Wednesday 24 February 2021

வானொலி வந்த வரலாறு

      “வானொலியைக் கண்டு பிடித்தவர் யார்?” என்று ஓர் ஆசிரியர் ஒரு பத்தாம் வகுப்பு மாணவனைக் கேட்டால் அவன் சொல்லும் விடை என்னவாக இருக்கும்?

    நீங்கள் நினைப்பது சரிதான். மார்க்கோனி என்றே சொல்வான். ஆசிரியரும் அருமை” எனப் பாராட்டுவார்.  தப்பான விடை சொன்ன மாணவனை  ஆசிரியர் பாராட்டுகிறாரே என்பது எனது வருத்தம்.

   ஆம். அவன் சொன்னது தவறான விடை என்பது இன்றளவும் பலருக்கும் தெரியாது.

   உண்மையில் வானொலியைக் கண்டுபிடித்தவர் சென்ற நூற்றாண்டில் கொல்கத்தாவில் வாழ்ந்த புகழ் பெற்ற அறிவியலாளர் ஜகதீஸ் சந்திர போஸ்.

Wednesday 17 February 2021

பார்த்தோம் பனிப் புயலை

    இப்போது அமெரிக்காவைக் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இரவு நேர வெப்ப நிலை குறைந்து விட்டதாக என் மகள் சொல்கிறாள்.

   நேற்று வீசிய Appetizer எனப் பெயரிடப்பட்ட பனிப்புயலில் நாங்கள் வசிக்கும் டெக்சாஸ் மாநிலம் கதி கலங்கிவிட்டது. மாநில ஆளுநரின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர நிலைப் பிரகடனம் செய்தார். நிலைமையைச் சமாளிக்க கூடுதல் நிதி. இராணுவ உதவி என்று உதவிக்கரம் நீட்டியுள்ளார். இரயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. கல்விக் கூடங்கள், அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.

Thursday 4 February 2021

உனக்கு மிக நல்லதடி பாப்பா!

 

சாலை விதிகளைப் பாப்பா நீ

சரியாக அறியவேணும் பாப்பா!

ஓடி ஆடும் பிள்ளைகள் வாகனம்

ஓட்டுதல் கூடாது பாப்பா!

 

பதினெட்டு வயதைத் தாண்டி- ஓட்டப்

பழகிட  வேண்டும்  பாப்பா!

உரிமம் இல்லாமல் பாப்பா ஓட்ட

உரிமை இல்லையடி பாப்பா!

 

தலைக்கவசம் இல்லாமல் ஓட்டல் பெரும்

தவறாகும் அறிந்திடு பாப்பா!

இடது புறமாக மட்டும் வாகனம்

இயக்கப் படவேணும் பாப்பா!

 

சீறிப் பாய்ந்திடத் தூண்டும் ஆனால்

சிக்னலை மதித்திட வேண்டும்!

சிக்னலை மதிக்காத போது உடல்

சிதறிப் போனாலும் போகும்!

 

வேகம் மிகக்கெடுதல் பாப்பா உனக்கு

விவேகம் வேணுமடி பாப்பா!

முன்னால் போகும் வாகனம் அதை

முறையாக முந்தோணும் பாப்பா!

 

இடப்பக்கம் முந்திநீ சென்றால் அது

இன்னலைத் தருமடி பாப்பா!

வலப்பக்கம் முந்திட வேண்டும் நல்ல

வழியாகக் கொண்டிடு பாப்பா!

 

வாகன இடைவெளி முக்கியம் இன்றேல்

வம்பில் மாட்டுவாய் சத்தியம்!

இருபது மீட்டர் இடைவெளி – என்றும்

இருப்பது நல்லதடி பாப்பா!

 

வலப்பக்கம் வாகனம் திருப்ப சில

வழிமுறை உள்ளதடி பாப்பா!

வலக்கையை உயர்த்திக் காட்டு உரிய

விளக்கையும் போட்டுக் காட்டு!

 

கண்ட இடங்களில் வண்டியை நீ

கண்டிப்பாய்  நிறுத்தாதே பாப்பா!

உரிய இடத்திலே நிறுத்து அது

உனக்குமிக  நல்லதடி பாப்பா!

   -கவிஞர் இனியன், கரூர்.