Saturday, 30 November 2024

தண்ணீரில் செதுக்கிய சிலைகள்

     நாம் கல்லில் சிலைவடித்தால் அமெரிக்கர் தண்ணீரில் சிலை வடிக்கின்றனர். தண்ணீரில் சிலை வடிக்க இயலுமா? இயலும் எனச் சொல்லி சாதித்துக் காட்டியுள்ளனர். ஒரு சிலையா இரு சிலையா நூறு சிலைகளை வடித்துக் கண்காட்சியாகக் காட்டிவிட்டனர்.

     Gaylord Texon Resort என்பது அந்த இடத்தின் பெயர். வடக்கு டெக்சாஸ் மாநிலம் டெல்லாஸில் உள்ளது. ஆளுக்கு இருபத்து ஐந்து டாலர் கட்டணம். நுழைவாயிலில் நின்ற ஒருவர் ஒரு சிறப்பு அங்கியைத் தந்து அணியுமாறு சொன்னார். அது Parka எனப்படும் அதிகக் குளிரைத் தாங்கும் சிறப்பு உடை. ஷூ அணியாமல் யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை. நல்ல வேளையாக நாங்கள் ஆண், பெண், குழந்தை உட்பட அனைவரும் ஷூ அணிந்து சென்றோம். கதவைத் திறந்து நடந்தால் வழி தவறி வடதுருவத்திற்கு வந்தது போல குளிர் நிலவியது. அந்தப் பாதை சரிவாகச் சென்றது; அது ஒரு பாதாள அறையை நோக்கிச் சென்றது. நடக்க முடியாமல் போகுமோ என அஞ்சும் அளவிற்கு உடல் குளிரால் விறைத்தது.

     அங்கே இருந்தவரிடம் வெப்பநிலை என்னவென்று கேட்டேன். ‘எட்டு டிகிரி ஃபாரன்ஹீட்’ என்றார். நான் அடிப்படையில் ஓர் இயற்பியல் பட்டதாரி என்பதால், ஒரு மனக்கணக்குப் போட்டுப் பார்த்தேன்; அது மைனஸ் பதின்மூன்று டிகிரி சென்டிகிரேட்!

    சுழியன் டிகிரி சென்டிகிரேட் என்றாலே தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்துவிடும். மைனஸ் பதின்மூன்று டிகிரி என்றால் கேட்கவா வேண்டும்? இப்போதுதான் புரிந்தது இவர்களால் தண்ணீரில் எவ்வாறு சிலை செதுக்க முடிகிறது என்று.

     பனிக்கட்டிகளில் கண்ணைக் கவரும் வகையில் வண்ணச் சிலைகளை வடித்து வைத்திருந்தனர். ஆனால் அங்கு நிலவிய கடுங்குளிரில் நின்று நிதானமாகப் பார்த்து மகிழ இயலவில்லை. காமிராவை எடுத்து என்னால் கிளிக் செய்ய முடியவில்லை. கையுறை அணியாமல் சென்றதால் விரல்களை இயக்க இயலவில்லை. எனது பயணக் கட்டுரைகளுக்காகக் காத்திருக்கும் வலைப்பூ வாசகர்களை ஏமாற்றக்கூடாது என்னும் எண்ணத்தில் ஒருவாறு சமாளித்துக் கொண்டு படம் எடுத்தேன்; பாதிக்குப் பாதியே தேறின.














  

                             A 30 sec. video
இந்தக் கொடுமையான குளிரிலும் அங்கே ஒரு கடை இருந்தது. அங்கும் சிலர் தேநீர் அருந்தியபடி நின்றனர்!

    என்னால் இருபது நிமிடங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது. விரைவாக -இல்லை இல்லை- விறைப்பாக வெளியேறினேன், அவர்கள் கொடுத்த அங்கியைத் கழற்றித் தந்துவிட்டுப் போதுமடா சாமி என நினைத்துக்கொண்டு கார் நிறுத்தகத்தை நோக்கி நடந்தேன். ஆனாலும் ஏதோ ஒன்றைச் சாதித்த உணர்வும் உள்ளத்தில் தோன்றி மறைந்தது.

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

5 comments:

  1. தமிழன் கல்லிலே கலை வண்ணம் கண்டான். அமெரிக்கர் நீரில் கைவண்ணத்தை உருவாக்கியுள்ளனர். சில செய்திகள் கண்ணால் பார்ப்பதில் மகிழ்ச்சி. தாங்கள் வலைப்பூ இரசிகர்களுக்காக தான் கண்டு மகிழ்ந்த காட்சிகளை அனைவரும் படித்து கண்டு மகிழ செய்திகளைத் தருவது இரட்டிப்பு மகிழ்ச்சி. அருமையான காட்சிப்படுத்தல். நடுங்கும் குளிரிலும் கைகள் நடுங்காமல் படங்கள் எடுத்த நேர்த்தி மிகச் சிறப்பு. உங்களுடன் உங்கள் சம்பந்தியும் இருக்கின்றனர். அவர்களையும் நான் விசாரித்த தாக்கம் கூறுங்கள்.
    நன்றி. வணக்கம்.
    பேராசிரியர் ரா.லட்சுமணசிங்
    கரூர்

    ReplyDelete
  2. தி.முருகையன்30 November 2024 at 10:40

    அருமையான பகிர்வு ஐயா

    யான் பெற்ற இன்பம்
    பெறுக இவ்வையகம்
    என தாங்கள் செதுக்கிய
    பதிவு அருமை ஐயா.


    ReplyDelete
  3. ஒவ்வொரு இடத்திற்கும் எங்களை அழைத்துச் சென்று விடுகிறீர் ஐயா. எங்களுக்குச் செலவில்லாத பயணம். தாங்கள் 20 மணித்துளிகளில் வெளியே வந்துவிட்டீர்கள். ஆனால் என்னால் முடியவில்லை .எத்தனை அழகு! அதிலும் அந்த மான் சிற்பம்.....பேய் போன்ற சிற்பத்தில் முடிகள்கூட....
    கட்டுரையைப் படிக்கும் பொழுது இங்கு மழை பொழிந்து கொண்டிருந்தது. மெல்லிய குளிர்காற்று. என்னைச் சிற்ப அரங்கினுள் இழுத்துச் சென்றுவிட்டது. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  4. ஐயா வணக்கம். எங்களை அமெரிக்காவிற்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். அத்தனை சிற்பங்களும் மிக அருமையாக இருந்தன. எனது மகள் மிகவும் ரசித்துப் பார்த்தாள். புகைப்படங்களை மிகவும் அழகாக எடுத்து உள்ளீர்கள். பனிக்கட்டியில் சிற்பங்களை உருவாக்கிய அந்த கலைஞர் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர். மேடம் அவர்களை கேட்டதாக சொல்லுங்கள் ஐயா. மிக்க நன்றி🙏

    ReplyDelete