum

   ஆர்போரீட்டம் (Arboretum) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு மரங்களின் தொகுதி அல்லது கூட்டம் எனப் பொருள் சொல்லலாம். குறிப்பாகச் சொன்னால் வெவ்வேறு பெயருடைய  மரங்களை ஒரு பெரும்பரப்பில் நட்டு வளர்ப்பதாகும். இந்த ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக மரங்கள் நிறைந்த சோலை என்னும் பொருள் தரும் வகையில்  மரக்கா என்னும் புதிய சொல்லை நான் உருவாக்கியுள்ளேன்.

Thursday 15 March 2018

புத்துணர்வு தரும் பூங்கா

     ஒரு நூறு ஏக்கர் பரப்பில், அதுவும் நகரின் நடுவில், ஓர் அழகான தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது என்னும் செய்தியை நம்பாமல்தான் அங்கு போனேன். நம்பினேன் நேரில் பார்த்தபின்.

Thursday 8 March 2018

இந்தியாவின் இனிய மகள்

    விடுதியில் தங்கிப் படிக்கும் பள்ளிச் சிறுவன் வீட்டு நினைப்பு அதிகமாகி,  விடுமுறையில் வீடு திரும்ப ஏங்கிக் காத்துக்கிடப்பது போல இப்போது என் மனநிலை உள்ளது. அவனுக்கு வீட்டு நினைப்பு; எனக்கு நாட்டு நினைப்பு. அவ்வளவுதான் வேறுபாடு. இந்தியாவுக்கு விமானம் ஏறும் அந்த இனிய நாள்- இந்த மாதம் இருபத்து எட்டாம் தேதிக்காகக் காத்திருக்கிறேன்.

Saturday 3 March 2018

மெல்ல இனி வாழும்

   பண்டைத் தமிழரின் கவி மரபு வியப்புக்குரியது. ஆடவர்க்கு இணையாக மகளிரும் யாப்பிலக்கணம் அறிந்திருந்தனர் என்பதற்குச் சங்கப் பாக்களைப் பாடியுள்ள பெண்பாற் புலவர்களே சான்றாக அமைவர். மேலும் சமூகத்தில் வாழ்ந்த பல்வகைத் தொழில் செய்தாரும் பாங்குற பாவியற்றும் ஆற்றல் பெற்றிருந்தனர். மருத்துவன் இளநாகனார், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், கணியன் பூங்குன்றனார் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

    அப்படி அவர்கள் இயற்றிய பாவகைகளில் ஒன்று சித்திரக் கவி என்பதாகும். சித்திரக் கவிகளை இயற்றுவதற்கு மட்டுமல்ல இத்தகு பாக்களைப் படிப்பதற்கும் தனித்திறன் வேண்டும்.

  பாம்புகள் பிணைந்து நிற்பதாகப் படம் வரைந்து அவற்றின் மீது கவிதை வரியை அமைத்தார்கள். இதற்கு நாக பந்தம் என்று பெயர். இறைவன் உலாவரும் தேர் போன்ற படத்தில் பா அமைத்து இரதபந்தம் என்று அழைத்தார்கள். இப்படி இச் சித்திரக் கவி பலவகைப்படும்.

     சென்ற நூற்றாண்டுவரை இச் சித்திரக் கவிமரபு தமிழ்நாட்டில் பரவலாக இருந்தது. இப்போது அத்தி பூத்தாற்போல் சிலரே முயல்கின்றனர். இவ்வகைக் கவிதைகளைப் படித்துப் பாராட்டுவோரும் இல்லை. கொள்வோர் இல்லையேல் கொடுப்போரும் இல்லாமல் போவர் என்பது உண்மை.

   நான் கடந்த ஒரு மாதமாக என் தூக்கத்தைத் தொலைத்துவிட்டுப் பல சித்திரக் கவிகளை இயற்றினேன். அவற்றில் சிலவற்றை வலைப்பூ வாசகரிடையே அரங்கேற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அருள்தரும் பால்மனம்சேர் நம்பிமுரு காநீ 
       வருகுதிசீர் தந்திடுவாய் வேண்டுவோர் கண்பார்க்க 
   மீதிறத்தோய் போக்கிலார் போற்ற வருகுதியே 
நீதிறக்க வேகும் மருள்.

(எழுத்துகள்:பாடலில் 73, படத்தில் 66)
     பொருள்: அடியார்க்கு அருள் தரும் பால்மனம் கொண்ட நம்பியே! முருகா! நீ வருக. எமக்குச் சீர் தருக. மீ திறம் உடையானே! உன்னை வேண்டி நிற்கும் அடியார்கள் பார்க்கும் வண்ணம் என்னைப் போன்ற போக்கிடம் இல்லாதோர் போற்றிட வருக. வந்து நீ உன் கண் திறந்து எம்மை நோக்கினால் எம்மிடத்தில் உள்ள மயக்கம் வெந்து சாம்பலாகும்.







Sunday 25 February 2018

என் மனம் கவர்ந்த மழலையர் பள்ளி

   கால் நூற்றாண்டு காலம் பள்ளித் தலமையாசிரியராகப் பணியாற்றிவன் என்பதால் பள்ளியைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தால் உடனே சென்று பார்ப்பது என் வழக்கம். அந்த வகையில் அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் கெல்லர் என்னும் நகரில் அமைந்துள்ள ரிட்ஜ் வியூ தொடக்கப் பள்ளியைப் பார்க்க நேர்ந்தது.

Tuesday 20 February 2018

சுட்டிக் குழந்தைகளைச் சுட்டுத் தள்ளினான்

   நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டு யோசிக்கிறேன். குளிரிலும் வியர்த்துக் கொட்டுகிறது. ஒரு கோணத்தில் அப்பாவாக, இன்னொரு கோணத்தில் ஆசிரியராக நின்று நினைத்துப் பார்க்கிறேன். இது இன்னொரு செய்திதானே என்று ஒதுக்கிவிட்டு என் வேலையைப் பார்க்க முடியவில்லை. சென்ற வாரத்தில் நடந்த இந்தச் சோக நிகழ்வு பற்றி தொலைக்காட்சியில் பார்க்கும் போதெல்லாம் யாரோ ஒருவர் என் உடலுள் புகுந்து என் இதயத்தை இரு கைகளாலும் பிசைவதாக உணர்கிறேன்.

Wednesday 14 February 2018

அமெரிக்காவில் அன்பர் தினம்

  வேலண்ட்டைன் டே எனப்படும் காதலர் தினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. இளம் காதலர்களும் இளம் கணவன் மனைவியரும் புத்தாடை அணிந்து ஒருவர்க்கொருவர் கொய்மலர், வாழ்த்து அட்டை, ஆடை அணிகலன் போன்ற அன்பளிப்புகளைத் தந்து மகிழ்கிறார்கள். உணவகங்களுக்குச் சென்று உண்டு மகிழ்கிறார்கள். சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்று, சேர்ந்து நடனம் ஆடுகிறார்கள்.

Tuesday 13 February 2018

எங்கு நோக்கினும் எண்ணிலா வண்ணத்துப் பூச்சிகள்

  அமெரிக்காவிற்கு வந்து அக்கடா என்று என் பெரியமகள் இல்லத்தில் தங்கி ஓய்வாக எழுதவும் படிக்கவுமாய் இருந்த சமயத்தில்  ஒரு நெடுந்தூர பயணம் வாய்த்தது.

Monday 5 February 2018

பார்த்தேன் பத்மாவதியை

   சஞ்சய் லீலா பன்சாலி.

 இவர் யாரென்று யாருக்கும் தெரியாது. ஆனால் இவர் தயாரித்துள்ள  பத்மாவதி என்னும் இந்தித் திரைப்பட வெளியீட்டிற்குத் தடைகேட்டு ஒரு  வழக்கு உச்ச நீதி மன்றத்துக்கு வரவும் இந்தப் பெயர் இந்தியாவில் வீட்டுக்கு வீடு உச்சரிக்கும் பெயராகிவிட்டது. இந்தியா என்ன, கடந்த எட்டு மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் வசிக்கும் எனக்கே அந்தப் பெயர் அத்துபடி ஆகிவிட்டது.

Wednesday 31 January 2018

அமெரிக்காவின் அழகிய சந்திர கிரகணம்

   ஒருவன் குண்டூசிகளை எடுத்து நம் உடல்மீது குத்திக்கொண்டே இருந்தால் எப்படியிருக்கும்? அப்படி ஒரு குளிர் அதிகாலையில். காலை ஐந்து மணிக்கு எழுந்து குளிர் தாங்கும் உடையணிந்து காமிராவும் கையுமாக புறப்பட்டு, வெளியில் ஓடிப் பார்த்தால் அம்புலி மாமா என் கண்ணுக்கு அகப்படவே இல்லை. சுற்றிலும் உயர்ந்த கட்டடங்களும் மரங்களும் இருந்தால் எப்படித் தெரியும்?

Tuesday 30 January 2018

காந்தியாரிடம் கற்றுக் கொள்வோம்

   மகாத்மா காந்தி இலண்டனில் நடந்த வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றார். அவர் உலகத் தலைவர்களில் ஒருவராக இருந்ததால், மாநாடு முடிந்ததும் அவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு பலவேறு வினாக்களைக் கேட்டனர். நிறைவாக ஒரு நிருபர், “நீங்கள் நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தி என்ன?” என்று கேட்டார். காந்தியடிகள் சற்றும் தாமதிக்காமல், “My life is my message“ என்று சொன்னார். இப்படி என் வாழ்வே என் செய்தி என்று சொல்வதற்கு முற்றிலும் தகுதியுடையவர் அவர். இன்றையத் தலைவர்கள் யாரேனும் இப்படிச் சொன்னால் சிறந்த நகைச்சுவை என்று சிரிக்கலாம்.

Thursday 25 January 2018

சிரம் தாழ்த்தினேன் சீனக் கலைஞர்களுக்கு

   ஷென் யூன் நிகழ்த்துக் கலைக்குழு(Shen Yun Performing Arts) என்பது சீன நாட்டின் புகழ் பெற்ற பாரம்பரிய கலைக்குழுக்களில் முதன்மையானதாகும். இவர்கள் அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் நிகழ்த்துக்கலை பயிற்சிக் கல்லூரி ஒன்றைச் சிறப்பாக நடத்துகிறார்கள்.  உலகம் முழுவதும் சென்று முக்கிய நகரங்களில் முகாமிட்டுக் கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

Monday 22 January 2018

விளையாடலாம் மீண்டும்

         
  விளையாடுதல் என்பது விலங்கினங்களுக்கே உரித்தான ஓர் இயல்பூக்கமாகும். மேய்ந்து வயிறு நிரம்பிய ஆடுகள், மாடுகள் ஒன்றுடன் ஒன்று கொம்புகளால் உரசித் துள்ளி விளையாடுவதை நாம் பலகாலும் பார்த்திருக்கிறோம். நாய்கள் சேர்ந்து ஓடித் தழுவி விளையாடும் அழகே அழகு.

Tuesday 16 January 2018

முகநூல் ஹைக்கூ

                
முகநக நட்பதே
 நட்பு
முகநூலில் 

அகநக நட்பு
வேண்டாம்
முகநூலில் 

ஒரே சொடுக்கில்
ஓராயிரம் நட்பு
முகநூலில் 

பெண்ணே உன்
படம் இடேல்
முகநூலில் 

பாம்பின் படம் தொடலும்
முகநூலில் படம் இடலும்
ஒன்றே.

வாழ்ந்தவரும் உண்டு
மாய்ந்தவரும் உண்டு
முகநூலால். 

கல்யாணம் பண்ணியும்
சந்நியாசிகள் இருவரும்
முகநூலால். 

லைக் இல்லாவிட்டால்
 லைஃப் இல்லை
முகநூலில்.

அப்பா  அம்மா
குழந்தைகள்
தனித்தனித் தீவுகளாய்.

மேதையும்
பேதையும்
முகநூல் போதையில்.

காலை எழுந்ததும் முகநூல்
கருத்தாய் உள்ளாள்
 பாப்பா.

மாலை முழுதும் முகநூல் என
வழக்கப்படுத்திக் கொண்டாள்
பாப்பா.

பொழுதுபோக்க
நுழைந்தாள் முகநூலில்;
விழுந்தாள் பழுதாகி.

அளவுக்கு மிஞ்சினால் விஷம்
அமுதம் மட்டுமல்ல
முகநூலும்.

உன்னால் நான் கெட்டேன்
என்னால் நீ கெட்டாய்
முகநூல் புதுமொழி. 

செல்லெல்லாம்
செல்லாகா
முகநூலின்றி.

வழக்கொழிந்தன
பல நூல்கள்
ஒரு நூல் உலாவர.

முகநூல் பார்த்தவனின்
முகம் சிதைந்தது
கார் விபத்தில்.

முகநூலில் லைக் போட்டவள்
சாம்பாரில்
உப்பு போடவில்லை!

முகநூலில் லைக் போட்டவன்
 மனைவியின் சமையலுக்கு
 லைக் போடவில்லை!

ஒவ்வொருவர் கையிலும்
ஒரே நூல்தான்
முகநூல்.

முகநூல் இல்லாமல்
முனியம்மா இல்லை
முனிவரும் இல்லை!

முகநூல் என்பது
இருமுனைக் கத்தி
கையாள்க கவனமுடன்.

முகநூலும் இருக்கட்டும்
ஒரு மூலையில்
ஊறுகாய் அளவில்.

   -கவிஞர் இனியன், கரூர்.