Sunday 31 December 2023

சொல்லுதல் யார்க்கும் எளிது

    2023 ஆம் ஆண்டு இன்று நிறைவடைகிறது. திரும்பிப் பார்க்கிறேன். நான் ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கிறேனா?

Thursday 16 November 2023

பொறுத்தார் பூமி ஆளுவார்

   பூமியை ஆளுவது ஒருபுறம் இருக்கட்டும். நம் சொந்த உறவுகளை ஆளுவதற்கே பொறுமை எனும் பண்பு மிகுதியும் தேவைப்படுகிறது. பொறுமை என்பதற்கு இணையான இன்னொரு சொல் சகிப்புத்தன்மை.

Monday 6 November 2023

கவரிமானா? கவரிமாவா?

 கவரிமா என்பது மான் இனம் அன்று, அதன் உண்மையான பெயர் கவரிமா..

இமயமலையில் வாழும் மாட்டு வகையைச் சார்ந்தது. அதுவும் எருமை மாட்டு வகையைச் சார்ந்ததாகும். 

இதையே நம்மில் பலர் கவரிமான் என்று குழப்பிக் கொள்கிறார்கள்.

Sunday 5 November 2023

கற்றும் கவியுள்ளம் காணார்

  படிப்பு வாசனை அவ்வளவாக இல்லாத மாமனிதர் என்னுடைய அப்பா. அவர் விவசாய வேலைகள் இல்லாத சமயத்தில், அந்தக் காலத்து பெரிய எழுத்து இராமாயண நூலை வாய்விட்டுப் படித்ததைப் பார்த்திருக்கிறேன். போக்குவரத்து வசதி இல்லாத ஐம்பது அறுபதுகளில் குடும்பத்துடன் திருப்பதி சென்று வந்துள்ளார். இராம கதையில் மனம் ஈடுபட்டதாலோ என்னவோ எங்களுக்குப் பெருமாள், கிருஷ்ணன், கோவிந்தராஜூ எனப் பெயர்கள் வைத்தார்.

Tuesday 24 October 2023

நாமக்கல் என்னும் நலம் தரும் சொல்

    உள்ளத்திற்கு வலிமை தரும் கவிதைகளைப் படைத்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் வாழ்ந்த ஊர் நாமக்கல். உடலுக்கு வலிமை தரும் முட்டைகளை உற்பத்தி செய்யும் ஊரும் நாமக்கல்தான். எனவேதான் நலம் தரும் சொல் எனக் குறிப்பிட்டேன்.

Tuesday 3 October 2023

எஸ்ராவிடம் அடைந்த ஏமாற்றம்

    தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்பு நூல்களைப் அவ்வப்போது படிப்பதுண்டு. அண்மையில் படித்து முடித்த ஒரு நூல் 505 பக்கங்கள் கொண்ட தமிழ் மொழிபெயர்ப்பு நாவல். ‘வீரம் விளைந்ததுஎன்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர் நாடறிந்த நல்ல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்.

Saturday 26 August 2023

பாம்பு நடத்திய பாடம்

   எங்கள் வீட்டையொட்டி ஒரு சிறிய தோட்டம். அதில் செடி, கொடி, மரங்கள் அதிகம். பூச்சி பொட்டுகள் தங்கும் வகையில் குப்பைக் கூளங்களைக் குவித்துப் போட்டு வைப்பதில்லை. அப்படியிருந்தும் நேற்று ஒரு பாம்பு வீட்டிற்கே வந்து, துண்டைக் காயப்போட வெளியில் வந்த என்னைப் பார்க்க, நான் அதைப் பார்க்க ஒரு கணம் திகைத்து நின்றேன்.

Thursday 3 August 2023

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

   மனிதருக்குத் துன்பம் எந்த வடிவில் எங்கிருந்து எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாராஎன்னும் கணியன் பூங்குன்றனாரின் கூற்று இந்தக் காலத்துக்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன். பிறர் தர நன்று வருகிறதோ இல்லையோ தீது வருகிறது.

Sunday 30 July 2023

முன்னேர் ஆன முத்துலட்சுமி ரெட்டி

                         பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை 

   பெண் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவது பெரும்பாவம் எனப் பெற்றோர் கருதிய காலம் அது. பத்து வயது முடிவதற்குள் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும். பகலில் வக்கணையாய் சமைத்துப் போட்டுக் கணவனின் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதும், இரவில் அவன் விரும்பும் போதெல்லாம் காமப்பசியைத் தீர்ப்பதும், ஆண்டு தோறும் குழந்தை பெற்றுத் தருவதும் அவளது வேலை என்றிருந்த காலக்கட்டம் அது.

Saturday 29 July 2023

நயவுரை நம்பியிடம் நாலடியார் படும் பாடு

    சில பேர் எழுதிய நூல்களை வாங்க நேர்ந்தாலும் அவற்றைப் படித்தல் கூடாது என்னும் முடிவுக்கு இப்போது நான் வந்துள்ளேன். படித்தால் அவர்மீது வைத்துள்ள மதிப்புச் சரிந்து விடுமோ என்னும் தயக்கம்தான் அதற்குக் காரணம்.


  டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் என்பவர் அனைவரும் அறிந்த அரசியல்வாதி. அவர் ஓர் இலக்கியவாதியும் கூட. நிறைய நூல்களுக்கு உரை எழுதி நயவுரை நம்பி என்னும் பட்டம் கூட வாங்கியுள்ளார். அதை மிகுந்த அடக்கத்துடன் தன் பெயருக்கு முன் போட்டுக்கொள்கிறார்.

   ‘நயவுரை நம்பி’ என்னும் அடைமொழிக்கேற்ப அவரது உரை அமைய வில்லையே என்பதுதான் என் வருத்தம். . யானைக்கும் அடி சறுக்கியதோ?

 கரூர் புத்தகத் திருவிழாவில் நாலடியார் என்னும் தலைப்பிட்ட நூலை வாங்கினேன். அது நயவுரை நம்பியின் நூல். இவரே நாலடியாரின் நூலாசிரியர் என்பது போல் முன்னட்டையின் வடிவமைப்பு  உள்ளது. இன்னும் இருநூறு ஆண்டுகள் சென்றால் நாலடியாரை எழுதியவர்கள் சமண முனிவர்கள் என்பது போய் நயவுரை நம்பி என்பார் எழுதியது  என்னும் குறிப்பு தமிழ்ப் பாடத் திட்டத்தில் இருக்கும்! அட்டையில் நாலடியார் உரை என இருந்திருக்க வேண்டும். இல்லையே.

  இது போகட்டும்.

269 ஆவது பாடலுக்கு இவர் எழுதியுள்ள உரையைப் படித்து அதிர்ந்து போனேன். அதிர்ச்சியில் சற்றே உறைந்து போனேன். பாடல் இது:

பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட

மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்றுகுக்கும்

வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்

வண்மையும் அன்ன தகைத்து.   (நாலடியார்:269)

 

இப் பாடலுக்கு என்ன பொருள்? 

 வயலில் வளர்ந்து நிற்கும் செந்நெல் பயிர்கள் கதிர் வாங்கும் நிலையில் உள்ளன. அப்போது ஒரு மழை பெய்தால் கரு முற்றி நெல்லாகும்; மழை பெய்யாவிட்டால் பதர் ஆகும். வானம் மின்னுகிறது; மேகங்கள் சூழ்கின்றன. ஆனால் வாடிய நெல்லுக்குப் பெய்யாமல் கடலில் கொட்டித் தீர்க்கிறது. அப்படித்தான் அறிவிலாதார் செய்யும் கொடையும் அமையும். வறியார்க்குக் கொடுக்காமல் தன் விளம்பரத்துக்காக வளமுடையார்க்கே வழங்குவர்.

 

இப்போது நயவுரை நம்பியின் உரையைப் பார்ப்போம். 

  தங்கத்தின் நிறத்தைப் போல நிறம் கொண்டது நெற்கதிர்கள். அவை வயல்வெளிகளில் காற்றுகளில் ஆடிக் கொண்டிருக்கிறது. வானத்தில் மின்னலோடு கூடிய மேகம் கடலில் உள்ள நீரை எடுத்து வந்து வயல் வெளியில் மழையாகக் கொடுக்கின்றது. அந்த மேகத்தைப் போல் விளங்காமல் கெட்டறிவு உடையவர்கள் மேன்மையுடைய செல்வத்தை தாங்கள் மட்டும் அனுபவித்து பிறருக்கு இரக்கம் காட்ட மறுக்கிறார்கள். 

இப் பத்தியில்  ஆறு பிழைகள் பலவகையாய் உள்ளன. போனால் போகிறது என விட்டாலும் கருத்துப் பிழையன்றோ நம் கழுத்தை நெரிக்கின்றது. 

நூலின் பெரும்பகுதி இந்த அழகில்தான் உள்ளது. மூலப் பாடல்களில் உள்ள பிழைகளுக்கும் பஞ்சமில்லை. 

சில கார் கம்பெனிகள் உற்பத்திக் குறைபாடுள்ள கார்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும். அதுபோல் நயவுரை நம்பியும் இந்த நாலடியார் உரை நூலைத் திரும்பப் பெற வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

Thursday 6 July 2023

பைந்தமிழ் போற்றும் பண்டரிநாதன்

    சீன வானொலியில் தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் பண்டரிநாதன் ஈரோடு மாவட்டம் கோபிபாளையம் என்னும் சிற்றூரில் வேளாண் குடியில் பிறந்து, அங்கு சிறப்புடன் விளங்கும் தூய திரேசாள் தொடக்கப்பள்ளியில் பயின்றவர்; தொடர்ந்து கோபி வைரவிழா மேனிலைப்பள்ளியில் என்னிடத்தில் தமிழ் படித்தார். பின்னர் எம்.சி.ஏ பட்டம் பெற்றார்.

Monday 19 June 2023

கடையில் கிடைக்காத காஞ்சிபுரம் இட்லி

  இதுவரை பல நூல்களுக்கு நூல் மதிப்புரை எழுதியுள்ளேன். பல திரைப் படங்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளேன். ஆனால் இப்போது என் மனைவி சுட்ட புதுமையான  புதுவகையான இட்லிக்கு விமர்சனம் ஒன்றை எழுதுகிறேன்.

Wednesday 7 June 2023

தென்காசிச் சங்கமம்

  இடையிடையே அரசியல் வாடை வீசிய காசிச் சங்கமத்திற்குச் செல்லும் வாய்ப்பிருந்தும் நான் செல்லவில்லை. ஆனால் முழுக்க முழுக்க இலக்கிய வாடை வீசும் தென்காசிச் சங்கமத்திற்கு, வள்ளுவர் குரல் குடும்ப நிறுவுநர் திருமிகு சின்னசாமி இராஜேந்திரன் அவர்களின் அழைப்பை ஏற்றுச் சென்று, இரண்டுநாள் தங்கி, திருக்குறள் சான்றோர் பெருமக்களைக் கண்டு, அவர்தம் சொற்பொழிவைக் கேட்டு, ஓர் அமர்வில் ‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’ எனும் தலைப்பில் உரையாற்றி, விழாக் குழுவினர் அளித்த அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்த பசுமையான நினைவுகள் என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.

Thursday 13 April 2023

நீயே முளைப்பாய்

      கவிதா ஜவகர் என்னும் பெண்மணி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பட்டிமன்ற மேடைகளில் பாங்குறப் பேசி வருகின்றார். வெண்கல மணி விட்டு விட்டு ஒலிப்பது போன்று தன் கணீர்க்குரலில் பேசிக் கேட்போரை நொடிப்பொழுதில் தன்பால் ஈர்க்கும் வல்லமை படைத்தவராய் விளங்குகின்றார். அதேபோல் தனிச்சொற்பொழிவிலும் தனி முத்திரை பதிக்கின்றார்.

   இவர் எழுதிய கவிதை நூலை வெளியிடவும், அந்நூலைத் திறனாய்வு செய்யவும் என் நூலக நண்பர் சிவக்குமார் என்னை அழைத்தார். கரும்பு தின்னக் கசக்குமா? உடனே அப் பணியை ஏற்றுக் கொண்டேன். 



 

 பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன் இட்ட புனைபெயருடன் தன் பெயரையும் சேர்த்து ‘கரிசல்காரி கவிதா ஜவகர்’ என்னும் பெயரில் தன் முதல் கவிதை நூலைப் படைத்துள்ளார். ‘கரிசல்காரி கவிதா ஜவகரின் முதல் நூல்’ என அவர் குறிப்பிட்டாலும் அப்படி  எண்ணத் தோன்றவில்லை! சொல்லவரும் செய்திகளைச் சொல்லும் விதத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. 

இது மழையில் நனைந்த நூல் என்று சொல்லும் அளவுக்கு பல கவிதைகளில் மழை பொழிகின்றது. ஓரிரு எடுத்துக்காட்டுகள்:

 

 மழைகடவுளின் தழுவல்

 தேவதையின் முத்தம்

 அம்மாவின் அதட்டல்

 குழந்தையின் கருணை

 

மழை - பணக்காரர் வீட்டுத் தாழ்வாரத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும்

மத்திய வர்க்கத்தில் தங்கம்போல் சேமிக்கப்படும்

சேரியின் வீடுகளில் பிள்ளையெனச் செல்லம் கொஞ்சும்.

 

இவர் கவிதைகளில் கிண்டல் இருக்கிறது; கேலியும் இருக்கிறது. பின்வரும் கவிதையைப் படித்ததும் என்னை அறியாமல் உரக்கச் சிரித்தேன்.

 

  கோவிலுக்குள் நுழைந்தார் மந்திரி

  வெளிநடப்புச் செய்தார் கடவுள்!

 

 சங்க இலக்கியம் கற்ற புலவர்களில்

 பலர் அகம் பேசுவதை விடப்

 புறம் பேசுகிறார்கள்.

 

மனிதன் நாயினும் கீழானவன் எனக் கிண்டலடிக்கும் கவிதை இது:

 

நாய்கள் மனிதனைப் போலில்லை 

அவற்றிற்கு உள்ளொன்று வைத்துப்

புறமொன்று குரைக்கத் தெரியாது;

வாலாட்டி வாழுமேயன்றி

யாருக்கும் வால்பிடித்து வாழாது;

நாய் மனிதனின் தோழன்

ஆனால் மனிதன் யாருக்கும் தோழனில்லை.

 

மனித வாழ்க்கை முரண்பாடுகளுடன் பின்னிப் பிணைந்தது. இது குறித்த இந்தக் கவிதை என்னை வெகுவாய் ஈர்தத்து.

 

பள்ளியில் விட்டபோதும்

கல்லூரியில் சேர்த்தபோதும்

வேலை நிமித்தம் வெளிநாடு அனுப்பிய போதும்

திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே போன அம்மாவிற்குக்

கொள்ளிவைக்கும் தருணத்தில் வெட்டியார் சொன்னார்:

திரும்பிப் பார்க்காம போ என்று.

 

நீயே முளைப்பாய் எனும்  கவிதைத் தலைப்பே நூலுக்கும் தலைப்பாக அமைந்துள்ளது. சோகத்தின் உச்சம் தொட்ட கவிதை இது. ஈழப்போராளி பிரபாகரனின் குழந்தையைச் சிங்களர் சுட்டுக் கொன்றதை மூன்று பக்கக் கவிதையாய் வடித்துள்ளார். கண்ணீரை வரவழைக்கும் கவிதை!

 

 

மாறுபட்ட கோணத்தில் ஒரு காதல் கவிதையைக் கண்ணுற்றேன். அது இது:

 

கதவைத் தட்டினேன் நான் 

ஜன்னலைத் திறந்தாய் நீ.

 

கொஞ்சம் அரசியல் வாடையும் வீசுகிறது. பதச் சோறாக ஒன்று.

 

 தண்ணீர் வராத குழாயடியிலும்

 காத்திருக்கும் காலிக்குடங்களைப்போல

 வாக்குச் சாவடியில் வரிசையாய் மக்கள்.

 

நூலைப் படித்து முடித்தவுடன் எடுத்துச் செல்ல வேண்டிய செய்தியாக நான் பார்த்த நல்ல கவிதை இது:

 

 தன்னை வெளிக்காட்டும் அறிவைவிட

 பிறருக்காய் வெளிப்படும் அன்பு புனிதமானது.

 

சமுதாயத்தைக் கூர்ந்து காணும் திறமையும், அவ்வாறு காண்பதைக் கவிதையாக்கும் கைவண்ணமும் வாய்க்கப்பெற்ற கவிதா ஜவகர் இன்னும் பல கவிதை நூல்களைப் படைக்க வேண்டும் என விழைகிறேன்.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ

தேசிய விருதாளர்.

 

நூல் குறித்த விவரம்: நீயே முளைப்பாய்/ 108 பக்கம்/ 100 ரூபாய்/ படைப்பு பதிப்பகம்- 94893 75575

 

Sunday 5 March 2023

முயன்று பெறுவதே முனைவர் பட்டம்

    முயன்று பெறுவதே முனைவர் பட்டம். ஆனால், இன்றைக்குப் பலரும் எந்த முயற்சியும் இன்றி ஆசையின் காரணமாகக் குறுக்கு வழியில் சென்று டாக்டர் பட்டம் ஒன்றை விலை கொடுத்து வாங்கித் தம் பெயருக்குமுன் போட்டுக் கொள்ளும் வியத்தகு போக்கு அதிகரித்து வருகிறது.

Saturday 21 January 2023

எந்நாளோ என்னும் ஏக்கம்

     இன்று பலரும் போகிற போக்கில்சாதிகள் ஒழியட்டும் மதங்கள் தொலையட்டும்எனச் சொல்லிச் செல்வதைப் பார்க்கிறோம். சாதி மத வேற்றுமைகள் ஒழிந்தால்தான் ஒற்றுமை ஏற்படும் என்று சிலர் ஓயாமல் ஓலமிடுவதும் நம் காதில் விழுகிறது.

Friday 6 January 2023

சிறப்பாகப் பாடிய சிக்கில் குருச்சரண்

    பொதுவாகவே எனக்குச் செவ்வியல் இசையில் கொஞ்சம் நாட்டம் உண்டு. அதற்குக் காரணம் இருவர். ஒருவர் என் தமையனார் பேராசிரியர் பெருமாள். அவருக்குச் செவ்வியல் இசை கேட்பது பிடிக்கும். அது குறித்து நல்ல விமரிசனமும் செய்வார். அவருடன் சில காலம் இருந்ததால் அந்த ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டது.