Tuesday 9 April 2024

வாக்காளர் விழிப்புணர்வு வெண்பா

     வாக்காளர் விழிப்புணர்வு பெறும் வகையில் என் பங்குக்கு என்ன செய்யலாம் என யோசித்தேன். ஒவ்வொரு நாளும் ஒரு வெண்பா எனப் பத்து வெண்பாக்களை எழுதி புலன வழியே வெளியிட்டேன். நல்ல வரவேற்பு இருந்தது. அவற்றை இப்போது வலைப்பூ வாசகரிடையே பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 

 


ஓயாது பொய்பேசி ஓங்கி முழக்கமிட்டு

வாயால் வடைசுடும் வேட்பாளர் யாரென்று

முற்பகலில் பாராதார் பிற்பகலில் தாம்வருந்திப்

பற்பல துன்பமடை வார்.    1 

      

நில்லார் அறவழி நித்தமும் பொய்யுரைப்பார்

வல்லார் வளங்குவிக்க; வாழ்வார் வளமனையில்

நல்லவர் போல நடிப்பார்; புறந்தள்ளி

நல்லதோர் ஆட்சியை நாடு.    2     

  

கொள்ளை யடித்ததில் கொஞ்சம் கொடுத்தவர்

பிள்ளை மகிழ்ந்திட பீடல்ல செய்தவர்

கள்ளச் சிரிப்புடன் கைகூப்பி வந்திடுவார்

எள்ளி நகையா(டு) இகழ்ந்து.     3

  

நாக்கிலே தேன்தடவி நம்முன்னே நிற்பார்கள்

வாக்கை விலைகூறி வந்திங்கே விற்பார்கள்

வஞ்ச மனத்தார்க்கு வாக்கை அளிக்காதீர்

நெஞ்சிலே கொள்வீர் நினைந்து.   4

 

புலித்தோலைப் போர்த்திப் புலம்பயிர் மேயும்

பசுவென எங்கும் பவனி வருகின்ற

கூடா ஒழுக்கத்தைக் கொண்டவர் வந்தால்

போடா எனச்சொல்லிப் போ.     5

 

தந்தை பெரியார் தனிக்கொள்கை தன்மானம்

சிந்தையில் கொள்க; சிலபேர் தருகின்ற

காசுக்கு வாக்கைக் கொடுக்காதே; காசுபணம்

தூசுக்கு நேர்என்று சொல்.      6

 

நல்லவர் யாரேனும் நின்றால் அவர்பொருட்டுச்

செல்லுக வாக்கைச் செலுத்திடவே - நல்ல

குடிமகன் என்னும் குறையாச் சிறப்பில்

துடிப்போடு வாக்களிக்கச் செல்.     7

 

எரிகிற கொள்ளியில் எக்கொள்ளி நல்லகொள்ளி

என்றொரு சிந்தனை யார்க்கும் இருந்திடும்

நாட்டம் இலையெனில் நம்பி அளித்திட

நோட்டாவில் போடுக ஓட்டு.    8

 

கண்டு குறைகேட்(டு) உதவிகள் செய்யாதார்

அண்ணா என்றழைத்(து) ஆதரவைக் கேட்பார்

விழுந்தாலும் காலில் விலக்குக; அன்னார்

கழுத்துச் சுருக்கென்று காண்.   9

 

அரிதாய்க் கிடைத்த அமுதம் இதனைப்

புரிதல் இலாமல் புவிதனில் சிந்தல்

சரியோ உரைப்பாய்; தகுதி யறிந்தே

உரிமை தருவாய் உணர்ந்து.   10

 

   -முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்

7 comments:

  1. அருமை ஐயா. 1992 க்கு பின் உங்களது குரலை, பாடல் உரைக்கும் திறனை நினைவு கூர்ந்து மகிழ்ந்து நெகிழ்கிறேன்

    சிவமுருகன்
    மொழிப் பயிலகம்
    கோபிசெட்டிபாளையம்

    ReplyDelete
  2. அறிவுறுத்தும் நல் லறிவுப் பாக்களை
    செறிவுடன் அன்றாடம் செழுமையாய் அனுப்பி ,நல்
    தேர்வின் வழிநாம் தேர்ந்து வாழ
    தேவையான செய்திகளைத் தந்தீரே.

    ReplyDelete
  3. எளிமையும் நேர்மையும் நம்மிடை வருங்கால்
    எந்தை காந்தி இன்றை வருவாரே.
    வரப்புயர நீர் உயரும் நம்
    அறிவுயர தேர்வின் தரமுயரும் .

    ReplyDelete