Tuesday 26 September 2017

வெளியில் விலங்குகள் கூண்டில் மனிதர்கள்

  விலங்குகளைக் கூண்டில் அடைப்பது, அவற்றை சர்க்கஸ் காட்சிகளில் பயன்படுத்துவது, குறிப்பாக யானைகளைக் கோவில் வாசலில் கட்டிப்போடுவது, கிளி ஜோஸ்யம் என்னும் கிறுக்குத்தனமான செயலுக்காக கிளிகளை அடைத்து வதைப்பது, கொத்தித் திரியும் அந்தக் கோழிகளைக் கொட்டகையில் அடைத்து வளர்ப்பது, அண்டிப் பிழைக்கும் நல்ல ஆடுகளில் ஓர்  ஆடு பார்க்க மற்றோர் ஆட்டை அறுத்துக் கறிக்கடையில் தொங்கவிடுவது போன்ற எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை.

    மனிதர்கள் கூண்டுக்குள் கிடக்க, அவர்களை விலங்குகள் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்தால் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பார்ப்பேன்.    இப்படி கரூரில் உட்கார்ந்துகொண்டு கற்பனை செய்து பார்த்தது கனடாவில் நிஜமாகி விட்டது.

    நாங்கள் வசிக்கும் பேஷோர் பகுதியிலிருந்து காரில் தொண்ணூறு  கிலோமீட்டர் பயணித்தால் மாண்ட்டிபெலோ என்ற ஊர் வரும். இது அண்டை மாநிலமான கிபெக்கில் உள்ளது.

    வழியில் ஆர்ப்பரித்து ஓடும் ஒட்டாவா நதி குறுக்கிட்டது. நண்பர் ஆற்றின் படகுத் துறைக்கு காரை விட்டார். எட்டு கார்களை ஒரே சமயத்தில் ஏற்றிக்கொண்டு ஆற்றைக் கடக்கும் வல்லமையுடைய இயந்திரப் படகு எங்களுக்காக காத்து நின்றது. படகின் தளமும் சாலையும் சமதளத்தில் இருந்தன. எங்கள் கார் படகினுள் சென்று நின்றதும் படகு புறப்பட்டது. அடுத்த மூன்றாவது நிமிடத்தில் படகு அக்கரையைச் சேர காரை உயிர்ப்பித்துப் பயணத்தைத் தொடர்ந்தோம். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்னும் நம்மூர் பழமொழியின் பொருத்தப்பாட்டை எண்ணி வியந்தேன்.

 விலங்குகளும் பறவைகளும்  வசிக்கும் அந்த ஊரில் மருந்துக்குக் கூட மனிதர்கள் வசிக்கும் வீடுகள் இல்லை. அங்கே வசித்த காட்டுவாசிகள் சிலரும் பீசா தின்னும் ஆசையில் ஒட்டாவா பக்கம் ஓடி வந்து விட்டனர்.

  பார்க் ஒமேகா என்பது இந்தக் கானுயிர் காட்சியகத்தின் பெயராகும்.

   இரண்டாயிரத்து இருநூறு  ஏக்கர் பரப்பில் அங்கும் இங்கும் அடர் காடுகள், அழகான குன்றுகள், அமுதமாய் நீர் நிறைந்து விலங்குகள் நீந்தி மகிழும் ஏரிகள், சுட்டிக் குழந்தையின் உற்சாகம்போல் பொங்கிப் பெருகும் ஊற்றுகள், சுனைகள் - அவற்றின்மீது பீவர் என்னும் விலங்குகள் கட்டிய அணைகள், இவற்றுக்கிடையே வளைந்தும் நெளிந்தும் செல்லும் மண்சாலைகள் – பார்க்கப் பார்க்க மனம் கள்வெறி கொண்டு களிப்படைகிறது!

    நுழைவாயிலில் அமைந்துள்ள வரவேற்பகத்தில் உரிய கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டோம். நான் ஒரு முதிய இளைஞர் என்பதால் எனக்குக் கட்டணச் சலுகை இருந்தது.

  “குறிப்பிட்ட ஒரே ஒரு இடம் தவிர மற்ற இடங்களில் காரைவிட்டு யாரும் கீழே இறங்கக் கூடாது. விலங்குகளுக்கு கேரட் கிழங்கைத் தவிர வேறு எதையும் கொடுக்கக்கூடாது” என்று எச்சரித்து எங்களை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

    காட்டினுள் பதினைந்து கிலோமீட்டர் தூர  கார் பயணம் தொடங்கியது. குறுங்குன்றுகளின் மீது ஏறியும் இறங்கியும் செல்ல வேண்டும். வழித்தட வரைபடத்தை மடியில் வைத்து அவ்வப்போது பார்த்துக்கொண்டு மிகக் கவனமாக காரை ஓட்டினார் நண்பர் குமரேசன். இருபது இடங்களில் நின்று கண்ணில் பட்ட கானுயிர்களைக் கண்டோம். வெளியில் எங்கு பார்த்தாலும் விலங்குகள் நாங்கள் மட்டும் கார் என்னும் கூண்டுக்குள்ளே!

    என் கண்களில் பட்ட விலங்குகள் பறவைகள் அனைத்தையும் படம் பிடித்தேன். காரை நிறுத்தினால் போதும். மான், காட்டெருமை, காட்டுப் பன்றி போன்ற விலங்குகளில் ஏதேனும் ஒன்று காருக்குள் தன் கழுத்தை நீட்டும். மக்கள் அதன் முகத்தை அன்புடன் தடவிக்கொடுத்து, தின்பதற்குக் கேரட், சோளம் போன்றவற்றைத் தருவார்கள்.


 
ஓர் இடத்தில் மட்டும்  காரைவிட்டு இறங்க அனுமதிக்கிறார்கள். அங்கே டிராக்டர் இழுத்துச் செல்லும் கூண்டு வண்டியில் ஏறி சிறிது தூரம் சென்று ஒரு தோட்டம், வனவாசிகள் பாரம்பரிய காட்சியகம், அங்கே திரியும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக் காண்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.






  காட்டுக் குதிரைகளும், வரை ஆடுகளும் நம்மை உரசிக் கொண்டு நிற்கும். துள்ளித் தாவும் முயல்களைத் தொட்டுத் தூக்கலாம். பல மான்கள் மனிதரைக்கண்டு பயப்படாமல் திரிந்தன; சில படுத்துக் கிடந்தன. குழந்தைகள் எவ்வித பயமும் இல்லாமல் அவற்றைத் தொட்டு வருடி அதனுடன் பேசி மகிழ்ந்தனர். நானும் ஒரு மானும் சேர்ந்து நின்று படம் எடுத்துக்கொண்டோம்.


   திரும்பி வரும் வழியில் வெள்ளை நிற  ஓநாய்கள் கூட்டமாகத் திரிந்ததைப் பார்த்தோம். அது மான் இல்லை- மான் போன்ற பெரிய விலங்கு ஒன்று கண்களை மூடித் தூங்கி வழிந்ததைக் கண்டோம்.

    ஒரு குளத்தில் மான்கள் நீந்தி நீராடிக் கொண்டிருந்த காட்சி இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. இன்னொரு குளக்கரையில் வெண்மயில் உள்ளிட்ட விதவிதமான பறவைகள் மேய்ந்து கொண்டிருந்தன.

   எங்கள் காரை முந்திக்கொண்டு ஒரு திறந்த வாகனத்தில் சென்ற ஓர் இளம்பெண் ஒரு கையால் ஒய்யாரமாக வாகனத்தை ஓட்டியபடி மற்றொரு கையால் சோளம். பருப்பு போன்றவற்றை பாதையின் இருபுறமும் அள்ளி வீசிக்கொண்டே விரைந்தாள். பறவைகள் அவற்றைக் கொத்தித் தின்றன. அவள் அந்தக் கானுயிர் காப்பகத்தின் பணிப்பெண்ணாம்; வன தேவதையைப்போல வனப்புடன் இருந்தாள்!








   இந்த வனப் பயணத்தின் போது நாங்கள் பார்த்த கானுயிர்களின் பட்டியல் இது.  Alpine ibex, Arctic fox, Arctic wolf, Beaver, Bison, Black bear, Boar, Canadian goose, Coyote, Duck, Elk, Fallow deer, Great blue heron, Grey wolf, Moose, Musk, ox, Rabbit, Red deer, Red fox, Rein deer, White fox, White pea cock, Wild horse, Wild turkey. இவற்றில் மிகப்பல கனடா நாட்டுக் கானுயிர்கள் என்பதால் தமிழ்ப் பெயர்கள் தெரியவில்லை.

 கிபெக் மாநிலத்தில் ஆங்கில மொழியின் பயன்பாடு இம்மியளவும் கிடையாது. வழிகாட்டி விவரம், நுழைவுச் சீட்டு, கானுயிர்க் கையேடு உட்பட எல்லாம் ஃபிரெஞ்ச் மொழியில்தான் உள்ளது. நல்ல வேளையாக பணியாளர்கள் நாம் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்கிறார்கள்.

  
ஒரு நாளில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கார்களில் இரண்டாயிரம் பேர்களுக்குக் குறைவில்லாமல் இங்கே வருகின்றனர். நூற்றுக் கணக்கில் பள்ளி மாணவர்கள் தனிப் பேருந்தில் வன உலா செல்கின்றனர். ஆனால் எங்கும்  பாலித்தின் பை போன்ற குப்பைகளை அறவே பார்க்க முடியாது. இந்த ஒழுங்கை நாம் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

  காட்டில் கழித்த அந்த ஐந்து மணிநேரம் என் வாழ்க்கையின் பொன்னான தருணங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. மனைவி, மகள் என குடும்பமாகச் சென்று பார்த்தது எனது நல்லூழ்ப் பயன்  என எண்ணுகிறேன்.

   கனடா நாட்டிற்கு வரும் அன்பர்கள் கண்டிப்பாக இங்கே செல்ல வேண்டும். இங்கே நடுக்காட்டில் ஒரு தங்கும் விடுதியும் உள்ளது. வன விலங்குகள் வசிப்பிடத்தில் ஓர் இரவு தங்கிப் பெறும் அனுபவம் புதுமையாக இருக்கும். கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் இரவில் தங்கி நடு நிசியில் முழுநிலவில் வன நடைப்பயிற்சி செய்த அனுபவம் எனக்கு உண்டு.

காக்கை குருவிகள் எங்கள் ஜாதி - நீள்
காடும் மலையும் எங்கள் கூட்டம்

என்று உணர்ந்துதான் பாடியிருக்கிறான் பாரதி என்பதை இப் பயணத்தின் நிறைவில் உணர்ந்தேன்.

    இதுபோன்ற திறந்தவெளி கானுயிர்க் காட்சியகங்கள்(Vivariums) நம் நாட்டிலே இருக்கின்றனவா என்பது குறித்து இப் பதிவைப் படிக்கும் வாசகர்கள் தெரிவிக்க வேண்டும்.
........................................................
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.
 
  

    

Friday 22 September 2017

முதல் முதலாகப் பார்த்தபோது

     என் வாழ்க்கையில் நான் முதல் முதலாகப் பார்த்து வியந்தவை என ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

 எனக்கான பெண் பார்க்கும் படலத்தில் முதன் முதலாகப் பார்த்த  பெண்- அவள் பெயர் கூட இன்னும் நினைவில் இருக்கிறது - மாலதி.

         முதன் முதல் தொலைக்காட்சி பார்த்தது சென்னையில் 1976 ஆகஸ்ட் பதினைந்தாம் நாள்-  பொதிகைத் தொலைக்காட்சி தொடங்கிய நாள் அதுதான். அப்போது சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர்க் கல்லூரியில் பி.எட் படித்துக் கொண்டிருந்தேன்.

    முதல் முதலில் கப்பலைப் பார்த்தது  1984 ஆம் ஆண்டு- கொச்சின் துறைமுகத்திலிருந்து திப்புசுல்தான் என்னும் பெயர் கொண்ட கப்பலில் பயணித்தேன் இலட்சத் தீவை நோக்கி.

   பிரம்ம குமாரிகள் ஏற்பாட்டில் 2007 ஆம் ஆண்டு  மவுண்ட் அபு என்னும் இடத்தில் நடந்த மாநாட்டுக்காக சென்னையிலிருந்து அகமதபாத் சென்றபோது முதல் முதலாக விமானத்தைப் பார்த்தேன்; அதில் பயணித்தேன்.

  முதன் முதலில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களைப் பார்த்ததும் கைகுலுக்கியதும் 2003 ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று புதுதில்லியில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றபோது.

     முதல் முதலில் நான் பார்த்த வெளிநாடு அமெரிக்கா.

  இந்த வரிசையில்  நேற்று இன்னொன்றும் சேர்ந்து கொண்டது.



Driverless car in front of Parliament Hill
(photo courtesy: Google)

Minister embarks the new ere  autonomous car
(photo courtesy: Google)

(photo courtesy; Google)
  என் மகள் வாங்கித் தந்த  மாதாந்திர பேருந்து பயண அட்டை கையில் இருப்பதால் ஊர் சுற்றுவதே எனது வேலையாக உள்ளது. நேற்று ஒட்டாவா நகரில்  பாராளுமன்றக் கட்டடம் அமைந்துள்ள வெலிங்க்டன் சாலையில் திரிந்துவிட்டு நகரப் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தேன். அதுவரையில் நான் பார்த்திராத வடிவில் ஒரு சிவப்பு வண்ண வாகனம்  வந்து சற்றுத் தள்ளி நின்றது. ஆர்வம் மிகுதியில் அதை ஓட்டுவது ஆணா பெண்ணா எனப் பார்க்க எண்ணினேன். அதற்குள் அதன் கதவு தானே திறந்தது. நான்கு பேர்கள் ஏறி அமர்ந்ததும் கதவு தானே மூடியது. ஓடிப்போய் பார்த்தேன். ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லை. ஆனால் அந்த வாகனம் புறப்பட்டுச் சென்றது! வியப்புடனும் குழப்பத்துடனும் இல்லம் திரும்பினேன். காட்சிப் பிழை நேர்ந்திருக்கலாம் என எண்ணி என் மனைவி மகளிடம் கூட அதுபற்றிப் பேசவில்லை.

 இன்று காலையில் மெட்ரோ போஸ்ட் நாளேட்டைப் பார்த்தபோதுதான் தெரிந்தது அது நான் முதல் முதலில் பார்த்த ஓட்டுநர் இல்லாத தானியங்கிப் பயணியர் வாகனம் என்பது.

     அந்த வாகனத்தில் பயணித்தது கனடா நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் மார்க் கரினியூ உள்ளிட்ட ஆய்வுக் குழு. கனடா நாட்டில் நிகழ்ந்த தானியங்கி காரின் முதல் சோதனை ஓட்டம் அது. தானியங்கி கார்கள் தொடர்பான விதிமுறைகளை வகுக்கும் குழுவும் அதுதானாம். தெளிவான காப்பீடு உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு, குடிமக்களின் கருத்தையும் இணைத்துப் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்படுமாம். ஒப்புதல் கிடைத்ததும் தானியங்கி வாகனங்கள் ஓடத்தொடங்குமாம். இதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ள இருக்கும் காலம் ஒரு வருடம் மட்டுமே.

   அடுத்த ஆண்டு நான் மீண்டும் கனடா வரும்போது தானியங்கிக் காரில் பயணிப்பது உறுதி.

    ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வீடு வீடாகச் சென்று பீசா வழங்கும் வாகனமாக இந்தத் தானியங்கி வாகனம் அறிமுகமானது. விபத்துகள் ஏதுமின்றி இயங்கியதால் இப்போது பல நாடுகளில் மெல்ல மெல்ல புழக்கத்திற்கு வருகின்றன.

  முன்னால் பின்னால் பக்கத்தில் வரும் வாகனங்களை உணர்ந்து வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் செல்கின்றன. முன்னால் தடை ஏற்படும்போதும் திருப்பங்களில் திரும்பும் போதும் அதற்கு ஏற்ப பிரேக் இயங்குகிறது. சாலையைக் கடக்கும் மனிதர்களைப் பார்த்ததும் நின்று வழிவிடுகிறது. சிக்னலில் சிவப்பு விளக்கைக் கண்டால் நிற்கிறது; பச்சை விளக்கைக் கண்டால் புறப்படுகிறது. ஜிபிஎஸ் கருவி வழிகாட்ட உரிய இடத்தைச் சென்று அடைகிறது. காரின் இயக்கத்தை நெறிப்படுத்த ரேடார் மற்றும் லிடார் என்னும் உணரிகள்(sensors) பொருத்தப்பட்டுள்ளன.(RADAR- Radio  Detection And Ranging; LIDAR- Laser Illuminating Detection And Ranging)

   வாகனத்தின் அடிப்பகுத்தியிலும் பக்கவாட்டிலும் பல சக்திவாய்ந்த வீடியோ கேமராக்கள் உள்ளன. அவை காரினுள் இருக்கும் செயற்கை நுண்ணறிவு(Artificial intelligence) கணிப்பொறிக்குத் தகவல்களை அளிக்கின்றன.

    இன்றைக்கு நிகழும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளே முக்கியக் காரணம் என்றும், தானியங்கி வாகனங்கள் புழக்கத்திற்கு வந்தால் மனித உயிர்கள் பறிபோகா என்றும் ஓர் ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

    இந்தக் கார்கள் பரவலாக நடைமுறைக்கு வந்தால் பல்லாயிரக்கணக்கான ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் வினாக்குறி ஆகிவிடுமே என்னும் எதிர்ப்புக் குரலும் ஒருபுறம் ஒலிக்கத்தான் செய்கிறது. கணிப்பொறிகள் அறிமுகமானபோது ஒரு கணினி ஒன்பது பேர்களுடைய வேலைக்கு வேட்டு வைத்துவிடும் என்னும் எதிர்ப்புக்குரல் எழுந்தது; காலப்போக்கில் கணினி  இல்லாமல் வாழமுடியாது என எதிர்த்தவர்களே ஒத்துக்கொண்டார்கள்.

    நமது நாட்டுச் சாலைகளில் இத்தகைய தானியங்கி வாகனங்கள் இயங்கும் காலம் வருமா? வராது என்று உறுதியாகக் கூறுகிறார் மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி. ஆனால் காலம் எதையும் மாற்றும் வல்லமை கொண்டது. மாற்றம் ஒன்றுதான் மாறாது இருப்பது என்பர் அறிஞர். பொறுத்திருந்து பார்ப்போம்.

    ஒன்று மட்டும் உறுதி. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு  மனிதர்கள் கார் ஓட்டினார்கள் பேருந்து ஓட்டினார்கள் என்பதை யாரும் நம்பமாட்டார்கள்.
நம் நாட்டிலும்தான்.
.............................................

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

Wednesday 20 September 2017

கனடாவின் மறு பக்கம்

   என்னுடைய பயணக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாகப் படித்த எனது முன்னாள் மாணவர் ஒருவர், “கனடா என்ன உலகின் சொர்க்க பூமியா” என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

Saturday 16 September 2017

சிறுகதை

ஆவது பெண்ணாலே

   அந்த ஒரே பேருந்தைத் தவறவிட்ட இலக்கியா தனியாகத் தவித்துக் கொண்டிருந்தாள்.

என் காரை நிறுத்தி, “இலக்கியா வாம்மா... பின்னால் ஏறிக்கொள்” என்றேன்.

Wednesday 13 September 2017

இரவில் தூக்கம் பகலில் ஊக்கம்

  தனி மனித வருமானம் மிகுதியாக உள்ள நாடு கனடா. வசதி வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. இருந்தும் நூற்றுக்கு முப்பத்து மூன்று பேர்கள் இரவில் போதிய அளவுக்குத் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள். இப்படித் தவிப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாம். இப்படி ஒரு செய்தியை இன்றைய மெட்ரோ நியூஸ் நாளேட்டில் படித்ததும் என் சிந்தனைப் பறவைக்குச் சிறகுகள் முளைத்து விட்டன. இதன் விளைவுதான் இந்தப் பதிவு.

Thursday 7 September 2017

சளைக்காமல் சைக்கிள் ஓட்டும் நாடு

   
  உலகிலேயே மிக அதிகமானோர் சைக்கிள் ஓட்டும் நாடு நெதர்லாந்து. அங்கே ஐம்பது விழுக்காட்டினர் சைக்கிளில் செல்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது கனடா ஆகும். இங்கே நூறு பேரிடம் கேட்டால் நாற்பத்தைந்து பேர்கள் சைக்கிள் ஓட்டுவதாய்த் தெரிவிக்கிறார்கள்.

     நம் நாட்டில் நூற்றுக்குப் பத்துப் பேரிடமாவது சைக்கிள் இருக்குமா என்பது சந்தேகமே. நம் ஊரில் தொலைப்பேசி புழக்கத்திற்கு வந்தபின் உற்றார் உறவினர்க்குக் கடிதம் எழுதும் வழக்கம் மறைந்து விட்டது. தொலைக்காட்சி வந்ததும் புத்தகம் வாசிக்கும் வழக்கம் அருகிவிட்டது. டிவிஎஸ்50 வரத் தொடங்கியதும் சைக்கிள்கள் எல்லாம் பேரீச்சம்பழத்திற்குப் பண்டமாற்றம் செய்யப்பட்டன.

     இந்நிலைக்கு மாறாக, கனடா நாட்டில் ஆண்டுதோறும் சைக்கிள் ஓட்டுவோர் எண்ணிக்கை கூடுகிறது. இங்கே சைக்கிள் விற்பனை அமோகமாக உள்ளது. சைக்கிள் ஓட்டுவதில் மூன்று வகைப்பாடுகள் உள்ளன. விளையாட்டின் ஒரு பிரிவாக(Sports cycling), மன மகிழ்ச்சிக்காக(Recreational cycling), வேலை நிமித்தமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதாக(commuting cycling) என்று அமைத்திருக்கிறார்கள்.

     இங்கே எட்டு வயது சிறுமியும் எண்பது வயது பாட்டியும் சைக்கிளில் செல்வதைப் பார்க்கலாம். ஒரு பெரிய தொழிற்சாலையின் வாயிற்காப்பாளர் பணிக்குச் சைக்கிளில் செல்கிறார்; தலைமை அதிகாரியும் சைக்கிளில்தான் செல்கிறார்.

    
காரில் பயணிக்கும் சைக்கிள்கள்
குடும்பத்துடன் காரில் வெளியூர் செல்வோர் கூட தம் சைக்கிள்களை காரின் பின்பக்கத்தில் பிணைத்து எடுத்துச் செல்கிறார்கள். செல்லும் இடத்திலும் சைக்கிள் சவாரிதான். சுத்த சைக்கிள் பைத்தியமாக இருக்கிறார்கள்!

    பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்னும் சட்டம் இந் நாட்டில் உள்ளது. எனினும் அனைவருமே சைக்கிள் ஹெல்மெட் அணிந்துதான் சைக்கிள் ஓட்டுகிறார்கள். சைக்கிளில் முன்பக்க விளக்கும் பின்பக்க சிவப்பு விளக்கும் பொருத்தப்பட வேண்டும் என்பது சட்டமாகும். மீறினால் நானூறு டாலர் அதாவது இருபதாயிரம் ரூபாய் தண்டத்தொகை!

    இந்த நாட்டில் பொதுமக்கள் பரவலாக சைக்கிளைப் பயன்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

  
சைக்கிள் பாதை
சைக்கிள் ஓட்டுவது உடல் நலத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும்  நல்லது என்னும் விழிப்புணர்வு மக்களிடையே மிகுதியாக உள்ளது. சைக்கிள் ஓட்டிகளுக்குத் தனிக் குறுஞ்சாலைகள்(bicycle lanes) போடப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம்
24000 கிலோமீட்டர் சைக்கிள் சாலைகள் உள்ளன என்பதை யாராலும் நம்பமுடியாது. ஒட்டாவா ஒரு  சிறிய நகரம். இதில் 250 கிலோமீட்டர் சைக்கிள் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

   இந்த நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு தனிச் சாலையில் சைக்கிளில் செல்லமுடியும் என்பதைப் பெருமையுடன் சொல்கிறார்கள். சைக்கிள் சாலைகள் நெடுஞ்சாலைகளின் குறுக்கே செல்ல நேர்ந்தால் சுரங்கப்பாதை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். நகரச் சாலையின் ஒரு பகுதியை சைக்கிளில் செல்வோர்க்கு ஒதுக்கியுள்ளனர்.

    
நகரப் பேருந்தில் சைக்கிளும்....

சைக்கிள் காப்பகம், பழுது நீக்கு மையம்
அரசு சைக்கிள் ஓட்டிகளுக்கென ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்துகிறது. அதற்காக பெரும் நிதியை ஒதுக்குகிறது. நகரப் பேருந்துகளில் சைக்கிளை கட்டணமின்றி எடுத்துச் செல்லும் வசதியை(Cycle racks) ஏற்படுத்தியுள்ளது. எல்லாப் பேருந்து நிலையங்களிலும் சைக்கிள் நிறுத்தக வசதி(Cycle shelter) உள்ளது.  சைக்கிளில் ஏற்படும் பழுதை நீக்க அங்கே ஸ்பேனர், சைக்கிள் பம்ப் முதலியவை உள்ளன.

  
வாடகை சைக்கிள்
மேலும் சுற்றுலாத் தலங்களில் நாமே கடன் அட்டை மூலம் பணம் செலுத்தி சைக்கிள் எடுத்து ஓட்டும் வகையில் ஆளில்லா சைக்கிள் நிலையங்கள் உள்ளன.

    ஆங்காங்கே சைக்கிள் ஒட்டிகளுக்கான தன்னார்வ அமைப்புகள் அரசு நிதி உதவியுடன் செயல்படுகின்றன. ஒட்டாவா பைசைக்கிள் கிளப் என்னும் அமைப்பு பல்வேறு போட்டிகளையும் விழாக்களையும் சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த கிளப் செய்யும் ஏற்பாட்டில், வாரத்தில் ஒருநாள் விடுமுறை நாளில் ஐம்பது பேர் நூறு பேர் என்று குழுவாக சைக்கிள் சவாரி செய்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

    மராத்தான் ஓட்டப்பந்தயம் என்பதைப் போல சைக்கிளத்தான்(Cyclathan) போட்டிகளை நடத்துகிறார்கள். இந்த அமைப்பின் மூலமாக ஒருவர் ஒலிம்பிக் வரை சென்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

    நம் சென்னையிலும் இத்தகைய அமைப்பு(WCCG-West Chennai cycling Group) ஒன்று இருக்கிறது என்பது ஆறுதல் தரும் செய்தியாகும். இந்த அமைப்பு வரும் செப்டம்பர் பதினேழாம் நாளன்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் 110 கிலோமீட்டர் சைக்கிளத்தான் போட்டியை நடத்துகிறது. ஜெகன் சூரியா என்னும் இளைஞர் தன் சைக்கிளில் இன்று மதுரையை நோக்கித் தனி ஒருவராகப் புறப்படுகிறார். அவருக்கு முக நூலில் என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்த ஆர்வம் காட்டுத்தீ என ஊர்தோறும் பரவ வேண்டும். இரசிகர் மன்றங்களை மூடிவிட்டு இளைஞர் சைக்கிள் மன்றங்கள் தொடங்கப்பட வேண்டும்.

    நான்கு மாதங்கள் மட்டுமே சைக்கிள் ஓட்டுவதற்கான காலப்பருவ நிலையுள்ள கனடா நாட்டில் மக்கள் வரிந்து கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுகிறார்கள் என்றால், ஆண்டு முழுவதும் ஏற்றப் பருவநிலை உள்ள நாட்டில் பிறந்த நாம் சைக்கிளை ஓரம் கட்டிவிட்டோமே! இது நியாயமா?

  
எனதருமை சைக்கிள்
இப்படிக் கேட்பதற்கு எனக்குத் தார்மீக உரிமை உள்ளது. 1975 ஆம் ஆண்டு எனது முதல் மாத ஊதியத்தில் கோவை மாநகரில் சிட்டி சைக்கிள் மார்ட் என்னும் கடையில் வாங்கிய ரலே சைக்கிளை இன்னும் பராமரித்து ஓட்டிவருகிறேன்.

  தினமும் கொஞ்சதூரம் சைக்கிள் ஓட்டுவோருக்கு மூட்டு வலியே வராது என்கிறார்களே.

அதற்கு நானே சாட்சி.
..........................................................

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து

Monday 4 September 2017

அழகு அழகாய் ஆயிரம் தீவுகள்

   "ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு" என்று சிதம்பரம் ஜெயராமன் பாடினார். ஆயிரம் தீவுகளுக்குச் சென்றுவந்ததற்குப் பிறகு ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே ஆயிரம் தீவுகள்  அழகை நாம் காண்பதற்கு என்று குளிக்கும்போது பாடத் தொடங்கிவிட்டேன்.